கும்பகோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி

viduthalai
8 Min Read

பி.ஜே.பி.-அ.தி.மு.க.வுக்கு இடையே கள்ள உறவு என்று
முதலமைச்சர் கூறி வந்தது, இப்போது உண்மையாயிற்று!

கும்பகோணம், ஏப்.14  பி.ஜே.பி.யோடு, அ.தி.மு.க. கள்ள உறவு வைத்துள்ளது என்று தொடர்ந்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி வந்தது உண்மைதான் என்பது இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
பி.ஜே.பி.-அ.தி.மு.க.வுக்கு இடையே கள்ள உறவு என்று முதலமைச்சர் கூறி வந்தது, இப்போது உண்மையாயிற்று!கும்பகோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்சொன்ன சொல் மாறி எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கிறாரே?அ.தி.மு.க. நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கின்றது!முதலமைச்சர் சொன்னது உண்மையாகிவிட்டது!ஆளுநர் ஆர்.என்.இரவி, ‘‘ஜெய் சிறீராம்’’ என்று  சொல்லியிருக்கிறாரே?ஆளுநரிடமிருந்த வேந்தர் பதவி, பறிபோய் பல மாதங்கள் ஆகிவிட்டனமதச்சார்பின்மை கொள்கைக்கு  விரோதமாக.,,,எங்கேயிருந்து சாவி கொடுக்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது!தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை உருவாக்குவதற்கு….தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!ஆளுங்கட்சியான தி.மு.க.மீது அமித்ஷா பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறாரே?பா.ஜ.க.வின் ஊழலைப்பற்றி தணிக்கை குழு அறிக்கை!எதிர்ப்பவர்களை ‘திரிசூலங்களை’ கொண்டு மிரட்டுகிறார்கள்!தி.மு.க. கூட்டணியில் பிளவும் அல்ல; பிரிவும் அல்ல!தனிப்பட்ட மொழியின்மீது எங்களுக்கு வெறுப்பில்லை!உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றி பா.ஜ.க.வினர் கருத்துத் தெரிவிக்கவில்லையே!அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வரவில்லை!செருப்பு அணியமாட்டேன் என்ற அண்ணாமலை செருப்பு அணிந்துவிட்டாரே?தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்!

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

நேற்று (13.4.2025) காலை  கும்பகோணம் சென்ற   திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின் விவரம் வருமாறு:

சொன்ன சொல் மாறி எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கிறாரே?

செய்தியாளர்: பாரதீய ஜனதா கட்சியும், அ.தி.மு.க.வும் கூட்டணி என்று நேற்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம்  என்று இதற்கு முன்பாக  அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தார். ஆனால், இப்போது சொன்ன சொல் மாறி, கூட்டணி சேர்ந்திருக்கிறாரே, அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: அ.தி.மு.க.வினுடைய வரலாறு என்பதில் இதுவரையில் சொன்ன சொல்லைக் காப்பாற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

அ.தி.மு.க. நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கின்றது!

அதிலும் குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் தலைமை ஏற்பட்ட பிறகு, அ.தி.மு.க. நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமல்ல, இதற்கு முன்பும் அவர்கள் சொன்ன சொல்லிலிருந்து பலமுறை மாறியிருக்கிறார்கள்.

இது முதல் முறையல்ல. ஏற்கெனவே அவர் பலமுறை, பா.ஜ.க.வோடு கூட்டணி எந்த நாளிலும் கிடையாது என்று சொன்னார்.

முதலமைச்சர் சொன்னது
உண்மையாகிவிட்டது!

அதேநேரத்தில், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் கள்ள கூட்டு வைத்திருக்கிறார்கள்; கள்ள உறவு வைத்திருக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்தார்.

முதலமைச்சர் சொன்னது இப்போது உண்மையாகி விட்டது.

எடப்பாடி பழனிசாமி சொன்னது, ‘‘அப்பட்டமான, உண்மை கலப்பில்லாத பொய் என்பது தெளிவாகி விட்டது.’’ இதுதான் அவர்களுடைய வாக்கு நாணயம்.

வாக்கு வங்கிக்காக, வாக்கு நாணயத்தைத் தியாகம் செய்வது என்பது அவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

ஆளுநர் ஆர்.என்.இரவி, ‘‘ஜெய் சிறீராம்’’ என்று  சொல்லியிருக்கிறாரே?

செய்தியாளர்: ஆளுநர் ஆர்.என்.இரவி, மதுரையில் நேற்று ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ‘‘ஜெய் சிறீராம்’’ என்று மூன்று முறை சொல்லிவிட்டு,  மாணவர்களையும்  திரும்பச் சொல்லச் சொல்லியிருக்கிறாரே?

ஆளுநரிடமிருந்த வேந்தர் பதவி, பறிபோய் பல மாதங்கள் ஆகிவிட்டன

தமிழர் தலைவர்: இதுகுறித்து, ‘விடுதலை’யில் அறிக்கை எழுதியிருக்கிறேன்.

முதலாவதாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, இவர் கல்லூரிகளுக்குள் அடியெடுத்து வைப்பதற்கே வெட்கப்பட வேண்டும். அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.

இதற்கு முன் இவரிடமிருந்த வேந்தர் பதவி, பறிபோய் பல மாதங்கள் ஆகிவிட்டன, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி.

எப்போது அந்த சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டதோ, அன்றைக்கே அது நடைமுறைக்கு வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதுதான் அந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் அடிப்படையைப் பார்க்கும்போது, நிச்சயமாக ஆளுநருக்கு கல்லூரிக்குள் செல்வதற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.

மதச்சார்பின்மை கொள்கைக்கு  விரோதமாக.,,,

ஒரு தனியார் கல்லூரிக்குள் சென்று,  ‘‘ஜெய் சிறீராம்’’ என்று மூன்று முறை சொல்லியிருக்கிறார். மதச்சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக அவர் நடந்துகொண்டிருக்கின்றார்.

ஓர் அரசு நிகழ்ச்சியில், இவர் ‘‘ஜெய் சிறீராம்’’ என்று சொன்னது முற்றிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்.

‘‘ஜெய் சிறீராம்’’ என்று இவர் சொல்வதால், இவரை ராமர் காப்பாற்றமாட்டார். ஏற்கெனவே அரசமைப்புச் சட்டம்,  உச்சநீதிமன்றம் அவரை கைவிட்டுவிட்டது. இவரை ஆளுநர் பதவியிலிருந்து விலக்கவேண்டும்.

எங்கேயிருந்து சாவி கொடுக்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது!

அவர் பதவியிலிருந்து விலகாமல் இருக்கிறார் என்று சொன்னால், அவர் சாவி கொடுக்கப்படும் ஒரு பொம்மையாகத்தான் இதுவரை இருக்கிறார். அந்த சாவி, மேலிடத்திலிருந்து கொடுக்கப்படுகின்றது என்பது இப்போது உலகத்திற்கே தெள்ளத் தெளிவாகிவிட்டது.

தமிழ்நாடு அரசு உடனடியாக, அந்தத் தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கவேண்டும். எப்படி அவரை அழைத்தார்கள்? அவரை அழைத்ததுகூட பரவாயில்லை, அதையும் தாண்டி என்ன சூழ்நிலை என்று சொன்னால், முழுக்க முழுக்க மதச்சார்பின்மைக்கு விரோதமாக இவர் ‘‘ஜெய் சிறீராம்’’ என்ற கோஷத்தைப் போட ஆரம்பித்தால், இன்னொரு மதக்காரர், அவருடைய மதம் குறித்து கோஷம் போடச் சொல்வார். இன்னொரு மதக்காரர் அவருக்கு எதிராகப் பேசுவார்.

தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை உருவாக்குவதற்கு….

ஆகவே, தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை உருவாக்குவதற்காக அவர்கள் முயற்சி செய்து, நீதிமன்றத்தாலும், ஆளுங்கட்சியாலும் அது தடுக்கப்பட்ட காரணத்தினால், ‘‘நாங்கள் எல்லோரும் இங்கே ஒற்றுமையாக, சுமூகமாக இருக்கின்றோம்; தேவையில்லாமல் வெளியில் இருந்து வந்து நீங்கள் இங்கே வம்பு செய்கிறீர்கள்’’ என்று அந்தப் பகுதி மக்களும் கேட்டார்கள். நீதிமன்றமும் கேட்டது.

ஆகவே, திட்டமிட்ட மதக்கலவரத்தை ஆளுநரே விதைக்கிறார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

அதற்குரிய நடவடிக்கைகளை உயர்கல்வித் துறையும், தமிழ்நாடு அரசும், அந்தத் தனியார் கல்லூரியின்மீதும், ஆளுநர்மீதும் எடுக்கவேண்டும்.

இனிமேல் வேந்தர் என்ற பொறுப்பே ஆளுநருக்குக் கிடையாது. அப்படியே அவர் அந்தக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டு இருந்தாலும், இதுபோன்ற முழக்கத்தை அவர் அங்கே எழுப்பியிருக்கக்கூடாது.

ஆளுங்கட்சியான தி.மு.க.மீது அமித்ஷா பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறாரே?

செய்தியாளர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கே வந்து, ஆளுங்கட்சியான தி.மு.க.மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அ.தி.மு.க.வோடு அவர்கள் எப்போதெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ, அப்போதெல்லாம்  ஊழல் குற்றச்சாட்டுகளை தி.மு.க.மீது சொல்வார்கள்.

எப்போதெல்லாம், அ.தி.மு.க.வோடு கூட்டணி இல்லாமல், அவர்கள் இங்கே வருகிறார்களோ, அப்போதெல்லாம் ஜெயலலிதா உள்பட அனைவருடைய ஊழலையும் எடுத்துப் பேசுவார்கள்.

எனவேதான், இது அவர்களுக்கு வாடிக்கையாக சொல்லிப் பழகிய பொய். ஆகவே, அந்தப் பழக்கம்தான் இன்றைக்கும் அவர்களுக்கு இருக்கிறது.

பா.ஜ.க.வின் ஊழலைப்பற்றி
தணிக்கை குழு அறிக்கை!

ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பா.ஜ.க.வினுடைய ஊழலைப்பற்றி எத்தனை லட்சம் ரூபாய்கள் என்று  தெளிவாக தணிக்கைக் குழுவிலே வெளிவந்திருக்கிறது.

தேர்தல் பத்திரம்மூலமாக இவர்கள் செய்த ஊழலை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

இதெல்லாம் ஊழல் இல்லாமல், வேறு என்ன? அதற்குப் பெயர் என்ன? இதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லவேண்டும்.

எதிர்ப்பவர்களை ‘திரிசூலங்களை’ கொண்டு மிரட்டுகிறார்கள்!

‘மெகா ஊழலை’ அவர்கள் செய்திருக்கிறார்கள். இவர்களை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, அவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்களோ அவர்கள்மீதெல்லாம் அமலாக்கத் துறை – சி.பி.அய். – தேர்தல் ஆணையத்தை வைத்து முப்பெரும் பரிமாணங்களை – திரிசூலங்களைத்தான் ஆயுதங்களாக வைத்திருக்கிறார்கள். அதைத்தான் தேர்தலுக்காக அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் உள்ள  திருமாவளவன் அவர்கள்,  கொடிக் கம்பங்களில் கொடியேற்ற முடியவில்லை; ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் இதுபோன்று செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

தி.மு.க. கூட்டணியில் பிளவும் அல்ல; பிரிவும் அல்ல!

தமிழர் தலைவர்: மிகத் தெளிவாக இருக்கிறார் திருமாவளவன்.  திருமாவளவன் அவர்களிடமே நீங்கள் கேளுங்கள். ‘‘கூட்டணி என்பதில் கொஞ்சம்கூட எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது’’ என்று சொல்வார்.

அதனால், ஒரு சில கருத்துகள், அவரவர் கட்சிக்கு ஏற்ப, சூழ்நிலைக்கேற்ப ஆங்காங்கு இருக்கின்ற சில நிகழ்வுகளைச் சொல்வது தவறல்ல. அது கூட்டணியில் பிளவும் அல்ல; பிரிவும் அல்ல, மாறுபட்ட கருத்தும் அல்ல.

