சென்னை, மார்ச் 20- அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் அடைவுகள் குறித்து 100 நாள் சவாலை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்து இருக்கிறது.
ஆய்வுக்கு வாருங்கள்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியபோது, தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனேகொள்ளு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி எங்கள் பள்ளி மாணவ-மாணவிகள் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள், கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை திறன்களை பெற்றுள்ளனர். எங்கள் பள்ளிக்கும் அமைச்சர் ஆய்வுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று அமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதே போல் மற்ற பள்ளிகளும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் 4 ஆயிரத்து 552 பள்ளிகள் கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் அழைப்பு விடுத்து இருந்தன. அதனையடுத்து இந்த பள்ளிகள் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் அடிப் படைத் திறன்களை கற்பித்து, பொது வெளியில் சவாலை நடைமுறைப்படுத்த கல்வித் துறை கேட்டுக்கொண்டது.
மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்
அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன்னிலையில் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் போதுமான அறிவுரைகளை அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை வழங்கி உள்ளது. இதேபோல், மற்ற பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளை நோக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இது ஓர் ஊக்குவிப்பாக அமையும் எனவும், இந்த கற்றல் அடைவுத்திறன் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் அல்லது 2ஆவது வாரத்தில் மேற்கொள்ளவேண்டும் எனவும் கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது.