மும்பை,பிப்.16- இந்தியாவில் ஜிபிஎஸ் (GBS) என்ற நரம்பியல் கோளாறால் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராட்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார ப்பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது.
இந்த (GBS) நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கக் கூடியது. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்.
இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த குறிப்பிட்ட நோய் பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மகாராட்டிராவில் மேலும் இரண்டு பேருக்கு ஜிபிஎஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், உறுதிப்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 205அய் எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மகாராட்டிரா மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய் காரணமாக இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். எனவே, மக்கள் மத்தியில் மீண்டும் பீதிநிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில்கூட அதானியின் ஊழலை வளர்க்கும் பிரதமர் மோடி
ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
புதுடில்லி,பிப்.16- அதானி விவகாரத்தில் இந்தியாவில் மவுனம் காப்பதும், வெளிநாடுகளில் அது தனிப்பட்ட பிரச்சினை என நழுவிக் கொள்வதும் பிரதமர் நரேந்திர மோடியின் வாடிக்கையாக உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடியிடம் அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் ட்ரம்ப்புடன் விவாதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தனிப்பட்ட பிரச்சினைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். இது அவரது வழக்கமான பதிலாகவே உள்ளது.
அதானியைக் காப்பாற்றும் மோடி
அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினால் அமைதியாக இருப்பதும், வெளிநாட்டில் கேள்வி எழுப்பினால் அது தனிப்பட்ட பிரச்சினை என்று கூறி தப்பித்துக் கொள்வதும் பிரதமர் மோடியின் தந்திரமாக உள்ளது. அமெரிக்காவிலும் அதானியை காப்பாற்றும் வேலையைத்தான் பிரதமர் மோடி செய்து வருகிறார்.
தேசத்தை கட்டமைக்கிறோம் என்ற பெயரில் மோடிஜி அவருடைய நண்பர் அதானியின் பாக்கெட்டை நிரப்பி வருகிறார். லஞ்சம் மற்றும் தேசத்தின் சொத்துகளை கொள்ளையடிப்பதை பிரதமர் வசதியாக தனிப்பட்ட விடயமாக மாற்றி வருகிறார். இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் சோலார் மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெற 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டேர் மீது கடந்த நவம்பரில் அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.