800 ஆண்டு பழைமை வாய்ந்தபாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

viduthalai
2 Min Read

மதுரை,பிப்.15- மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் மலைச்சரிவில் இருந்த 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் ஒன்றிய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

கல்வெட்டுகள்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கருங்காலக்குடி அருகே அமைந்துள்ளது கம்பூர் கிராமம். கம்பூரின் மேற்கு புறத்தில் அமைந்துள்ள வீரக்குறிச்சி மலையில் 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் உள்ளதாக தகவல் அறிந்த ஒன்றிய தொல்பொருள் துறையினர் கம்பூர் கிராமத்திற்கு சென்று 3 கல்வெட்டுகளையும் மை படி எடுத்தனர். கல்வெட்டுக்கள் வீரக்குறிச்சி மலையின் தெற்கு சரிவில் அடுத்தடுத்து ஒட்டினாற் போல காணப்படுகின்றன.

இடது ஓரத்தில் உள்ள முதல் கல்வெட்டில் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியனின் 7ஆம் ஆட்சியாண்டான கி.பி.1223இல் சிவன் கோயிலுக்கு பாஸ்கரன் என்னும் படைத் தலைவன் நிலக் கொடை அளித்துள்ளதையும், திரமம் என்னும் காசு ஒன்றும் கோயிலுக்கு கொடையாக கொடுக்கப்பட்டுள்ளதுமான செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கல்வெட்டு, அதே பாண்டிய மன்னனின் 12ஆவது ஆட்சி ஆண்டான கி.பி.1228இல் கம்பூர் மக்களும் தென்ன கங்கத்தேவன் என்னும் இப்பகுதியின் தலைவரும் சேர்ந்து இங்கு இருக்கும் அறைச்சாலை பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக நிலத்தை கொடையாக, படைத்தலைவன் பாஸ்கரனுக்கு அளித்திருக்கும் தகவல் இடம்பெற்றுள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் மேற்கண்ட அதே பாண்டிய மன்னான முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நிலக்கொடை தரப்பட்டுள்ள குறிப்பு இடம் பெற்றுள்ளது. கம்பூர் என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூர் முற்கால வழக்கத்தில் கம்பவூர் எனவும் தற்சமயமுள்ள நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி முன்பு துவாரபதி நாடு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளதை கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மூலம அறிந்து கொள்ளமுடிவது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய தொல்பொருள் துறையின் தமிழ் கல்வெட்டு பிரிவிலிருந்து உதவி கல்வெட்டு ஆய்வாளர், ஜெ.வீரமணி கண்டன், மெய்ப்படியாளர்கள் சொ.அழகேசன், அ.காத்தவ ராயன், ஆகியோர் சுமார் 5 மணி நேரம் முயற்சி செய்து கல்வெட்டுகளை படி எடுத்தனர். சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, சூழலியல் மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் கம்பூர் செல்வராஜ், பால் குடி கதிரேசன், ராஜா என்ற பிச்சைமுத்து உள்ளிட்டோர் மேற்கண்ட ஆய்விற்கு உதவியாக இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *