தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

Viduthalai
2 Min Read

சென்னை, மே 16 போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் சேர்ந்து பயன்பெற தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

போட்டித் தேர்வு

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, அய்பிபிஎஸ், ஆர்ஆர்பி (TNPSC, SSC, IBPS, RRB) ஆகிய முகமைகள்  நடத்தும் போட்டித் தேர்வுகளில்  கலந்து கொள்ளும்  தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு  தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும்  போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணையில் உள்ள  சர் தியாகராயர் கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று,சேர்க்கை  நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாள்களில் நடைபெற உள்ளது.

ஆபாச இணையதளங்களை
தடை செய்க: திருமாவளவன்

ஆபாச இணையதளங்கள் பயன்படுத் துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். மேலும், பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு ஆபாச இணையதளங்களும் முக்கியமான காரணமாக உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என திருமாவளவன் குறிப்பிட்டார்.

ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது தமிழ்நாடு அரசு

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்து இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 4 ஆண்டுகளில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டு இருப்பதாகவும், இதனால் ரூ.10,27,547 கோடி முதலீடு வந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. அந்த ஒப்பந்தங்களால் தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், புதிதாக 32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

திருமணம் செய்ய
சிறந்த வயது இதுதான்!

நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் 18 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், திருமணம் செய்ய சராசரியாக 25.9 வயதே சரியானது என தெரியவந்துள்ளது. இதில், திருமணம் செய்ய அர்ஜென்டினா 28.9 வயதை குறிப்பிட்ட நிலையில், இந்தியர்கள் 22.7 வயதை குறிப்பிட்டுள்ளனர். மேலும், முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள சராசரியாக 26.1 வயதே சரியானது என்பதும் தெரியவந்துள்ளது.

சிந்து நதி நீர்..
இந்தியாவுக்கு பாக்., கோரிக்கை!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகள் இடையேயான தாக்குதல் முடிவுக்கு வந்தபோதும், சிந்து நதி நீர் திறக்கப்படமாட்டாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிந்து நதி நீரை திறக்குமாறு  பாகிஸ்தான்  நீர்வளத்துறை கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *