முதலமைச்சரின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கது!
திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் – தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார்.
இன்று (3.4.2025) தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘திராவிட மாடல்‘ ஆட்சியின் முதலமைச்சர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் (விதி 110–இன்கீழ்) வெளி யிட்ட அறிக்கையில், பொருளாதார தத்துவ கர்த்தாவான காரல் மார்க்சுக்கு சென்னை தலை நகரில் சிலை எழுப்பப்படும் என்றுள்ள இனிய அறிவிப்பை வரவேற்றுப் பாராட்டி மகிழ்கிறோம்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பம்சங்கள்!
நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி தத்துவத் தலை வர்களையும், தொண்டறச் செம்மல்களையும் வருகின்ற தலைமுறைகளுக்கு நினைவூட்டி, வரலாற்றில் பெருமைப்படுத்துவது மிகவும் சிறப்பான ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பம்சங்களாகும்!
காரல் மார்க்ஸ்பற்றி வெகுமக்களிடையே தந்தை பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கமும், அவர் நடத்திய ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகளும் அவரது விஞ்ஞான சோஷலிசத்தை மக்களுக்கு விளக்கியதோடு, பல குழந்தைகளுக்குக் காரல் மார்க்ஸ் என்றே பெயரிட்டதுண்டு; அவர்களுக்கு இப்போது 90 வயதும் ஆகின்றது!
எனவே, ‘திராவிட மாடல்‘ ஆட்சியின் மாட்சியில், இது முக்கிய சாதனையாகும்!
பாராட்டி வரவேற்கவேண்டிய ஒன்று!
அதுபோலவே, திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவிருக்கும் நூலகத்திற்குக் கல்வி வள்ளல் காமராசர் பெயர் வைக்கப்படும் என்று அறிவிப்புத் தந்ததும் மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டிய ஒன்றாகும்!
நாளும் இப்படி சாதனைக்குமேல் சாதனை செய்து, வரலாற்றில் பொன்னோடுகளைப் பெருக்கிக் கொண்டே போவதால், கொள்கை எதிரிகளோ பொறுத்துக் கொள்ள முடியாமல், வெட்டி அவதூறுச் சேற்றினை ஆதாரமின்றி வீசுகின்றனர்.
பெரியார் மண் அவர்களை நன்கு புரிந்தே வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருக்கிறது!
முதலமைச்சர் அவர்களுக்கு நமது பாராட்டுகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.4.2025