சென்னை, பிப்.16 ‘கூட்டணிக் கட்சி களின் கருத்துகளை நான் ஆலோசனையாகத் தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப் பதில்லை’ என முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் வீடியோ வடிவில் நேற்று (15.2.2025) வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை வருமாறு: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், “தலைவர்” என்று அழைக்கிறார்கள். முதல்வர் பொறுப்பில் இருப்பதனால், “முதல்வர்” என்றும் அழைக்கிறார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை “அப்பா” என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறுயாராவது வருவார்கள்.
ஆனால், இந்த “அப்பா” என்ற உறவுமாறாது. அந்தச் சொல், என்னு டைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது!
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந் திருககிறது. தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?
தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக் கணிக்கிறார்கள்! கடந்த சில ஆண்டு களாகவே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை! பெயர்கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளி விவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்.
ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக் கிறார்கள்; மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்து கொண்டிருந்தாலும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால் தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்!
நம்முடைய மாணவர்கள் படிப்ப தற்கான நிதியைக்கூடகொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவேகொடுத்துக் கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது? இவ்வாறு ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது; நாமும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்! இதில், நம்முடைய உரிமையைக் கேட்பதையே “அற்பசிந்தனை” என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது!
கூட்டணிக் கட்சிகளின் கருத்து களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா?
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க் கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவ லகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம் தான்.
2019இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ., வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது தி.மு.க., தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.