”ஹிந்தித் திணிப்பு என்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வது போன்றது” ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!
இராசபாளையம், பிப். 27- இராஜபாளையம் முரம்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் ”ஹிந்தித் திணிப்பு என்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வது போன்றது” என்று ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை ஆற்றினார்.
இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்குப் பாராட்டு விழா – பொதுக்கூட்டம்” இராசபாளையம் முரம்பு பேருந்து நிலையம் மேல் புறத்தில் 26.02.2025 அன்று மாலை 6 மணியளவில் கழகக் கொடிகள், பதாகைகள், கருப்பு சிவப்பு பலூன்கள் அலங்கரிப்பு என்று மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கத்தில் இராசபாளையம் மாவட்ட கழகத் துணைத் தலைவர் பூ.சிவக்குமார், “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சியை செய்து காட்டினார்.
பாவாணர் சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் மாலை
மாலை 7 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வருகை தந்தார். பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேடைக்கு அருகிலிருந்த பாவாணர் படிப்பகத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கிருந்த திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் சிலைக்கு கழகத் தலைவர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த பார்வையாளர்கள் குறிப்பேட்டில் தனது கருத்தைப் பதிவு செய்தார். அதே பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வந்தனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள். கொள்கை ஒலி முழக்கங்கள் ஓங்கி ஒலிக்க மேடையேறினார் ஆசிரியர். பார்வையாளர்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி விட்டு அமர்ந்தார்.
தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஞானராசு தலை மையேற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தர வேண்டும் என்று நிகழ்ச்சியில் இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்த இராசபாளையம் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி முன்மொழிந்தார். அதை விருதுநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் வழிமொழிய முறைப்படி நிகழ்ச்சி தொடங்கியது. பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பெத்தையா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் முத்தரசன் ஆகியோர் அடுத்தடுத்து அனைவரையும் வரவேற்று உரையாற்றினர். தொடர்ந்து சீர்மரபினர் நல வாரியத்தின் துணைத் தலைவர் இராசா அருண்மொழி, காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் அ.ரெங்கசாமி, ம.தி.மு.க. மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் குருசாமி, தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி வழக்குரைஞர் ப.குணாளன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
முன்னிலையேற்று சிறப்பித்தவர்கள்!
கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் முருகேசன், தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் முனீஸ்வரன், தி.மு.க. ஒன்றிய இளைஞரணிப் பொறுப்பாளர் இமானுவேல், இராசபாளையம் மாவட்டச் செயலாளர் கோவிந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சாத்தூர் அசோக், விருதுநகர் மாவட்டத் தலைவர் நல்லதம்பி, மாவட்டக் காப்பாளர் தங்கசாமி, தி.மு.க. தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கா.முருகேசன் ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.
மரத்தைக் குடைந்து உருவான சிலைகள் தமிழர் தலைவரிடம் பரிசாக வழங்கல்
முன்னதாக கழகத் தலைவருக்கு முன்னிலை ஏற்று சிறப்பித்த பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். முரம்பு தந்தை பெரியார் குருதிக்கொடைக் கழகத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு கழகத் தலைவர் நினைவுச் சின்னம் வழங்க, சீர்மரபினர் நல வாரியத் துணைத்தலைவர் இராசா அருண்மொழி பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தனர். விருது பெற்ற அனைவரும் மேடையிலிருந்த தலைவர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று சிறப்பித்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஞானராசு, முத்தையா, பெத்தையா ஆகியோர் ஆசிரியருக்கு மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகிய உருவங்களை நினைவுப் பரிசுகளாக வழங்கினர். அதைத் தொடர்ந்து ஆசிரியர் இராசா அருண்மொழி, ஞானராசு, பெத்தையா, முத்தரசன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் நெடுஞ்சேரலாதன், மாவட்டத் தலைவர் இல.திருப்பதி ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
ஆரியத்தின் கொட்டத்தை அடக்கும் படிப்பகங்கள்!
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார். தொடக்கத்தில் இது ஒரு பொதுக்கூட்டம் என்றாலும், மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டம் என்று தொடங்கி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த தோழமைக் கட்சித்தோழர்களுக்கு பாராட்டைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் அவர்களுக்கும், தந்தை பெரியாருக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் இருந்த தொடர்பை விவரித்தார். அங்கு நடத்தப்பட்டு வரும் பாவாணர் நூலகத்தை சிறப்பிக்கும் வகையில் பேசிவிட்டு, “எவ்வளவுக்கு எவ்வளவு இதுபோன்ற படிப்பகங்கள் சிறப்பாக நடைபெறுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆரியத்தின் கொட்டம் அடங்கும்” என்று படிப்பகங்களை பராமரிப்பதின் விளைச்சலை விளக்கினார். அஞ்சல் தலை வெளியிடும் பட்டியலில் பாவாணர் பெயர் இல்லாததை சுட்டிக் காட்டி ‘விடுதலை’யில் பெட்டி செய்தி வெளியிட்டதையும், முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உடனடியாக அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்த வரலாற்றுச் சுவடுகளையும் எடுத்துரைத்தார். பாவாணருக்கு சிறப்பு செய்த கலைஞர் தான் பின்னாளில் எம் மொழியாம் தமிழ் மொழியை செம்மொழி ஆக்கினார் என்பதை சுட்டிக்காட்டி, “அந்த செம்மொழி நிறுவனத்தில் இன்று கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது போல் ஆரியம் தலைவிரித்து ஆடுகிறது” என்ற நடப்புத் தகவலையும் மக்கள் முன் வைத்தார்.
குருதிக்கொடையின் சிறப்பும் கழகத் தலைவரின் வாழ்த்தும்!
மேலும் அவர், தந்தை பெரியார் குருதிக்கொடைக் கழகத் தோழர்கள் 30 க்கும் மேற்பட்டோர் சிறப்பிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து, குருதிக்கொடையின் சிறப்பில் ஜாதி ஒழிப்பும் இருப்பதை தவறாமல் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் சிறப்பான மருத்துவக் கட்டமைப்புக்கு இந்த குருதிக்கொடையின் தொடர்ச்சியாக உறுப்புக்கொடை, உடற் கொடை என்று வளர்ச்சியில் தமிழ்நாடு இதில் முன்னிலையில் இருப்பதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் தான் என்று திராவிடர் இயக்கத்தின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துரைத்தார். உடற் கொடையைப் பற்றிச் சொன்னதும், உடலின் உறுப்புகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டிவிட்டு, ”ஆத்மா உடலில் எங்கே இருந்தது?” என்று தந்தை பெரியார் கேட்ட ஒரு கேள்வியை முன்வைத்து, அதன்பிறகு ஆத்மாவை தமிழ்ப் புலவர்களால் ஆன்மா ஆனதையும், அதுவே ஆன்மிகம் ஆனதையும் சொல்லி, ஆன்மிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் கீதையில் இது முதன்மைப் படுத்தப்பட்டுள்ளதையும், அதே கீதைதான் சூத்திரர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொல்கிறது என்றும் இதைத்தான் அரசியலில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஆபத்தையும் தவறாமல் சுட்டிக்காட்டினார்.
கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்து கொள்ளாதீர்!
மேலும் அவர், இதற்கெல்லாம் காரணமாக இருந்த ஆரியர்கள் இங்கு வந்தேறிகளாக வந்ததையும், அப்படி வரும்போது மனுஸ்மிருதியை கையோடு எடுத்து வந்ததையும் அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற நூலின் தொடக்கத்தில் இருந்த பகுதியைப் படித்துக் காட்டினார். அதில்தான் ‘எதைக்கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே’ என்று இருக்கிறது. ”இதைப் போக்கத்தான் சுயமரியாதை இயக்கம் தோன்றியது” என்று நூற்றாண்டு கால வரலாற்றின் சுவடுகளை நினைவுபடுத்தினார். நூற்றாண்டுகளுக்கு பிறகு அதே சுயமரியாதை இயக்கம் இரத்தம் சிந்தாமல் சாதித்துக்காட்டியதை எடுத்துரைத்தார். தொடர்ந்து இன்றும் நாம் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர் கொண்டிருப்பதை சுட்டிக்காட்ட, மும்மொழிக்கொள்கைத் திணிப்பையும், ஒன்றிய அரசின் அடாவடித்தனத்தையும் எடுத்துரைத்து, 1937 இல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போர் வரலாற்றை நினைவூட்டி, “ஒன்றிய அரசு கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொள்ளக்கூடாது” என்று எச்சரித்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து இராசபாளையம் மாவட்டச் செயலாளர் இரா.கோவிந்தன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தோழர்கள் மற்றும் முரம்பு பகுதியிலுள்ள ஏராளமான ஆண்கள் அதற்குச் சமமாக பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கழகத் தலைவர் முரம்பு பகுதியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.