இந்தூர், ஜூன் 1- இந்தியா உட்பட ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 1000+ கடந்துள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், கரோனா காரணமாக ஓரிரு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தூரில் உள்ள இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் கரோனா குறித்த நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
டெல்டா கரோனா
இந்த ஆய்வில் அவர்கள் டெல்டா கரோனா குறித்தே ஆய்வு நடத்தினர். இந்த டெல்டா வகை கரோனா காரணமாகவே நாட்டில் 2ஆவது அலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இது குறித்து இந்தூர் அய்.அய்.டி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் டெல்டா கரோனாவால் சைலண்ட் மாரடைப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி டெல்டா கரோனாவால் தைராய்ட் பாதிப்பும் ஏற்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கரோனா ஏற்படுத்தும் இதர உடல்நல சிக்கல்கள் குறித்தும் இதில் பல முக்கியமான பாயிண்டுகள் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை கரோனாவும் மனித உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிவதே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (அய்சிஎம்ஆர்) இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
அய்சிஎம்ஆர் விரிவான ஆய்வு
புரோட்டியோம் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் கரோனா குறித்த புரிதலை அதிகரிக்கிறது. மேலும், அதற்கு எந்த மாதிரியான சிகிச்சை சரியாக இருக்கும் என்பது குறித்தும் தெளிவான பிம்பத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக 3,134 நோயாளிகளின் தரவுகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.