“சாப்பாட்டு வேளையில் தஞ்சா வூரின்
நிலையம் சேர்ந்தது நெடும்புகை வண்டி!
திரு வீர மணியின் திருமணம் வாழ்த்தித்
திருச்சியி னின்று திரும்பும் எனக்குப்
பெரும்பசி வயிற்றைப் பிசைவதா யிற்று
நானோ,
பார்ப்பனன் தொட்டதைத் திரும்பியும் பாரேன்
தமிழன் உணவு தாங்கி வாரானா
என்று நினைத்துக் கிடக்கையில், எதிரில்
தமிழன், ஒருவன் தலைப்பெட் டியுடன்
சுவைநீர், இட்டளி, தூய வடை எனும்
அமிழ்தை என் காதில் போட்டான்! அழைத்தேன்
அரையணா விழுக்காடு வடைகள் ஆறும்,
அவ்விழுக் காடே அன்பின் இட்டளி
மூன்றும், பருப்புக் குழம்பில் முழுகத்
தாயென இட்டான், சேயென உண்டேன்.
சுவைநீர் சுடச்சுடத் தந்தான் பருகினேன்.
இத்தனைக்கும் ஆறணா என்றான்!
அத்தனை யுண்டேன் தந்ததோ ஆறணா!
தஞ்சை வண்டிச் சரகில்ஓர் தமிழன்
மலிவு விலையில் உண்டி வழங்கினான்
என்பதில் வியப்பே இல்லை. ஆனால்,
இத்தனை சுவையினை எங்கும் நான் காண்கிலேன்,
உண்டி விற்கும் உண்மைத் தமிழரே
அண்டிய தமிழர், அமிழ்தமிழ் தமிழ்தெனச்
செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக!
உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே,
தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!
தமிழர் தமிழனை ஆத ரிக்க!
தஞ்சைத் தமிழன் செய்தது போல
இனிதே யாயினும், எட்டியே ஆயினும்,
வாழ்வ தாயினும் சாவ தாயினும்
தமிழன் ஆக்கிய துண்க
தமிழகம் தன்னுரி மைபெறற் பொருட்டே”
எனது திருமணத்திற்கு திருச்சி வந்த புரட்சிக் கவிஞர் தீராப் பசியுடன் கொள்கையோடு கூடிய அமிழ்து உணவு உண்டு – உண்டதால் எழுந்த கவிதையும் எனக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும், இலக்கியத்துக்கும் கிடைத்த கூடுதல் பரிசு போலும் இது! என்றே இன்றும் மகிழ்கிறேன்.
(ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘நினைவுகளும் நிகழ்வுகளும்’)