தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் அடுத்த கட்ட பரிணாமம்

Viduthalai
2 Min Read

ஜாதிவாரியாக இல்லாமல் அனைவரும் வைக்கம் மகாதேவர் கோயிலுக்குள் ஒன்றாகப் பூஜை

கொச்சி, மார்ச் 12 வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், வைக்கம் மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள பொதுவெளிகளுக்கு அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் செல்ல தடையிருந்ததை எதிர்த்து நடைபெற்ற அறவழிப் போராட்டத்தை நினைவுகூரும் விதமாகவும், ஜாதி அமைப்புகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வரும் ‘‘வடக்கும்புரத்து பாட்டு சடங்கில்’’ ஜாதி வரிசைப்படி நடக்கும் பூஜைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து எடுத்துள்ளனர்.

திருவிழாக்களின் போது, பெண்களும், சிறுமிகளும் எண்ணெய் விளக்குகள் மற்றும் பூக்களைச் சுமந்து செல்லும் ‘தலப்பொலி’ என்ற சடங்கு ஊர்வலத்திலும், நீண்ட கைப்பிடியுடன் கூடிய எண்ணெய் விளக்கைச் சுமந்து செல்லும் ‘குத்துவிளக்கு’ என்ற சடங்கு ஊர்வலத்திலும் பங்கேற்கும் உரிமையை கோவில் நிர்வாகம் ஜாதி வாரியாகப் பிரித்து வைத்தது. தற்போது வடக்கும்புரத்து பாட்டு ஏற்பாட்டுக் குழு அனைத்து ஜாதியினரையும் ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
கொடுங்கல்லூர் பரணி எனப்படுகின்ற நாளில் 12 நாள் திருவிழா தொடங்குகிறது. இந்த ஆண்டு, திருவிழா ஏப்ரல் 2 அன்று தொடங்கி ஏப்ரல் 13 அன்று நிறைவடையும்.

வைக்கம் மகாதேவர் கோவிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கொச்சலும்மூடு கோவில் என்ற சிறிய கோவில் உள்ளது. கொடுங்கல்லூர் பகவதியின் சிலை ‘குத்துவிளக்கு’ ஏந்திய 64 பெண்களின் பெரிய ஊர்வலத்தில் மகாதேவர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படும். ஊர்வலம் கோவிலுக்குள் நுழைந்த பிறகு, பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களுக்கிடையே அம்மனின் உருவப்படம் தரையில் வண்ணங்களில் வரையப்படும். ஏற்ெகனவே, நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ‘குத்துவிளக்கு’ ஊர்வலத்தில் நான்கு நாள்கள் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டிருந்தது, மேலும் தீவரா சமூகத்திற்கு இரண்டு நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈழவர், புலையர், விஸ்வகர்மா மற்றும் வணிக வைசிய சமூகம் போன்ற சமூகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருந்தது.

‘‘இந்த ஆண்டு நாங்கள் அனைத்து ஜாதி அமைப்புகளையும் தொடர்பு கொண்டு, ஜாதிப் பாகுபாடின்றி அனைத்துப் பக்தர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி னோம். அவர்கள் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டனர். எனவே, 12 நாள்களிலும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் பங்கேற்பை உறுதி செய்ய நாங்கள் அவர்கள் அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பினோம்,” என்று ஏற்பாட்டுக் குழு செயலாளர் பி.சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *