சென்னை, ஜூன் 7- ‘சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக, குவாரி ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டும்’ என்ற தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கல் குவாரி
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2012 மே 18இல் சுற்றறிக்கை பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள கல் குவாரி உரிமதாரர்கள், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என, 2015இல் அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், 2016 ஜன., 15 முதல் 2017 ஜன., 10 வரையிலான ஓராண்டு காலத்தில், குவாரிகளில் இருந்து வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, குவாரி உரிமம் பெற்றிருந்த சேலத்தை சேர்ந்த மாதவகண்ணன் உட்பட 82 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அரசு வழக்குரைஞர் ஸ்டாலின் அபிமன்யு, ஒன்றிய அரசு தரப்பில் வழக்குரைஞர்கள் வி.சந்திரசேகரன், வெங்கடசாமி பாபு, மூத்த வழக்குரைஞர் ஜெயகணேசன், சிறீனிவாசமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சட்ட விரோதம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது, ஒப்புதல் இல்லாமல் கல் குவாரி நடத்தியது சட்ட விரோதம். எனவே, வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இழப்பீட்டு தொகையை செலுத்தும்படி, அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதேநேரம், குவாரி உரிமதாரர்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள கட்டணத்தை கழித்து விட்டு, மீத தொகையை இழப்பீடாக செலுத்தலாம்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு, அரசு தனிப்பட்ட முறையில் மூன்று வாரங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் கடிதம் கிடைத்த இரண்டு மாதங்களில் இழப்பீட்டுத் தொகையை, மனுதாரர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.