சென்னை,பிப்.12- தமிழ்நாடு அரசு 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 57 ஆயிரம் குடும்பங்களுக்கும் பட்டா வழங்கவும் ஒட்டுமொத்தமாக 86 ஆயிரம் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிட தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட்
மாநில செயலாளர் இரா.முத்தரசன்
ஆட்சேபம் இல்லாத நிலங்களில் வசித்து வரும் 86 ஆயிரம் குடும்பங்களுக்கு, அடுத்த 6 மாதங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். ஆட்சேபனைக்குரிய இனங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் ஆய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வெயில் கொடுமை
தொழிலாளர்களுக்கு மதியம் 12 முதல்
3 மணி வரை கட்டாய ஓய்வு
திருவனந்தபுரம்,பிப்.12- கேரளாவில் வெயில் சுட்டெரித்து வருவதை தொடர்ந்து திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 முதல் 3 மணி வரை ஓய்வு வழங்க கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரளாவில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது சராசரியை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.
பணி நேரம் மாற்றம்
இதனால் கட்டடத் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள் உள்பட திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மே 10ஆம் தேதி வரை பணி நேரத்தை மாற்றியமைத்து கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள நேரத்தில் பணி நேரம் 8 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வு வழங்க வேண்டும்.
நேர முறை (ஷிப்ட்) அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 மணியுடன் முடியும் வகையிலும், 3 மணிக்கு தொடங்கும் வகையிலும் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கேரள தொழிலாளர் நலத்துறை ஆணையர் சப்னா நசருதீன் உத்தரவிட்டுள்ளார். கடல் மட்டத்திற்கு 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சூரியனின் தாக்கம் அதிகம் இல்லாத இடங்களில் இந்த மாற்றங்களை அமல்படுத்த தேவையில்லை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் பரப்பை அதிகரிக்க
மெரினா அணுகு சாலையில் 1000 புன்னை மரங்கள்
சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை,பிப்.12- பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் அணுகு சாலையை ஒட்டிய பகுதிகளில் புன்னை மரங்களை நடுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி பகுதியில், ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. பசுமை சென்னை, தூய்மை சென்னை, எழில்மிகு சென்னை ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், பசுமை சென்னை திட்டத்தின் கீழ் மரங்கள் நடுதல், தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
பசுமைப் பரப்பு
மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பசுமை சென்னையின் கீழ் தீவிர தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, மெரினா கடற்கரையை அழகுபடுத்தி, பசுமைப் பரப்பை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தளமான மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் ஒருசில இடங்களில் மட்டுமே மரங்கள் உள்ளன. மற்ற இடங்களில் மரங்கள் இல்லாமல் வெறுமையாக காட்சி அளிக்கிறது. அணுகு (சர்வீஸ்) சாலையை ஒட்டிய பூங்காக்கள் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
புன்னை மரங்கள்
அணுகு (சர்வீஸ்) சாலையில் மரங்கள் அமைத்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே, பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் அணுகு (சர்வீஸ்) சாலையை ஒட்டிய பகுதிகளில் புன்னை மரங்களை நடுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, மெரினா நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் ஆயிரம் புன்னை மரங்கள் நடப்பட உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரங்கள் நடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரை பகுதியை பசுமையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அணுகு (சர்வீஸ்) சாலையின் 2 பக்கங்களிலும் ஆயிரம் புன்னை மரங்கள் நடப்பட உள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கும்.
மாநகராட்சி பராமரிக்கும்
ஒவ்வொரு இடத்திலும் 6 அடி முதல் 7 அடி வரையில் வளர்ந்த புன்னை மரங்கள் நடப்படும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளினால் சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பான தடுப்புகள் அமைக்கப்படும். புன்னை மரம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரம். கடற்கரை பகுதிகளில் இது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. அதனாலேயே புன்னை மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியே இதை பராமரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.