மாணவர் சேர்க்கைக்கான ‘கட்–ஆப்’ மதிப்பெண் குறையுமா?
சென்னை, மே.7– மாநில வாரிய பாடத்திட்டத்தில் இருந்து ‘நீட்’தேர்வு வினாக்கள் கடினமாக இருந்ததால் மாணவர் சேர்க்கைக்கான கட்ஆப் மதிப்பெண் குறையுமா? என்பது குறித்து கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘நீட்’ தேர்வு
மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படக்கூடிய ‘நீட்’ தேர்வு கடந்த 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடந்து முடிந்தது. சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக கேட்கப்பட்டு விட்டதாக மாணவ மாணவிகளும், கல்வியாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வடிவமைத்த சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில், நீட் தேர்வு வினாக்கள் கேட்கப்படுகின்றன. சமீப காலங்களாக தமிழ்நாட்டின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி.) வடிவமைக்கும் பாடத்திட்டங்களும், சி.பி.எஸ்.இ. தரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மாநில வாரிய பாடத்திட்டம்
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிந்ததும், அந்த தேர்வில் மாநில வாரிய பாடத்திட்டத்தில் இருந்து எத்தனை சதவீத வினாக்கள்? கேட்கப்பட்டன என்பது போன்ற விவரங்கள் வெளியாகும்.
அதன்படி,தாவரவியல் பிரிவில் மாநில பாடத்திட்டத்தின் பிளஸ்-1 பாடப்புத்தகத்தில் இருந்து 13 வினாக்களும் பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இருந்து 27 வினாக்களும் என 40 வினாக்களும், விலங்கியல் பிரிவில் 24 வினாக்களும் என மொத்தம் உயிரியல் பிரிவில் 64 வினாக்கள் (71 சதவீதம் நேரடியாக கேட்கப்பட்டு இருந்ததாக கல்வியாளர் டாக்டர் நந்தகுமார் தெரிவித்தார். இதுதவிர இயற்பியல் பிரிவில் நேரடியாக 15 வினாக்களும் (40 சதவீதம்), வேதியியல் பிரிவில் 31 வினாக்களும் (82சதவீதம்) நேரடியாக கேட்கப்பட்டு இருந்ததாகவும், இந்த வினாக்களை தவிர, பிற வினாக்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில பாடத்திட்ட வாரியத்தில் இருந்து தீர்வு கண்டுபிடித்து பதில் அளிக்கும் வகையில் கேட்கப்பட்டு இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். இந்த அளவிலான விவரங்களைத்தான் மற்ற கல்வியாளர்களும் தெரிவித்தனர்.
காரணம் என்ன?
கடந்த ஆண்டுகளை காட்டிலும் நடப்பாண்டில் நீட் தேர்வு வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கடந்த ஆண்டில் வினாத்தாள் கசிவு, முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியவை பேசும் பொருளான நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு வினாக்களின் வடிவமைப்பு இதுவரை இல்லாத வகையில் இருந்ததாக கல்வியாளர்கள் பலரும் கூறுகின்றனர். அதிலும் 3 வினாக்கள் நீட் தேர்வு தொடர்பான பாடத்திட்டத்திலேயே இடம்பெறாத வினாக்களாக இருந்ததாகவும் ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.
‘கட்-ஆப்’ மதிப்பெண் எப்படி இருக்கும்?
நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக கேட்கப்பட்டதால், மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண் குறையும் என்றே கல்வியாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் உயர்ந்து வந்த நிலையில், நடப்பாண்டில் அது குறையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் 30 முதல் 50 மதிப்பெண்கள் வரை குறைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.