சென்னை, ஏப். 16- விடுமுறைக்குப் பிறகு நேற்று (15.4.2025) மீண்டும் சட்ட மன்றம் கூடிய போது முதலமைச்சர் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் தொடர்பான விவாத்தின் போது சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்ந்திரன் இந்தியாவின் மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன என்று அம்பேத்கர் தெரிவித் துள்ளார். மொழிவாரி மாநிலத்தில் அவருக்கு விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-அய் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்
மாநில சுயாட்சி
இதற்கு பதிலளித்து உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:
விசிக உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி: “மாநில அரசுகள் மக்களுக்கு பதில் கூறக் கடமைப் பட்டுள்ளன. அந்த அரசு சுயாட்சி படைத்த அரசாக இருக்க வேண்டும். அதிகாரமும், பொறுப்பும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்” என்று அம்பேத்கர் சொல்லியுள்ளார். அம்பேத்கரின் கருத்து மாநில சுயாட்சிக்கு ஆதரவானது. என்று கூறினார்.
தொடர்ந்து பதிலளித்த திமுக உறுப்பினர் நா.எழிலன்: பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மொழிவாரி மாநிலத்துக்கு அம்பேத்கர் எதிரானவர் என்ற தவறான கருத்தை தெரிவித்துள்ளார். முதலில் மொழிவாரி மாநிலம் பற்றிய பிரச்சினையில், அம்பேத்கர் மாறுபட்ட கருத்து உடையவராக இருந்தார். பிறகு, மொழிவாரி மாநிலத்துக்கு அம்பேத்கர் ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, ‘முதலில் மொழிவாரி மாநிலத்துக்கு எதிர்ப்பாக இருந்த நீங்கள், இப்போது ஆதரவாக இருக்கி றீர்களே?’ என்று அம்பேத்கரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘கழுதையின் நிலைப்பாடுதான் பிடிவாத குணத்துடன் இருக்கும். நான் மனிதன். பகுத்தறிவு சிந்தனை உள்ளவன். படித்தவன். அதனால், நான் முழுமையாக மொழிவாரி மாநிலத்தை ஆதரிக்கிறேன்’ என்றார் என பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தார்,
உண்மைக்குப் புறம்பான தகவலைப் பேசிவிட்டு அதற்கான விளக்கத்தை கேட்க அஞ்சி பாஜகவினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.