அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி அழைப்பு பெற்றோருக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!

Viduthalai
2 Min Read

ஈரோடு, ஜூன் 3– அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக போனில் பேசி மோசடி நடப்பதால், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என ஈரோடு சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன்-ஜெயலட்சுமி இணையருக்கு 14 வயது மகள் உள்ளார். 2 நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமியின் அலைபேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், ‘கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாகவும், ஜெயலட்சுமியின் மகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும்’ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தான் அனுப்பும், ‘கியூஆர்’ கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயலட்சுமி ‘கியூஆர்’ கோடை ஸ்கேன் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சம் இணைய வழி மூலம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயலட்சுமி, தன் மகளுடன் ஈரோடு சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேலுமணி கூறியதாவது:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரசின் கல்வி உதவித்தொகை வந்து இருப்பதாக கூறி வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு பேசுபவர்கள், உதவித்தொகை பெற குறிப்பிட்ட தொகையை ஜிபே மூலமாக செலுத்தினால், பல லட்ச ரூபாய் உதவித் தொகை கிடைக்கும் என கூறுவர். அதனை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், அந்த நபர்கள் அனுப்பும் ‘கியூஆர்’ கோடுகளையும், லிங்குகளையும் பயன்படுத்தினால், உங்களது அலைபேசி ஹேக் செய்யப்பட்டு, உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் வாய்ப்பு ஏற்படும்.

கல்வி உதவித்தொகை என்பது பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரியின் முதல்வர் மூலம் மட்டுமே பெற முடியும். இதுபோன்ற நபர்களிடம் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உடனடியாக புகார் அளித்தால் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட பணம் அடுத்தடுத்து வங்கிக் கணக்குகளுக்கு செல்வதை தடுக்க முடியும்.

இதேபோன்று வேறு யாராவது உங்களை தொடர்பு கொண்டு எனது ‘ஜிபே’ வேலை செய்யவில்லை. அவசர தேவை எனக்கூறி அடையாளம் தெரியாதவர்கள் உங்கள் ‘ஜிபே’ எண்ணுக்கு பணம் அனுப்புகிறோம். அந்த தொகையை கையில் கொடுங்கள் என்றால் அவ்வாறு செய்ய வேண்டாம். ஏனெனில், அது சைபர்குற்றம் மூலம் பெறப்பட்ட பணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *