பைபர் படகுகளில் கச்சத்தீவு செல்ல அனுமதி கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

viduthalai
2 Min Read

மதுரை, மார்ச் 8- கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திற்கு பைபர் படகுகளில் செல்ல அனுமதி கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு முடி வெடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு 6.3.2025 அன்று உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரின்சோ ரேமண்ட், ‘உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் திரு விழா மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் நடை பெறுகிறது. கச்சத்தீவு திருவிழாவுக்கு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இயந்திரம் பொருத்திய நாட்டு படகுகளில் மீனவர்கள், பொதுமக்கள் சென்று வந்தனர்.

கடந்த 2013இல் இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு செல்வது பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறி தடை விதிக்கப்பட்டது. பின்னர் விசைப்படகுகளில் நபருக்கு ரூ.1300 கட்டணம் வசூலிக்கப்பட்டு கச்சத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பைபர் படகுகளுக்கு மாறினர்!

இதையடுத்து மோட்டார் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மீனவர்கள், மீனவ குடும்பங்கள் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகுகளில் அந்தோணியார் ஆலயத் திருவிழா செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மீனவர்கள் இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகளுக்கு பதிலாக இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு மாறிவிட்டனர்.

பைபர் படகுகள் நாட்டுப்படகுகளுக்கு சமமானது. பைபர் படகுகளில் செல்லும் போது எரிபொருள் செலவு மிச்சமாகும். ஒரு பைபர் படகில் 10 பேருக்கு மேல் செல்ல முடியும். எனவே கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளில் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஒன்றிய அரசின் கடமை

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.சிறீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில், கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் மீனவர்கள், பொதுமக்களுக்கு இந்திய கடல் எல்லை வரை பாதுகாப்பு கொடுப்பது ஒன்றிய அரசின் கடமை. எந்த படகுகளில் பக்தர் களை அழைத்து செல்வது என்பதை மாநில அரசு முடிவெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில், “பைபர் படகு மிகவும் உயரம் குறை வாக இருப்பதால், பைபர் படகில் செல்வது பாதுகாப்பாக இருக்காது. இதனால் தான் பைபர் படகுகளில் செல்ல அனுமதிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பரி சீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *