பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
புதுடில்லி, மே 12- ‘ஆபரேஷன் சிந்தூர்’, தாக்குதல் நிறுத்தம் ஆகியவை பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், முதலில் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட தாக்குதல் நிறுத்தம் ஆகியவை குறித்து மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்க வேண்டியது அவசியம்.
எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள நமது கூட்டு உறுதிப்பாட்டை காண்பிக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும். எனவே, இந்த கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து, விரைவாக முடிவு எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே
இதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்காவால் முதலில் அறிவிக்கப்பட்டு, இந்தியா, பாகிஸ்தான் அரசுகளால் பின்னர் அறிவிக்கப்பட்ட தாக்குதல் நிறுத்தம் ஆகியவை பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த கோரிக்கையை ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அந்த கோரிக்கையை ஆதரித்து நானும் கடிதம் எழுதுகிறேன். நீங்கள் சம்மதிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.