சென்னை அமெரிக்க மய்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் வரும் மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது

viduthalai
2 Min Read

சென்னை, மே 14- சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் கீழ் செயல்படும் அமெரிக்கன் மய்யத்தில், பள்ளி மாணவர்களுக்கான இலவச அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த கோடைக்கால வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்புகள், வரும் மே 30 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த வகுப்புகளில் மாணவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் வகையிலான செயல்முறை பயிற்சிகள் இடம்பெறுகின்றன. திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்குத் திரைப்படக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இந்த வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மைக்ரோபிட்கள், ஸ்னாப் சர்க்யூட்கள் போன்ற கோடிங் கருவிகள், மெர்ஜ் கியூப் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி அனுபவங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள், 3D பிரிண்டர், நாசா கருப்பொருள் கொண்ட லெகோ செட்கள் போன்ற நவீன STEM கற்றல் கருவிகளைப் பயன்படுத்தலாம். மேலும், அன்றாடம் நடத்தப்படும் வினாடி-வினாவில் பங்கேற்று, 3D பிரிண்டட் நினைவுப் பரிசுகள் மற்றும் நாசா ஸ்டிக்கர்கள் போன்ற பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் மாணவர்களுக்கு உண்டு.

இந்த இலவச வகுப்புகளில் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம். குறைந்த இடங்களே உள்ளதால், மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 73056-76662 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களுக்குப் பதிவு செய்ய வேண்டும்.

 

சென்னை பல்கலைக்கழகத்தில்
சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிப்பு

ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 14- ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்சி பட்டப்படிப்பு

சென்னை பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பிஎஸ்சி பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. 3 ஆண்டு காலம் கொண்ட இப்படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் 2 ஆண்டு இயற்பியல் வேதியியல், உயிரியல், கணிதம், ஆகிய பாடங்களையும் பொதுவாக படிப்பார்கள்.

இறுதி ஆண்டில் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு பாடத்தை சிறப்பு பாடமாக எடுத்து விரிவாக படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பட்டம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமின்றி மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இணையவழியில் பாடங்களை நடத்துவார்கள். படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் பட்டத்தை வழங்கும். இந்த பட்டம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.

ஜூன் 20ஆம் தேதி வரை

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்த மாணவர்கள் இந்த சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிபில் சேரலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இப்படிப்பில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) சேருவதற்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி வரை இணைய வழியில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை அறிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *