அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும் – நம்முடைய வேர்களைப்பற்றி சொல்லி, விழுதுகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்!
பெரியாரை, அம்பேத்கரைப் பின்பற்றினால், பேதம் ஒழிந்த
ஒரு சமுதாயம், துணிச்சல் மிகுந்த ஒரு வருங்காலத் தலைமுறை மிகப்பெரிய அளவில் சிறப்பாக வரும்!
ஆஸ்திரேலியா, ஏப்.30 அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். நம்முடைய வேர்களைப்பற்றி சொல்லி, விழுதுகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். நம்முடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றைப்பற்றியும் தெளிவாகச் சொல்லவேண்டும்; மூடநம்பிக்கைகளுக்குப் பிள்ளைகளை ஆளாக்கக் கூடாது.; மனிதநேயத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்; பெரியாரைப் பின்பற்றினால், அம்பேத்கரைப் பின்பற்றினால், பேதம் ஒழிந்த ஒரு சமுதாயம், துணிச்சல் மிகுந்த ஒரு வருங்காலத் தலைமுறை மிகப்பெரிய அளவில் சிறப்பாக வரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆஸ்திரேலிய தமிழ்த் தொலைக்காட்சிக்குத்
தமிழர் தலைவரின் நேர்காணல்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டபோது, ஆஸ்திரேலியா தமிழ்த் தொலைக்காட்சியின் நெறியாளர் திருமதி.ராதிகா நேர்காணல் கண்டார்.
அந்நேர்காணலின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பெரியார் சுயமரியாதைத்
திருமண நிலையம்!
திருமண நிலையம்!
எங்களுடைய பெரியார் திடலில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்ற ஒன்று இருக்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான தோழர்கள் எந்தவிதமான சடங்குகளுமின்றி மணவிழாக்களை நடத்திக் கொள்கிறார்கள்.
நாங்கள், அவர்கள் சட்டபடி தகுதி உள்ளவர்களா என்பதை மட்டும் பார்த்து, பற்பல நேரங்களில் அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை உள்பட, உடல்நலம் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து, விருப்பப்படுகின்றவர்களுக்கு அதைச் செய்து விட்டுத்தான், மணவிழாக்களை நடத்தி வைக்கின்றோம்.
நேற்றுகூட, வானொலிக்கு நான் அளித்த பேட்டியில், ‘‘ஆணவக் கொலைகள் உங்கள் நாட்டில் நிறைய நடைபெறுகிறதே?’’ என்று கேட்டார்கள்.
அதற்கு நான், ‘‘ஆணவக் கொலைகள் அங்கொன்றும், இங்கொன்றும் நடைபெறுகிறதுதான், அதனை நாங்கள் மறுக்கவில்லை.
ஜாதி ஒழிப்பிற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்!
இது எதைப் போன்றது என்றால், சாலைகளில் ஏராளமான கார்கள் பயணிக்கின்றன. விபத்துகள் ஆங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பது உண்மை தான். செய்திகள் எதுவாகும் என்றால், விபத்துகள்தான் செய்தியாகும். பாதுகாப்பாக போய்ச் சேர்ந்த கார்கள் நிறைய இருக்கின்றன. அது செய்தியாகாது.ஆகவே, ஜாதி ஒழிப்பிற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் இது.
ஜாதிப் பாம்பு, கடைசியாக
கோவில் கருவறைக்குள்ளே நுழைந்தது
கோவில் கருவறைக்குள்ளே நுழைந்தது
வைக்கம் தெருக்களில், 1924 ஆம் ஆண்டிலேயே பெரியார் அவர்கள் போராட்டத்தின்மூலம், தெருக்களில் நடக்கின்ற உரிமைகளைப் பெற்றுத் தந்தார். அந்த ஜாதிப் பாம்பு, கடைசியாக கோவில் கருவறைக்குள்ளே நுழைந்து, பாதுகாப்பாக இருந்தது. அந்த ஜாதிப் பாம்பை தடி கொண்டு அடிக்கவேண்டும் என்று பெரியார் தன்னுடைய 95 ஆவது வயதில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்று, எங்களுடைய திராவிட ஆட்சி, கலைஞர் காலத்தில், அதற்காக சட்டம் வடிவமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் சென்று, அச்சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது. அது அமல்படுத்தாத நிலை இருந்தது.
இன்றைய ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஜாதி, தீண்டாமை ஒழிப்பிற்கு எதிராக இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொன்னார்கள்.
சிலர் புரியாமல் கேட்கிறார்கள்!
பல பேருக்கு இந்தக் கருத்தே புரிவதில்லை. அனைத்து ஜாதயினரும் அர்ச்சகர் என்று நாங்கள் கேட்டால், ‘‘இவர்கள்தான் கடவுள் மறுப்பாளர்களாயிற்றே? இவர்கள் ஏன் அதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்?’’ என்று சிலர் புரியாமல் கேட்கலாம்.
கடவுள் மறுப்பு எங்கள் கொள்கை; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது மனித உரிமை.
நான் கடவுளை ஏற்காதவனாக இருக்கலாம். அதே நேரத்தில், என்னுடைய சகோதரன், என்னுடைய குடும்பத்தினர் கோவிலுக்குப் போகிறவர்களாக இருக்கலாம். அவர்களை இழிஜாதியினர் என்று சொன்னால், அது என்னையும் பாதிக்கும்; என்னுடைய தன்மானத்தையும் பாதிக்கும்.
மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம்!
இப்போது அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி, மிகப்பெரிய அளவிற்கு அதில் வெற்றி பெற்று வந்திருக்கின்றோம்.
இது அய்யாயிரம் ஆண்டுகாலப் பிரச்சினை. அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், கட்டடம் அல்ல, உடனடியாக இடிப்பதற்கு என்றார்.
எங்கள் பயணம்
தொடர்ந்து கொண்டே இருக்கும்!
தொடர்ந்து கொண்டே இருக்கும்!
மூளைக்கு விலங்கு போட்டிருக்கிறார்கள்; அதை உடைத்தெறியவேண்டும். இது ஒரு நீண்ட போர், இதில் வெற்றி பெறவேண்டிய பல கட்டங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இன்னும் செல்லவேண்டிய தூரம் நிறைய உள்ளது.
இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.
தந்தை பெரியார், அம்பேத்கர் கருத்துகளை அயல்நாட்டவர்களிடம் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது?
நெறியாளர்: உங்களுடைய பயணத்தில், திராவிடர் கழகப் பயணத்தில், அயல்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் எப்படி உதவலாம்; அவர்களிடமிருந்து உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன? தந்தை பெரியார் கருத்துகளையும், அம்பேத்கர் கருத்துகளையும் அயல்நாட்டவர்களிடம் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது என்பதற்கு உங்களுடைய ஆலோசனை என்ன?
தமிழர் தலைவர்: இது மிக முக்கியமான கேள்வியாகும்.
அயல்நாட்டு, அயலகத் தமிழர்கள், குடியேறியவர்கள் தங்களுடைய அடையாளத்தை இழக்காமல், அதேநேரத்தில், அவர்கள் எந்த நாட்டில் குடிமக்களாக இருக்கிறார்களோ, அவர்கள் பொதுவான அளவிற்கு, அந்நாட்டினுடைய நடைமுறையில், சமூகப் பணிகளில் ஒன்றிப் போகவேண்டும்.
அந்தந்த நாட்டு அரசாங்கங்களோடு, அரசியலோடு தங்களுடைய பங்களிப்பு என்னவென்று தெளிவாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
முதலாவதாக, அவரவர் பிள்ளைகளை நல்ல அளவிற்கு வளர்க்கவேண்டும். தங்களுடைய தாய்மொழியை குறைந்தது வீட்டிலாவது பேசவேண்டும். இதுதான் மிகவும் முக்கியம்.
தமிழ்நாட்டிலிருந்து தொலைக்காட்சிகள் பல உலகளாவிய அளவிற்கு ஒளிபரப்பப்படுகின்றன. அதில் நன்மைகளும் இருக்கின்றன; தீமைகளும் இருக்கின்றன. ஏனென்றால், முத்தமிழைத் தாண்டி, தொலைக்காட்சித் தமிழ் என்ற ஒன்று உண்டு. அது நன்மையா? தீமையா? என்று ஆராய்வது பட்டிமன்ற விவாதத்திற்கு உரியதாகும்.
தாய்மொழியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்!
