தனியார் பொருட்காட்சிக்கு வருவாய் துறை சான்றிதழ் கட்டாயம்

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, மே 15 தனியார்கள் நடத்தும் பொருட் காட்சிக்கு வருவாய்த் துறையின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான கடிதத்தை செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

தனியார்கள் பொருட்காட்சிகளை நடத்த வேண்டுமெனில் 5 வகையான தடையின்மைச் சான்றிதழ்களை மாவட்டங்களில் இருந்து பெற்று, அதை ஆட்சியர்கள் மூலமாக மாநில அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு அனுப்ப வேண்டும். அதாவது, பொருட்காட்சி நடத்தப்படும் இடத்துக்கான தடையின்மை சான்று, காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி அல்லது நகராட்சியின் சுகாதாரத் துறை ஆகியவற்றில் இருந்து தடையின்மைகளைச் சான்றுகளைப் பெற்று அளிக்க வேண்டும். அத்துடன், கடந்த 3 ஆண்டுகள் வருமானவரி செலுத்தியதற்கான வருமானவரித் துறை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்.

ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள தடையின்மைச் சான்றுகளுடன் இப்போது கூடுதலாக வருவாய்த் துறையின் தடையின்மை சான்றினையும் பெற வேண்டும். அதன்பிறகே மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதத்துடன் விண்ணப்பத்தை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

குரூப் 4 தேர்வு எழுதும்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

சென்னை, மே 15 குரூப் – 4 தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாண வர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வழங்கப் பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

அனைத்துவகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது.

குரூப் – 4 தேர்வு

இதையொட்டி தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சியானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படுகிறது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பப்படிவ நகல், ஆதார் அட்டை நகல், ஒளிப்படம் ஆகியவற்றுடன் சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *