இந்நாள் – அந்நாள்

viduthalai
5 Min Read

பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள் இன்று (28.3.1949)
‘‘சிவக்கொழுந்து தோளில் இருந்து துண்டை எடுக்காதே’’
ஸநாதனவாதிகளுக்கு முன்பாக கர்ஜித்த அஞ்சா நெஞ்சன்

செட்டிநாட்டில் கடுமையான கோடைக் காலத்தில் நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்த தமிழிசை மேதை நாதசுரவித்வான் சிவக் கொழுந்து வேர்வையைத் துடைப்பதற்காக தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்தார். அங்கிருந்த ஸநாதானிகள் நாதசுரம் வாசிக்க வந்தவர் கீழ்ஜாதிக்காரர். எனவே மேல் துண்டு அணியக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

‘‘இது அழகு செய்யும் அங்கவஸ்திரம் அல்ல. வேர்வையைத் துடைப்பதற்காக போட்டிருக்கும் குட்டை’’ தான் என்று சிவக்கொழுந்து சொன்னதை மேல் ஜாதிக்காரர்கள் கேட்கவில்லை. ‘துண்டை கீழே போடு’ என்று அடம்பிடித்தார்கள். “துண்டை எடுக்காவிட்டால் கலவரம் செய்வோம்” என்று மிரட்டினார்கள். நாத சுரத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அழகிரி உடனடியாக எழுந்து சிவக்கொ ழுந்து ‘‘துண்டை எடுக்காதே , யார் என்ன செய்வார்கள் என்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்றார். அவரது உரத்தக் குரலால் ஸநாதனிகளின் சப்தநாடி அடங் கிப் போனது. இப்படி தளபதி அழகிரி தந்தை பெரியார் தொண்டராய் இருந்த காலத்தில் அறிவிக்கப்படாமல் நடத்திய போராட்டங்கள் அதிகம். அதில் பெற்ற வெற்றிகள் அதை விட அதிகம்.

பேச்சாளர்களுக்கு வழிகாட்டியானவர்

பட்டுக்கோட்டை அழகிரியின் பூர்வீகம் மதுரை மாவட்டம். இவர் ஒரு மேனாள் இராணுவ வீரர். கல்லூரி படிப்பெல்லாம் படித்தவர் அல்ல. புலவர் பட்டம் பெற் றவர் அல்ல. ஆனால் அவருடைய பேச்சைக் கேட்கிறவர்கள் அப்படிய அதில் ஆழ்ந்து போவார்கள். அழகிரி தொழில்முறை பேச்சாளர் அல்ல. மேடை களுக்கேற்ப தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளுகிறவரும் அல்ல. அவரே மேடைகள் போட்டிருக்கிறார். அவரே மாநாடுகள் கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். . இன்றைய மேடைப் பேச்சாளர்களுக்கு மேடைப் பேச்சில் மட்டுமல்ல அவர் வழிகாட்டி.
தளபதி அழகிரி உண்மையிலேயே தளபதி என்கிற அந்த பட்டத்துக்குரியவர் ஆவார். வெறும் வாய்ச் சொல் வீரர் அல்ல. கூட்டங்களிலேயும் – மாநாடுகளிலேயும் திராவிட இயக்கத்தை மாற்றார் தரக் குறைவாக பேசுகிறபோது அழகிரி சீட்டு எழுதி கேள்வி கேட்டும், நேரடியாக கேள்வி கேட்டும் அவர்களை வாதத்திற்கு அழைத்தும் எதிரிகளை அவர்கள் குகைகளிலேயே சென்று சந்தித்த மாவீரர்.

சமர்க்களங்கள்

அந்தக் காலத்து பொதுக்கூட்ட மேடைகள் இப்படித் தான் பலநேரங்களில் சமர்க்களங்களாக இருந்திருக்கின்றன. இதைப் போலவே பெரியார் – அழகிரி போன்றவர்கள் பேசிய கூட்டங்களில் எதிரிகள் வந்து கலவரம் செய்ததும் உண்டு. முறையாகக் கேள்வி கேட்டு வாதம் செய்ததும் உண்டு. விளக்கம் கேட்டதும் உண்டு. விழிப்படைந்ததும் உண்டு. பக்தர்களாக இருந்த பலர் பின்னாளில் தீவிர சுயமரியாதைக்காரர்களாக ஆனார்கள்.
சுயமரியாதை இயக்கக்காலத்திலேயும் – நீதிக்கட்சி காலத்திலேயும் பட்டுக்கோட்டை அழகிரிக்குப் பொப்பிலி அரசர் – பனகல் அரசர் – பித்தாபுரம் யுவராஜா – செட்டிநாடு அரசர் ராஜாசர் – தஞ்சை மாவட்டத்து பெருநிலவுடமையாளர்கள் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் – நெடும்பலம் சாமியப்பா போன்றவர்களுடனெல்லாம் நெருங்கிய தொடர்பு இருந்தது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களு டைய அரண்மனைகளுக்கும் – அரண் மனைக்குள்ளேயும் – விருந்தினர் விடுதி களுக்குள்ளேயும் போகின்ற உரிமை படைத்தவராக அழகிரி இருந்தார்.

அழகிரி – கே.ஏ. மதியழகன் சந்திப்பு

தந்தை பெரியாருக்கும் – அழகிரிக்கும் இடையில் இருந்த கருத்து மோதல்களைப் பெரிதுபடுத்தி இருவரிடையேயும் பிளவு ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால் அழகிரி எந்த கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் பெரியாரே தனது தலைவர் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை பெரியார் எடுத்த அரசியல் நிலைப்பாடு பற்றி திராவிடர் கழகம் இரண்டாக பிரியாத காலத்தில் ஒரு பிரச்சினை வந்தது. அது குறித்துப் பேச கணியூர் தோழர் கே.ஏ.மதியழகன் அழகிரியை சந்தித்தாராம். அப்போது அழகிரி நோயுற்றுப் படுத்திருந்தார். கே.ஏ.மதியழகன் அண்ணாவுக்கு நெருக்கமானவர். பின்னாளில் திமுகவில் அமைச்சராய் – சட்டப் பேரவைத் தலைவ ராய் இருந்தவர். பெரியார் எடுத்த நிலை குறித்து கழகத் தோழர்கள் பலரும் வருத்தத்தோடு இருப்பதாக அழகிரியிடம் மதியழகன் குறிப்பிட்டாராம்.
அழகிரியும் சரி – மதியழகனும் சரி உணர்ச்சிவசப்பட்டு சிலவற்றைப் பேசுகிற போது மேடையில் பேசுகின்ற அதே மொழியில் பேசுவார்கள் என்பார்கள். மதி சொன்னதைக் கேட்ட அழகிரி “தொண்டன் மனமுடைய செய்வானடா பெரியார்…… ஆனால் என்றும், அவன் தான் நம் தலைவன். அவன் தான் பெரியார்” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.

ஹிந்தி எதிர்ப்புப் படை

அழகிரி பேசுகிறபோது மேடையில் பல பாத்திரங்களாக தானே பேசி ஒருமனித நாடகமாக ஆக்குவாராம். பல நேரம் பெரியாரைப் பற்றி குறிப்பிடுகிற போது “என் தலைவன் பெரியார் இராமசாமி” என்று உரிமையோடு குறிப்பிடுவார். பட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பேருடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியினுடைய கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் ஹிந்தி எதிர்ப்புப் படை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்றது. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்ற பெண்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

செருப்பு தோரணம்

பல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.
“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஓர் உணர்வுப் பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங் கடலாயிற்று.

செருப்புத் தோரணங்களை
அவிழ்த்து எறிந்தனர்

‘‘இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்….. ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே! உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்றாராம். தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *