வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
பாடம் 10
பிரச்சாரம்தான் முதல் வேலை
பொழுது போக்க நேரமில்லை பிரிஸ்பேனில் மார்ச் மாதம் 18 ஆம்தேதி காலையில்தான் ஆசிரியருக்கு நடைப்பயிற்சிக்கு நேரம் கிடைத்தது
நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் ஆற்றோரம் அமைந்திருந்த நடைபாதை மாசற்ற காற்று அமைதியான சூழல்.
ஆசிரியருடன் நான், கபிலன், அண்ணாமலை, மகிழ்நன், நந்தகுமார் ஆகியோர் நடக்கத் தொடங்கி னோம். அந்த நடைபாதையில் வரலாற்றுச் செய்திகள் பதிந்த கல்வெட்டுகளைப் போன்ற பலகைகள் வைக் கப்பட்டுள்ளன. அந்தப் புல்வெளியில் போர் நினைவுச் சின்னம் போன்ற ஒரு கல் தூண் நிறுவப்பட்டுள்ளது.
அதன் அடி பீடத்தில் பல்வேறு நாடுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து அது பற்றி உரையாடிக் கொண்டே நடந்தோம். அங்கங்கே நிழலில் அமர்வதற்காக போடப்பட்டுள்ள இருக்கைகளில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வு. பிறகு பேச்சும் நடையுமெனத் தொடர்ந்தோம்.
பிரிஸ்பேன் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவில் நாங்கள் பார்த்த அனைத்து நகரங்களிலும் காலை வேளையில் சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும், ஏராளமான மக்கள் நடை, ஓட்டம், குதியோட்டம் (Jogging) உடற்பயிற்சி என உடல்நலனைப் பேணும் நடவடிக்கைகளில் அன்றாடம் ஈடுபடுவதைப் பார்த்தோம். பிரிஸ்பேன் நடைபாதையில் பார்த்த இன்னொரு சிறப்பான ஏற்பாடு, அங்கங்கே குறிப்பிட்ட இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள். அந்தக் குழாயின் மேற்புறமாக மனிதர்கள் நீர் அருந்தவும், கீழ்ப்புறத்தில் நாய்கள் நீர் அருந்தவும் ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே குழாயில் மனிதர்கள் தண்ணீர் குடிப்பதற்கே ஜாதி வேறுபாடு பார்க்கும் திருந்தாத மனிதர்கள் நம் நாட்டில் இருப்பது நினைவிற்கு வந்தது.
மேலும் நாய்களோடு நடப்பவர்கள் எங்காவது அந்த நாய்கள் மலம் கழித்தால் அதனை தாங்களே சுத்தம் செய்து அகற்றுவதற்குத் தேவையான பைகள் மற்றும் சிறு கருவிகளை இடுப்பில் கட்டிக் கொண்டுவருவதையும் பார்த்தோம். இன்னும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பழக்கங்கள் நிறைய இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டேன்.
நடைக்குப் பின் அறைக்குத் திரும்பி தயாரானோம், கங்காருவைப் பார்ப்பதற்கு. ஆனால் அதற்கு முன்னால் ஒரு வானொலி நிகழ்ச்சிக்குப் பேட்டி வேண்டும் என்று கேட்டார் தோழர் நந்தகுமார். மறுபடியும் குவிஸ் போட்டியா என்று கேட்டு விட்டு ஆசிரியர் அவர்கள் நந்தகுமாரின் கேள்விகளுக்கு இருபது நிமிடம் பதிலளித்தார். என்னுடனும் ஒரு பேட்டி பதிவு செய்யப்பட்டது. அதை முடித்த பிறகு புறப்பட்டோம் ஆசிரியர் பார்க்க விரும்பிய கங்காருகள் இருக்கும் பூங்காவிற்கு. அதற்கு செல்லும் வழியில் ஒரு பெரிய விற்பனைக் கூடத்திற்கு தோழர்கள் அழைத்துச் சென்றார்கள். அங்கு ஏகப்பட்ட இரும்புத் தளவாடப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரிய பெரிய கடப்பாரைகளைப் பார்த்தவுடன் இது பிஜேபிக்கான பகுதி போல் இருக்கிறதே என்றார் ஆசிரியர். அவற்றைத் தாண்டி மண்வெட்டி,கத்தரிக்கோல், புல்வெட்டும் பெரிய கத்திகள் இருந்த பகுதியைப் பார்வையிட்டபோது “ இதற்கெல்லாம் ஆயுதபூஜை உண்டா?’ என்று ஆசிரியர் அவர்கள் கேட்டதை பதிவு செய்து தோழர்கள் வெளியிட அது சமூக ஊடகங்களில் ஆசிரியரின் தக்லைஃப் ( Thug life) வீடியோவாக வலம் வந்தது.
அழகான இயற்கைச் சூழலில் அமைந்த உயிரியல் பூங்காவில் மரங்களின் கிளைகளில் ஒட்டிக் கொண்டு இலைகளைக் கொறித்தபடி, அப்படியே தூங்கிப் போகும் கோலாக்கள் , கங்காருவைப் போலவே ஆஸ்திரேலியாவின் தனித்தன்மை வாய்ந்த விலங்கினம். அவற்றைத் தாண்டி பல வண்ணப் பறவைகள் பாதுகாப்பாகப் பறக்கவும் மகிழ்ந்திருக்கவும் அமைக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து விட்டு கங்காருகள் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். மரங்களின் நிழல்களில் படுத்துக் கொண்டிருக்கும் கங்காருகள் நம்மைப் பார்த்தவுடன் எழுந்து அருகில் வருகின்றன. அங்கே விற்கப்படும் உணவுப் பொட்டலங்களை தோழர்கள் வாங்கிவந்து எங்களிடம் கொடுத்தார்கள். ஆசிரியர் மகிழ்ச்சியுடன் அவற்றுக்கு உணவைக் கொடுத்தார். நானும் மற்ற தோழர்களும் அந்த கங்காருகளுக்கு உணவூட்டி மகிழ்ந்தோம்.
கங்காருகளுக்கு உணவு கொடுத்தபின்பு எங்களுக்கு உணவளிப்பதற்காகக் காத்திருந்த கவிஞர் இரவிச்சந்திரன் அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம். அவரும் அவரது இணையர் சாரதா அம்மையாரும் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்று வயிற்றுக்கு நல் உணவும் படிப்பதற்கு சிறந்த நூல்களையும் வழங்கினார்கள். கவிஞர் இரவிச்சந்திரன் அவர்களது வீடு புத்தகங்களின் வீடாக இருந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் புத்தகங்கள் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தன. அத்தனையும் படிக்கப்பட்ட புத்தகங்கள் என்பதுதான் சிறப்பு. சங்கராபுரத்திற்கு அருகில் உள்ள சவுந்தரவல்லி பாளையம் என்ற ஊரில் தொடங்கி பிரிஸ்பேனின் சிறைத்துறை அதிகாரியாக தற்போது நிலை கொண்டிருக்கும் இரவிச்சந்திரன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் புத்தகங்களின் துணையுடன்தான் நடந்திருக்கிறது. அதைப் பற்றிக் கேட்டபோது “அதற்கும் தந்தை பெரியார்தான் காரணம். நான் அய்யாவை எங்கள் ஊரான சவுந்தரவல்லிபாளையம் பொதுக்கூட்டத்தில் சந்தித்தபோது, கடவுள் மறுப்பு வாசகங்கள் அச்சிட்ட அட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை வாங்கி அய்யாவிடம் அந்த அட்டையில் கையெழுத்து போடுமாறு கேட்டேன். அப்போது அதில் கையெழுத்துப்போட்டு விட்டு அய்யா அவர்கள் ‘ இங்க விக்கிற புத்தகங்கள வாங்கிப் படிங்க, நிறைய புத்தகங்களப் படிங்க ,அப்பதான் எல்லாத்தையும் புரிஞ்சுகுவீங்க “ என்று சொன்னார். அந்த அறிவுரைதான் எனக்கு புத்தகங்களைப் படிக்கவும் சேமித்து வைக்கவுமான பழக்கத்தை ஏற்படுத்தியது. அன்று முதல்தான் புத்தகங்கள் வாங்கி சேமிக்கத் தொடங்கினேன்.’ என்று கூறினார் கவிஞர் இரவிச்சந்திரன். சாரதா அம்மையாரும் குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க செயல்பாடுகளில் பங்கேற்பவர். ஆசிரியரையும் என்னையும் விமான நிலையத்தில் வரவேற்றபோதும், பிரிஸ்பேன் கூட்டத்திலும் இருவரும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கினார்கள், மீண்டும் அவரது வீட்டிலும் புத்தகங்கள் வழங்கினார்கள். ஆசிரியர் அவர்கள் கவிஞர் இரவிச்சந்திரன் அவர்களுக்கும் சாரதா அம்மையாருக்கும் வாழ்த்து கூறி கையெழுத்திட்டு, தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? என்ற நூலை வழங்கினார். இனிமையான சந்திப்பிற்கு நன்றி கூறி விடை பெற்றோம்.
