அய்யப்பன் காப்பாற்றவில்லையே! 3 அய்யப்ப பக்தர்கள் உள்பட 9 பேர் பலி: 19 பேர் படுகாயம்

Viduthalai
2 Min Read

சென்னை,பிப்.16- தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 அய்யப்ப பக்தர்கள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் படுகாய மடைந்தனர்.
சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் ஒன்றிணைந்து பேருந்து ஏற்பாடு செய்து சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்களின் பேருந்து தேனியை அடுத்த மதுராபுரி அருகே திண்டுக்கல் -– குமுளி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே சபரிமலை சென்று விட்டு திரும்பிய கருநாடகா மாநில பதிவெண் கொண்ட டெம்போ வேன், பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஓசூரை சேர்ந்த கணேஷ் (7), நாகராஜ் (40), கிருஷ்ணகிரியை சேர்ந்த சூர்யா (23) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம்(47). குழாய் பதிக்கும் பணிக்காக 15.2.2025 அன்று சிறீவில்லிப்புத்தூரிலிருந்து ராதாகிருஷ்ணன்(47), சின்னமுனியாண்டி(45) மற்றும் கருமலையான்(35) ஆகியோரை அழைத்துக் கொண்டு குத்தாலிங்கம், தனது காரில் ராமநாதபுரம் வந்துள்ளார்.
ராமநாதபுரம் அரசு சேதுபதி கலை கல்லூரி அருகே கார் வந்தபோது, எதிரே ராமேஸ்வரத் திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் வைக்கோலை வாங்குவதற்காக கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (37), பழனி (37), பிரகாஷ் (30) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவகோட்டை தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வேனும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதின. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த முத்துகிருஷ்ணன், பழனி ஆகியோர் இறந்தனர், பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

இரு சக்கர வாகனம் மோதி காவலர் சாவு
திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைக்கிராமத்தில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (43). இவர் ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நள்ளிரவு பணி முடிந்து ஆம்பூரில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றார். வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நியூடவுன் மேம்பாலத்தை கடந்தபோது திடீரென இவரது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி அங்குள்ள தடுப்புக் கம்பியில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட காளிதாஸ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *