புதுடில்லி, மே 11- தென்மேற்குப் பருவமழை கேரளாவில் 27ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது.
கொதிக்கும் கோடை
இந்தியா முழுதும் வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் பல மாநிலங்களில் வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேநேரம் சில இடங்களில் கோடை மழையும் பெய்து அவ்வப்போது வெப்பத்தை தணித்து வருகிறது. எனினும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு அது எந்தவகையிலும் உதவவில்லை.எனவே நாடு முழுவதும் பருவமழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.
பருவமழை முன்பே தொடங்கும்
இவ்வாறு கோடை வெயிலால் பெரும் உஷ்ணத்தை அனுபவிக்கும் மக்களுக்கு சிறிய ஆறுதலாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து இருக்கிறது.இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் 1ஆம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்குகிறது. ஆனால் இந்த ஆண்டு வருகிற 27ஆம் தேதியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. இது ஜூலை 8ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பரவி விடும் எனவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
பின்னர் வடமேற்கு இந்தியா பகுதிகளில் இருந்து செப்டம்பர் 17ஆம் தேதி வாக்கில் விலக தொடங்கி, அக்டோ பர் 15-க்குள் முற்றிலும் விலகி விடும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
கூடுதல் மழை
இந்தியாவில் கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 2023இல் ஜூன் 8ஆம் தேதியும், 2022இல் மே 29ஆம் தேதியும், 2021இல் ஜூன் 3ஆம் தேதியும் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2025 பருவமழை காலத்தில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என்று கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வானிலை ஆய்வு மய்யம் கணித்து இருந்தது. மேலும் எல் நினோவுக்கான சாத்தியக்கூறுகளையும் நிராகரித்து இருந்தது.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குதல், இயல்பை விட அதிக மழை பெய்தல் போன்ற வானிலை மய்யத்தின் அறிவிப்பு கோடை வெயிலில் தகிக்கும் மக்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.