புதுடில்லி,மார்ச்3- விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது.
மிகப் பெரிய இந்த திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக் கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வு அதாவது ‘விண்வெளி டாக்கிங் பரி சோதனை’க்காக இஸ்ரோ ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக் கோள்களை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப் பின் கடந்த ஜனவரி 16ஆம் தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக் கோள்களையும் ஒன்றாக இணைத்தது.
இதன் மூலம் ரசியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.
இந்த நிலையில் விண் வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள்களை தனித்தனியாக பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய திட்ட மிட்டு உள்ளது. இந்த பணி வருகிற 15ஆம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த இந்திய அறிவியல் கொண்டாட்டத்தில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விண்வெளி டாக்கிங் மூலம் ஒன்றிணைக்கப் பட்ட செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப் பாதையில் உள்ளது. எனவே 2 மாதங்களுக்கு ஒருமுறை நமக்கு 10 முதல் 15 நாட்கள் இடைவெளி கிடைக்கும்.
எனவே மார்ச் 15ஆம் தேதியில் இருந்து செயற்கைக் கோள் இணைப்புக்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கும் தற்போது செயற்கைக் கோள்களைப் பிரித்து மீண்டும் இணைப்பதற்கான உருவகப்படுத்துதல் (சிமுலேஷன்) பரிசோதனைகளை நாங்கள் செய்து வருகிறோம். பின்னர் 15ஆம் தேதி முதல் ஸ்பேடெக்ஸ் பரிசோதனைகளை தொடங்குவோம்.
இந்த விவகாரத்தில் பல்வேறு பரிசோதனை களை செய்ய விரும்புகிறோம். செயற்கைக் கோள்களில் அதிகமான உந்துவிசை இருக்கிறது.
எனவே 2 மாதங் களுக்குப் பிறகு கிடைக்கும் மூன்றாவது பகுதிக்கான சோதனைகளையும் நாங்கள் வரிசையாகக் கொண்டுள்ளோம்,
சந்திரயான்-4 மற்றும் இந்திய விண்வெளி நிலையம் நிறுவுதல் போன்ற ஏராளமான எதிர்கால திட்டங்களுக்கு இந்த ஸ்பேடெக்ஸ் திட்டம் ஒரு முன்னணி பரிசோதனை ஆகும்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.