பார்ப்பனியம் – ஆட்சி செய்வதற்கும் மன்னனைக் கொல்வதற்கும் பார்ப்பனருக்குள்ள உரிமை (ப.ஆ ) பார்ப்பனியம் வெற்றிபெற்றபின் அது என்ன செய்தது என்ற கேள்வி இயல்பாக எழும். இந்தக் கேள்வியைத்தான் நான் இப்போது எடுத்துக்கொள்ளப்போகிறேன். வெற்றி கொண்ட பார்ப்பனியம் புரிந்த செயல்களை அல்லது தீச் செயல்களை ஏழு தலைப்புகளில் பட்டியலிடலாம். 1) ஆட்சி செய்வதற்கும் மன்னனைக் கொல்வதற்கும் பார்ப்பனருக்கு உரிமை உண்டு என்பதை அது நிலைநிறுத்தியது. 2) பார்ப்பனர்களைத் தனிச் சலுகைகள் பெற்றவர்களின் ஒரு வகுப்பாக அது ஆக்கியது. 3) வெவ்வேறு ஜாதிகளிடையே போராட்டங்களையும் சமூகப் பகை உணர்வையும் அது உருவாக்கியது. 5) அது. சூத்திரர்களையும் பெண்களையும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளியது. 6) படிநிலை ஏற்றத்தாழ்வு முறையை அது தோற்றுவித்தது. 7) மரபொழுங்குகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், நெளிவு சுளிவானதாகவும் இருந்த சமூக அமைப்பை மாற்றி சட்டத்துக்கு உட்பட்டதாகவும் கடுமையானதாகவும் செய்தது.
முதலாவதாகக் கூறியதை எடுத்துக்கொண்டு தொடங்கலாம்.
புசியமித்திரன் ஏற்படுத்திய புரட்சி பார்ப்பனர்களுக்கு முதலில் ஒரு இடர்ப்பாட்டை உண்டாக்கியது. மக்கள் இந்தப் புரட்சியை எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுமக்களின் மனத்தில் ஏற்பட்ட கோபத்தைக் கவி பாணா1 நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் புரட்சியைப் பற்றி அவர் குறிப்பிடுகையில் புசியமித்திரனை இழிபிறப்பாளன் என்று எள்ளியுரைப்பதுடன், அவன் மன்னனைக் கொன்ற செயல் அநாகரிகமானது, அதாவது ஆரியச் சட்டத்துக்கு முரணானது என்று கூறுகிறார். ஏனென்றால் புசியமித்திரனின் புரட்சி நடந்த காலத்தில் மூன்று கேள்விகளில் ஆரியச் சட்டம் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்த ஆரியச் சட்டம் கூறியதாவது:
- மன்னன் ஆவது சத்திரியர்களுக்கு மட்டுமே உள்ள உரிமை – பார்ப்பனர் ஒருபோதும் மன்னன் ஆக முடியாது.
- எந்தப் பார்ப்பனரும் ஆயுதம் ஏந்தும் தொழிலை மேற்கொள்ளக்கூடாது.2
- மன்னனின் அதிகாரத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்வது பாவம்.
புசியமித்திரன் கிளர்ச்சியை உருவாக்கியதன் மூலம் இந்த மூன்று சட்டங்களையும் மீறிய குற்றத்தைச் செய்தான். அவன் ஒரு பார்ப்பனனாக இருந்தபோதிலும் மன்னருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தான்; ஆயுதம் ஏந்தினான்; மன்னன் ஆனான். சட்டத்தை அப்பட்டமாக மீறி அவன் ஆட்சியைக் கைப்பற்றிய செயலை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. எனவே புசியமித்திரனின் செயல் சட்ட முறைக்கு உட்பட்டதுதான் என்பதை நிலைநாட்டவேண்டிய தேவை பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டது. சட்டத்தையே மாற்றியமைக்கும் துணிச்சலான செயல் மூலம் இதை அவர்கள் செய்தார்கள். சட்டம் இவ்வாறு மாற்றப்பட்டது என்பது மனு ஸ்மிருதியிலேயே தெளிவாகக் காணப்படுகிறது. இதைக் காட்டும் செய்யுள்களை இங்கு மேற்கோள் கொடுக்கிறேன்:
12:100. ”அரசின் படைத்தலைவராக இருப்பதற்கும் அரசாங்கத்துக்கே தலைவராயிருப்பதற்கும், அனைவர் மீதும் பேராதிக்கம் செலுத்துவதற்கும் பார்ப்பனருக்குத் தகுதி உண்டு.”
இங்கு சட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம், பார்ப்பனருக்கு படைத் தலைவராகும் உரிமையும், ஒரு நாட்டை வெல்லும் உரிமையும், மன்னராகவும் பேரரசராகவும் இருக்கும் உரிமையும் உண்டு என்று கூறுகிறது.
11:31. “சட்டங்களை நன்றாக அறிந்த பார்ப்பனர் தனக்குக் கொடிய தீங்கு எதுவும் செய்யப்பட்டால் அதைப் பற்றி அவர் மன்னனிடம் புகார் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், அவர் தனக்குத் தீங்கிழைப்பவர்களைத் தனது சொந்த அதிகாரத்தைக் கொண்டே தண்டிக்கலாம்”.
11:32.”அவருடைய (பார்ப்பனருடைய) சொந்த அதிகாரம் அவரையே சார்ந்தது; அது மன்னனின் அதிகாரத்தை விட பெரியது; ஏனென்றால் மன்னனின் அதிகாரம். மற்ற மனிதர்களைச் சார்ந்திருக்கிறது. எனவே ஒரு பார்ப்பனர் தன்னுடைய சொந்த வலுவா லேயே தனது எதிரிகளைப் பணியச் செய்ய முடியும்.”
11:261-62. “ஒரு பார்ப்பனர் மூன்று உலகங்களின் மக்களையும் கொன்றிருந்தால் கூட, ரிக், யஜுர் அல்லது சாம வேதத்தை உபநிடதங்களுடன் சேர்த்து மூன்று முறை ஓதினால் எல்லாப் பாவங்களிலுமிருந்தும் அவன் முற்றிலுமாக விடுதலை பெறுகிறான்.
“ஒரு பார்ப்பனர் மூன்று உலகங்களின் மக்களையும் கொன்றிருந்தால் கூட, ரிக், யஜுர் அல்லது சாம வேதத்தை உபநிடதங்களுடன் சேர்த்து மூன்று முறை ஓதினால் எல்லாப் பாவங்களிலுமிருந்தும் அவன் முற்றிலுமாக விடுதலை பெறுகிறான்.
இங்கே சட்டத்தில் இரண்டாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பனர் மன்னனைக் கொல்வதற்கு மட்டுமின்றி; தன்னுடைய அதிகாரத்துக்கும் பதவிக்கும் மனிதர்கள் தீங்கு செய்ய முயன்றால் அவர்களை மொத்தமாகப் படுகொலை செய்வதற்கும் இது அதிகாரமளிக்கிறது.
8:348. “ஒவ்வொருவருக்கும் தருமத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ள தொழில்களைச் செய்வதற்கு வன்முறை மூலம் தடை ஏற்பட்டால் இருபிறப்பாளர் ஆயுதம் ஏந்தலாம்; ஏதேனும் கெட்ட காலம் ஏற்பட்டு இருபிறப்பாளர் வகுப்புக்குப் பேரிடர் நேரும்போதும் ஆயுதமேந்தலாம்.”
9:320. “ஒரு சத்திரியர் (படையாளன் அல்லது மன்னன்) எப்போதும், பார்ப்பனர்களுக்கு எதிராகத் தனது ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், பார்ப்பனரே அவனைத் தண்டிக்கலாம்; ஏனென்றால் சத்திரியர் முதலில் பார்ப்பனரிடமிருந்தே தோன்றினான்.”
இது சட்டத்தில் செய்யப்பட்ட மூன்றாவது மாற்றமாகும். மன்னனை எதிர்த்து கிளர்ச்சி செய்வதற்கும் மன்னனைக் கொல்வதற்கும் இது உரிமையளிக்கிறது. புதிய சட்டம் மிக நுட்பமாகச் செய்யப்பட்டுள்ளது. மூன்று மேல் வகுப்புகளுக்குக் கிளர்ச்சி செய்யும் உரிமையை அது அளிக்கிறது. அதே நேரம் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியாகவும் இந்த உரிமை கொடுக்கப்படுகிறது. கிளர்ச்சி செய்வதில் சத்திரியர்களும் வைசியர்களும் சேரத் தயாராயில்லாத நிலை நேர்ந்தால் அந்த நேரத்தில் பயன்படக்கூடிய வகையில் இந்த உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சி செய்யும் உரிமை நன்கு வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு வருணங்களுக்கும் மனுவினால் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்களை மாற்றுகின்ற குற்றத்தை மன்னன் செய்தால் மட்டுமே இந்த உரிமையைப் பயன்படுத்தலாம்.