கொஞ்சநேர ஓய்வுக்குப் பின் இரவு உணவிற்கு மருத்துவர் கண்ணன் அவர்கள் தங்கள் இல்லத்திற்கு அழைத்திருந்தார். கண்ணன் அவர்கள் (மறைந்த)தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் மூத்த மகன். அய்யா அவ்வை நடராசன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகவும் பணியாற்றிய புகழ்பெற்ற தமிழறிஞர். தந்தை பெரியார் மீது மாறாத பற்றுக் கொண்டவர்.ஆசிரியர் அவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். அவ்வை நடராசன் அவர்களின் இணையர் (மறைந்த) மருத்துவர் தாரா அம்மையாரின் இயற்பெயர் இங்கர்சால். அவர் மருத்துவக் கல்வித் துறையின் இயக்குநராகப் பணியாற்றியவர். மற்றொரு மகன் அருள் அவர்கள் தற்போது தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். இளைய மகன் பரதன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவ்வை நடராசன் அய்யாவின் குடும்பத்தினர் திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். கண்ணன் அவர்கள் நரம்பியல் சிறப்பு மருத்துவர். தற்போது அவர் பணியாற்றுவது மூப்பியல் துறை. கண்ணன், அவரது இணயர் மருத்துவர் சாந்தி, மகள் தாரா நிகிதா மூவரும் எங்களை வரவேற்று பேரன்புடன் உணவைப் பரிமாறினர். குடும்பத்தினருடன் உரையாடும் உணர்வோடு ஆசிரியர் அவர்களுடன் கலந்துரையாடினார்.
கண்ணன் அவர்கள் இல்லத்தில் தோழர் சிவா கைலாசம் அவர்களை சந்தித்தோம். இரண்டு நாட்களாக அவர் ஆசிரியரை 4 EB என்ற வானொலிக்காக பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.நேரமின்மையால் கடைசியாக கண்ணன் அவர்கள் வீட்டிற்கு தோழர் முகுந்தராஜ் உடன் வந்து பேட்டியை பதிவு செய்தார். 4EB என்பது குயின்ஸ்லாந்து அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் வானொலி ஒலிபரப்பு நிறுவனமாகும். 26 மொழிகளில் ஒலிபரப்பாகும் அந்த வானொலியின் தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் தோழர் சிவா கைலாசம் சிறப்பான கேள்விகளைக் கேட்டு அந்தப் பேட்டியை பதிவு செய்தார்.
விருந்திற்குச் சென்ற இடத்திலும் பிரச்சாரப் பணி விடவில்லை. கண்ணன் ,சாந்தி,தாராவின் அன்பிற்கு நன்றி கூறி மீண்டும் அறைக்கு வந்து ஆசிரியர் உறங்கச் சென்றபோது ….. வழக்கம்போல மணி பதினொன்று. நாளை காலை கேன்பரா செல்ல வேண்டும். எத்தனை மணிக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுவிட்டு உறங்கச்சென்றார்ஆசிரியர்.
– தொடரும்