இருந்தாலும், இங்குள்ள பிள்ளைகள் பல புதிய சொற்களை அதன்மூலமாகக் கற்றுக்கொள்ளலாம். தாய்மொழியை வீட்டில் கண்டிப்பாக பேசவேண்டும். பெற்றோர்கள் பேசவேண்டும்; தாய்மொழியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
பல நாடுகளில், பல இடங்களில் தமிழ்ப் பள்ளி களை உருவாக்கித் தொண்டறமாக அதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள், அது வர வேற்கத்தகுந்ததாகும்.
அதேநேரத்தில், அவர்களுடைய வாழ்க்கை முறையை பார்க்கும்போது, ‘‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு’’ என்ற சின்னதோர் கடுகு உள்ளமாக இல்லாமல், பொது நன்மையை, தமிழ் சமூக மேன்மையை உள்ளடக்கிய வாழ்க்கையாக அமைத்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
அடிப்படையில், மனிதர்கள் சுயநலவாதிகள் என்ற ஒரு பழமொழி உண்டு. அது தவிர்க்க முடியாததுதான்.
ஆனால், அந்த சுயநலத்திலேயே எது பொதுநலம்? எது சுயநலம்? என்ற ஒரு கோடு இருக்கிறது.
வரம்பிற்கு மீறிப் போகவேண்டிய அவசியம் இல்லை. பணம் சேர்ப்பதாக இருந்தாலும், மற்ற எதுவாக இருந்தாலும், எதற்காக அங்கே போகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கக் கூடாது.
பல செய்திகளை நல்ல கதைகள் போன்று சொல்ல வேண்டும். நம்முடைய நாட்டில் எப்படி இருந்தோம்? எப்படி இங்கே வந்தோம்? யாரால் வந்திருக்கின்றோம்? இங்கே இருக்கின்ற அமைப்புகள் எப்படிப்பட்டவை? நாளைக்கு இதை நாம் விட்டுவிட்டால் என்னாகும்? என்றெல்லாம் நம்முடைய பிள்ளைகளுக்குச் சொல்லி, நம்முடைய பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
நாம் எச்சரிக்கையாக
இருக்கவேண்டிய காலகட்டம்!
இருக்கவேண்டிய காலகட்டம்!
இப்போது சில சக்திகள் பாரம்பரியம் என்ற பெயரால், வேறு ஒன்றைத் திணிக்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம்.
வேர்களைப்பற்றி விழுதுகள் அறிந்தால்தான், அந்த விழுதுகள் பலமுள்ளதாக மறுபடியும் வேர் ஊன்ற முடியும்.
இப்போது அந்த வேர்களே, மரத்தைவிட்டு வரக்கூடிய அளவிற்கு, நமக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.
சுயமரியாதை இயக்கம் என்பது பொதுத் தன்மை உள்ளதுதான். ஆனால், பொதுத்தன்மை என்று சொல்லு கின்ற காரணத்தினால், அதனுடைய தனித்தன்மையை, தனிப்பட்ட புராதன நாகரிகம், கலாச்சாரம், மொழி இவற்றையெல்லாம் இழந்துவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
உலகளவில் பார்க்கும்போது ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்பதுதான். பிறகு ஏன் நீங்கள் உங்களுடைய தனி அடையாளத்தைக் காட்டுகிறீர்கள் என்று கேட்க முடியாது.
நீங்கள் எங்கே இருந்து வந்தீர்கள், எங்கே இருக்கி றீர்கள் என்று கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?
‘‘இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கின்றேன்’’ என்று சொல்வீர்கள்.
‘‘எந்த மாநிலத்தில் இருக்கிறீர்கள்?’’
‘‘குவின்ஸ்லாந்தில் இருக்கிறேன் அல்லது வேறு மாநிலத்தில் இருக்கிறேன்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் இருக்கலாம்.
மனிதநேயத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்!
அந்த வாய்ப்புகளில் நம்முடைய அடையாளத்தைக் காட்டுகின்றோம்.
‘‘சரி, எந்தத் தெருவில் இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டால்,
தெருவின் பெயரைச் சொல்லுகின்றோம்.
‘‘உங்களுடைய இலக்கு என்ன?’’ என்று கேட்டால்,
அதுகுறித்து பதிலைச் சொல்லுகின்றோம்.
’’நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள்?’’ என்று கேட்டால்,
அதற்குரிய பதிலைச் சொல்லுகின்றோம்.
அடிப்படையில், மனிதத்தன்மை, மனிதநேயம்தான். அந்த மனிதநேயத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
குறைந்தபட்சம், நன்றி சொல்வதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். ‘‘இவர் நமக்கு உதவி செய்ததால்தான், நாம் இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம். நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்’’ என்கிற உணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தவேண்டும்.
அடுத்தபடியாக, பெரியார், அம்பேத்கர் இவர்கள் செய்தது என்ன?
ஆதிகாலத்தில் நம்முடைய நிலைமை எப்படி இருந்தது?
நல்ல வளர்ச்சியாக இருந்தது.
அதற்குப் பிறகு இடையில் புகுந்த பண்பாடு நம்மை அழித்தது, கீழிறக்கத்திற்குத் தள்ளியது; அடிமைத்தனத்திலேயே உழன்று கொண்டி ருக்கவேண்டும் என்று விரும்பியது.
அதற்கான போராட்ட உதாரணமாக வைக்கம் போராட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்.
தெருக்களில் மனிதன் நடக்கக்கூடாதா? நாய், பன்றி, கழுதை அந்தத் தெருவில் போகலாம்; ஆனால், ஆறறிவு உள்ள மனிதன் போகக்கூடாதா?
ஒரு குறிப்பிட்ட மதத்துக்காரன்தான் செல்லலாம்; இன்னொரு மதத்தைச் சேர்ந்தவன் நடக்கக்கூடாதா?
அப்படி இருந்ததையெல்லாம் மாற்றியிருக்கின்றோம்.
முன்பு, குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து, நிறைய பள்ளிக்கூடங்களை மூடி னார்கள்.
அதற்காக பெரியார் போன்றவர்கள் பாடுபட்டார்கள். எல்லோரும் படிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
படிக்கக்கூடாது என்று சொல்கின்ற ஓர் இயக்கம், மிகவும் வலிமையாக இருந்தது.
இந்த வரலாறையெல்லாம் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் அவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்தத் தெளிவு ஏற்பட
வேண்டும். பக்குவமாக சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கவேண்டும்.
மூடநம்பிக்கைகளுக்குப் பிள்ளைகளை ஆளாக்கக் கூடாது!
மூடநம்பிக்கைகளுக்குப் பிள்ளைகளை ஆளாக்கக் கூடாது. இங்கே, கடற்கரைக்குச் செல்லும் பெற்றோர் கரையில் அமர்ந்திருப்பார்கள்; அவர்களுடைய குழந்தை கடல் அலையில் நின்று கொண்டிருக்கும்.
ஆனால், நம்முடைய நாட்டில், குழந்தையின் கையை இறுகப் பற்றிக் கொண்டிருப்பார்கள். தனியே அந்தக் குழந்தை கொஞ்ச தூரம் சென்றால்கூட, ‘‘அய்யய்யோ, தனியே போறான் பாருங்கள்’’ என்று பதற்றப்படக்கூடிய அளவில் இருப்பார்கள்.
பிள்ளைகளை வளர்க்கும் முறையின்போது, அவர்களை பயத்தோடு வளர்க்கக் கூடாது.
குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போதுகூட, அந்தக் குழந்தை சாப்பிடவில்லையென்றால், ‘‘இங்கே பார் நீ சாப்பிடவில்லை என்றால், ‘பூச்சாண்டி’ வருவான், அவனிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்’’, ‘‘‘பேய்’ வரும், ‘பிசாசு’ வரும், ஆகவே நீ சாப்பிடு’’ என்று சொல்வார்கள்.
குழந்தை சாப்பிடவேண்டும் என்பதற்காக இந்தப் பூச்சாண்டி, பேய் கதைகளைச் சொல்கிறார்கள்.
அதே குழந்தைக்கு 8 வயது, 10 வயது ஆகும்போது, இரவு நேரத்தில், அந்தக் குழந்தையிடம் ‘‘பாப்பா, இங்கே வா! அந்த அறையில் ஒரு புத்தகம் இருக்கிறது, அதை எடுத்துக்கொண்டு வா’’ என்று சொல்வார்கள்.
‘‘நான் போக மாட்டேன்’’ என்று அந்தப் பிள்ளை சொல்லும்.
‘‘ஏன் போகமாட்டாய்?’’ என்று கேட்டால்,
‘‘அங்கே பூச்சாண்டி இருப்பான்; அதனால் நான் போகமாட்டேன்’’ என்று சொல்லும்.
ஆகவே, முழுக்க முழுக்க இதுபோன்ற மூடநம்பிக்கைகளைச் சொல்லி குழந்தைகளை வளர்க்கக்கூடாது.
பிள்ளைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்!
அடுத்தபடியாக அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும். கேள்வி கேட்டு, பிள்ளைகளை உற்சாகப்படுத்தவேண்டும்.
இதைப் பேசாதே, அதைப் சொல்லாதே என்று சொல்லி அவர்களை வளர்க்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல், பிள்ளைகள் முன்பு பொய் சொல்லக்கூடாது. உண்மையை மாற்றிச் சொல் என்று அந்தப் பிள்ளைகளிடம் சொல்லக்கூடாது.
உதாரணமாக, கைப்பேசி அழைப்பு வரும்போது, பிள்ளையிடம், ‘‘இந்தப் போனை எடுத்து, அப்பா இல்லை என்று சொல்’’ என்று அப்பா சொல்வார்.
இதைப் பார்க்கும் அந்தப் பிள்ளை, அப்பாவே பொய் சொல்கிறாரே என்று நினைக்கும். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பெரிய அளவிற்குப் பொய் சொல்லக்கூடிய அளவிற்கு வரும். ஆகவே, கூடுமானவரையில், தவிர்க்க முடியாத சூழ்நிலையை விட்டுவிடுங்கள். உண்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்; ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; நன்றி மறக்கக்கூடாது.
பிள்ளைகளிடம் எந்தவிதமான மூடநம்பிக்கையில்லாமல், தன்னம்பிக்கையை, துணிச்சலை உருவாக்கவேண்டும்.
விழுதுகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்
அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். நம்முடைய வேர்களைப்பற்றி சொல்லி, விழுதுகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்.
நம்முடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றைப்பற்றியும் தெளிவாகச் சொல்லவேண்டும். பாடப் புத்தகங்களில் இவை கிடைக்காது.
ஒரு தாய், சோறு ஊட்டும்போதுகூட, துணிச்சலாக இருக்கக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தவேண்டும்.
பெரியார் கொள்கையில் எத்தனையோ வாழ்வியல் முறைகள் உள்ளன!
இந்தக் கருத்துகளோடு, வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள், பெரியார் தத்துவப்படி வாழவேண்டும். பெரியார் கொள்கையில் எத்தனையோ வாழ்வியல் முறைகள் இருக்கின்றன.
வரவுக்குட்பட்டு செலவழித்து சிக்கனமாக இருக்கவேண்டும். தங்களுடைய வாழ்க்கையை ஆடம்பர வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ளக்கூடாது.
பெரியாரைப் பின்பற்றினால், அம்பேத்கரைப் பின்பற்றினால், பேதம் ஒழிந்த ஒரு சமுதாயம், துணிச்சல் மிகுந்த ஒரு வருங்காலத் தலைமுறை மிகப்பெரிய அளவில் சிறப்பாக வரும். எதிர்மறை கருத்துகளைச் சொல்லக்கூடாது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பிள்ளைகளிடம் உருவாக்கவேண்டும்.
பிள்ளைகளிடம், கேள்வி கேட்கின்ற மனப்பான்மையை ஊக்குவிக்கவேண்டும்!
பிஞ்சு உள்ளத்தில், நஞ்சைப் புகுத்தக்கூடாது. மத நஞ்சுகள், ஜாதி வெறித்தனம் இவை அத்தனையும் இருந்தால், இது நம்முடைய ஜாதி வழக்கம், நம்முடைய மத வழக்கம் என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு என்னவென்று புரியாமலேயே, தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருக்கும்படியான நிலையை உருவாக்கக் கூடாது. கேள்வி கேட்கின்ற மனப்பான்மையை ஊக்குவிக்கவேண்டும்.
ஒத்தறிவு என்பது எம்பதி!
படிப்பறிவு வேறு; பகுத்தறிவு வேறு!
படிப்பறிவு, பகுத்தறிவு, பட்டறிவு, ஒத்தறிவு. இவற்றில் ஒத்தறிவு என்பது எம்பதி. சிம்பதி வேறு, எம்பதி வேறு!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.