சென்னை, மே.23- கொலை-கொள்ளையை தடுக்க சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களை நாள்தோறும் வீடு தேடிச்சென்று காவல்துறையினர் உதவி வருகிறார்கள்.
கொலை-, கொள்ளை சம்பவங்கள்
தமிழ்நாட்டில் வயதான வாழ்விணையர் முதியவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை யடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டன்புதூரில் தோட் டத்து வீட்டில் வசித்து வந்த வயதான இணையர்கள் தெய்வசிகாமணி- அலமாத்தாள், அவரது மகன் செந்தில் குமார் ஆகிய 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த அதிர்ச்சி அடங்கு வதற்குள் கடந்த மே 1ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி என்ற கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான இணையர்கள் ராமசாமி (75), பாக்கியம்மாள் (65) ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த 2 கொடூர கொலை-கொள்ளை சம்பவத்தில், காலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளிகளாகவும், இரவில் கொலையாளிகளாகவும் வலம் வந்த 3 பேரை ஈரோடு மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். வயதானவர்களை குறி வைத்து அடுத்தடுத்து அரங்கேறிய இந்த கொலை-கொள்ளை சம்பவங்கள் பெற்றோரை பிரிந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
வயதானவர்கள் பாதுகாப்பில் கூடு தல் கவனம் செலுத்த வேண் டும் என்று மற்ற மாவட்ட காவல்துறையினருக்கு எச்சரிக்கையூட்டும் விதமாக அமைந்தது.
ஆணையர் அருண் அதிரடி உத்தரவு
‘வரும் முன் காப்போம்’ என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் சென்னை காவல் துறையில் முதியவர்கள் பாதுகாப்பு நலனை மய்யப்படுத்தி மூத்த குடிமக்கள் பாதுகாப்பு செயலி, 14567 மற்றும் 1800 180 1253 ஆகிய முதியவர் அவசர உதவி எண்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது சென்னை காவல்துறைய ஆணையர் அருண் உத்தரவின் பேரில் முதியவர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை மாவட்ட எல்லைக்குள் தனியாக வசிக்கும் மூதாட்டிகள், முதியவர்கள், வயதான இணையரின் விவரங்கள் அந்தந்த காவல் நிலையம் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தனியாக முதியவர்கள் வாழும் வீடுகளுக்கு நாள்தோறும் காவலர் ஒருவர் கட்டாயம் சென்று அவர் களுடைய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். தனியாகவசிக்கும் முதியவருக்கு மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய உதவி ஏதேனும் தேவையாக இருக்கிறதா? என்பதையும் காவலர்கேட்டறிய வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்களை ஆணையர் அருண் வழங்கி இருக்கிறார்.
அதன்பேரில் தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் தனியாக வசிக்கும் வயதானவர்களை காவல் துறையினர் அன்றாடம் சந்தித்து நலம் விசாரித்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.ரோந்து படை காவல்துறையின் இந்த பணியை செய்து வருகிறார்கள்.
பாதுகாப்பு
மனதில் பெற்ற பிள்ளைகளை நினைத்துக்கொண்டு வீட்டில் 4 சுவரை மட்டும் பார்த்துக்கொண்டு வாழும் முதியவர்களுக்கு காவல்துறையினர் அ்னறாடம் வீட்டுக்கு வந்துபேசி செல்வது அவர்களுக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் அமைந்துள்ளது.
சென்னையில் சமீப காலமாக முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது முதியவர்கள் தங்களது பாதுகாப்பின் பொருட்டு எந்த நேரத்தில் அழைத்தாலும் ஓடோடி சென்று காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றும், முதியவர்கள் வசிக்கும் வீடுகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்குகிறதா? என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.