சட்டத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருந்தனவோ அந்த அளவுக்கு இன்றியமையாததாகவும் இருந்தன. புசியமித்திரன் கடைசி மவுரிய மன்னனைக் கொன்றதனால் ஏற்பட்ட நிலைமையைச் சட்டபூர்வமாக்குவதும் முறையானதாக்குவதும்தான் இவற்றின் நோக்கமாகும்.
இந்தச் சட்ட மாற்றங்களின் விளைவாக ஒரு பார்ப்பனர் சட்டப்படியே மன்னன் ஆகவும் சட்டப்படியே ஆயுதம் ஏந்தவும் நால்வருணத்துக்கு எதிராகவுள்ள மன்னனைச் சட்டப்படி பதவி நீக்கம் செய்யவும் அல்லது கொலை செய்யவும்,பார்ப்பனரின் அதிகாரத்தை எதிர்க்கும் எந்தக் குடிமகனையும் சட்டப்படி கொல்லவும் முடியும். பார்ப்பனர்கள் தங்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவைப்பட்டால் பார்தலோமேயு (Barthalomeu) செய்ததைப் போல செய்வதற்கும் மனு உரிமை அளித்தார்.
1 ஹர்ஷ சரித்திரம், ஸ்மித் (1924) மேற்கோள் காட்டியது. பக். 208.
2 இந்த விதி மிகவும் கடுமையாயிருந்தது. ஆபஸ்தம்ப தரும சூத்திரம் பின்வருமாறு கூறுகிறது: ‘ஒரு பார்ப்பனர் எந்த ஓர் ஆயுதத்தையும் பார்ப்பதற்குக் கூட கையில் எடுக்கக் கூடாது’ எனவே பார்ப்பனனான புசியமித்திரன் போர் புரிவசைத் தொழிலாகக் கொண்ட இனத்தைச் சேர்ந்தவன் மட்டுமே செய்யக்கூடிய ஒரு செயலை எப்படிச் செய்திருக்க முடியும் என்பது சிறிது வியப்பை ஏற்படுத்தலாம். இதற்கு ஹர பிரசாத் சாஸ்திரி சரியாக விளக்கம் அளிக்கிறார். சுங்கர்கள் பார்ப்பனர்களாயிருந்த போதிலும் அவர்கள் போர் புரிவதைத் தொழிலாகக் கொண்ட ஒரு குலம் என்று அவர் கூறுகிறார். போர் செய்யும் பார்ப்பனர்களில் விஸ்வாமித்திரர்கள், பரத்வாஜர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் புகழ்பெற்றிருந்தார்கள். விஸ்வாமித்திர பார்ப்பனரின் மனைவிக்குக் குழந்தை இல்லாமல் போனதால் பண்டைக்கால ‘நியோத’ வழக்கப்படி பரத்வாஜர் ஒருவர் விஸ்வாமித்திர பார்ப்பனருக்கு ஒரு புதல்வனைப் பெற்றுத்தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். அப்படிப் பிறந்த குழந்தைதான் சுங்கன். அந்த சுங்கன் ஒரு குலமரபுக்கு ஆதித்தந்தை ஆனான். அந்தக் குலமரபினர் சாம வேதத்தைக் கற்றார்கள், சுங்கர்களின் குலமரபு த்வயமுஷ்யம் குலமரபு; அதாவது, விஸ்வாமித்திர, பரத்வாஜ என்ற குலமரபுகளிலிருந்து தோன்றிய குலமரபு அது. இந்த இரண்டு குலமரபுகளுமே படைத்தொழிலை மேற்கொண்டிருந்தன (பார்க்க: பவுத்த ஆராய்ச்சி (பதிப்பாளர் லா). இயல் 34, பக். 820.
– அண்ணல் அம்பேத்கர்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’ நூலிலிருந்து