வல்லம், மார்ச் 2 வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் மகளிர் பொறியியற் கல்லூரியாக இருந்த காலத்தில் படித்த மேனாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி 28.2.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரா த.கவிதா (தலைவர் மேனாள் மாணவர்கள் சங்கம்) வரவேற்புரையாற்றும் போது மேனாள் மாணவர்கள் தங்களுடைய அனுபவத்தை எடுத்துக் கூறும்படியும், இப்பொழுது வளர்ந்துள்ள தங்களுடைய நிலையையும் எடுத்துக்கூறும்படியும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மேனாள் மாணவர்கள் உரையாற்றும்போது ‘‘இப்பல்கலைக்கழகம் எங்களுக்கு தன்னம்பிக்கை, தனித்திறமை, ஆற்றல், நல்ல கல்வி கற்றல், பகுத்தறிவு சிந்தனை உள்ளடக்கி எங்களை அவ்வழியில் முன்னேற வழிவகுத்தது’’ என்று உரையாற்றினார்கள்.
பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது: ‘‘பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியாக தொடங்கி இன்றைக்குப் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். மேனாள் மாணவர்கள் ‘‘மீண்டும் சந்திப்போம்’’ என்ற நிகழ்ச்சியில் கூறிய உங்களது கருத்து களையெல்லாம் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஒரு காலத்தில் பெண்களெல்லாம் பேசக்கூடாது என்று இருந்த காலத்தில் இன்று வாழ்நாள் பூராவும் பெண்கள் பேசும் குரல், அந்தக் குரலாக பெரியார் உள்ளார். பெண்களுக்காக அன்று துவக்கிய பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி பெரியார் மணியம்மை அறக்கட்டளை மூலம் துவங்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் பெண்களாகிய உங்கள் கையில் பேனா இருந்திருக்குமா? கரண்டி தான் இருந்திருக்கும். பேனாதான் இவ்வுலகத்தை ஆள பெண்களாகிய உங்களுக்குப் பயன்பட்டுள்ளது. நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்நாட்டில் நமது மேனாள் மாணவர்களை சந்திக்க நேரிடுவது மிக்க மகிழ்ச்சியுடையதாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.
மேனாள் மாணவர்கள் ரூ. மூன்று லட்சத்து இருபத்து அய்யாயிரத்திற்கான காசோலையை வேந்தர் அவர்களிடம் நன்கொடையாக வழங்கினர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன், பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேனாள் மாணவர்கள் பல்கலைக்கழக வேந்தர் அவர்களிடம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் நன்கொடையை காசோலையாக வழங்கினர்.
*பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியில் 1995 ஆம் ஆண்டு படித்து முடித்த மேனாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். *கடலூர் கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் மரக்கன்றினை பல்கலைக்கழக வளாகத்தில் நட்டனர்.