தனிப்பட்ட மொழியின்மீது எங்களுக்கு வெறுப்பில்லை!

செய்தியாளர்: அமைச்சர் எ.வ.வேலு, பொது மேடையில் ஹிந்தி பாடல் பாடியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஹிந்தித் திரைப்படங்களையோ, ஹிந்திப் பாடல்களையோ  வேண்டாம் என்று சொல்லவில்லையே?

மொழித் திணிப்பு கூடாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

நாங்கள்  வடநாட்டிற்குச் செல்லும்போது, நம்முடைய உரையை ஹிந்தி மொழியில் மொழி பெயர்த்துச் சொல்கிறார்கள்.  அதனால், நாங்கள் கொள்கையை விட்டுவிட்டோம் என்று சொல்ல முடியுமா?

டில்லியில் பெரியார் மய்யம் வைத்திருக்கின்றோம். அந்தக் கட்டடத்தின்மேல் ஹிந்தியில், ‘‘பெரியார் மய்யம்’’ என்று போர்டு வைத்திருக்கின்றோம்.

அதனாலேயே நாங்கள் ஹிந்தி மொழியை ஆதரிக்கிறோம் என்று சொல்லிவிட முடியுமா?

ஆகவே, இது வாதம் அல்ல; குதர்க்கம்!

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றி பா.ஜ.க.வினர் கருத்துத் தெரிவிக்கவில்லையே!

செய்தியாளர்: அண்மையில், உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை குறித்து தீர்ப்பு வந்தது. இதுகுறித்து பா.ஜ.க. எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்? அதனை பா.ஜ.க. ஆதரிக்கிறதா? எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்வியை, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்குப் புதிதாக வந்திருக்கின்றவரிடம் கேளுங்கள். அவர் நிறைய விவரம் தெரிந்தவர். ஆகவே, நிறைய விஷயங்களைச் சொல்வார்.

அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வரவில்லை!

பொதுவாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றால், அவர்களுக்கு என்ன சிக்கல் அதில் இருக்கிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்பது இருக்கிறதே, புரட்சிகரமான தீர்ப்பாகும்.

அதேநேரத்தில், அரசமைப்புச் சட்டத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்ட தீர்ப்பாகும்.

அந்தத் தீர்ப்பு, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வரவில்லை.

செருப்பு அணியமாட்டேன் என்ற அண்ணாமலை செருப்பு அணிந்துவிட்டாரே?

செய்தியாளர்: தமிழ்நாடு மேனாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செருப்பு அணிந்து நடக்கிறார். அதுகுறித்து கேட்டதற்கு, தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவோம். அதற்காக அமித்ஷா அடிக்கல் நாட்டிவிட்டார், தமிழ்நாட்டின் பா.ஜ.க. புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலுக்கு இணங்க நான் செருப்பணிந்தேன் என்று சொல்லியிருக்கிறாரே?

தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்!

தமிழர் தலைவர்: பா.ஜ.க. ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்று யாருமே சொல்லவில்லை.

தமிழ்நாடு பா.ஜ.க.வின் புதிய  தலைவரே, ‘‘40 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்று சொல்லியிருக்கிறார். மொத்தம் உள்ள 234 இடங்களில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில், 40 இடங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆகவே, அவரே தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

அண்ணாமலைக்கு, ஆட்சி கிடைக்காது – அவர் போடாத செருப்புக் கிடைத்திருக்கிறது. அதுதான் மிக முக்கியம்.

மீண்டும் செருப்பு அணிந்திருக்கிறார், அதுதான் அரசியல் வரலாறு.

“பாதுகா பட்டாபிஷேகம்” என்ற நாடகம் உண்டு. 14 ஆண்டுகள் அதுதான் ஆண்டிருக்கிறது என்கிற வரலாறு உண்டு.

ஆகவே, அந்த வரலாற்றை அவர்கள் புதுப்பிக்கிறார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *