மத்திய செம்மொழி நிறுவனம் என்ற பெயரில் அகத்தியர் புராணக் கட்டுக்கதைகளைத் திணிப்பதா?
‘‘அகத்தியர் ஆராய்ச்சி’’ என்ற நூலை 1931 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார்!
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!
தமிழின்மீதான ஆரியப் பண்பாட்டுக் கண்டன மாநாட்டினை
இதே இடத்தில் வரும் ஏப்ரலில் தொடங்குவோம்!
சென்னை, பிப்.9 மத்திய செம்மொழி நிறுவனம் என்ற பெயரில் அகத்தியர் புராணக் கட்டுக்கதைகளைத் திணிப்பதா? ‘‘அகத்தியர் ஆராய்ச்சி’’ என்ற நூலை 1931 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார்! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்! தமிழின்மீதான ஆரியப் பண்பாட்டுக் கண்டன மாநாட்டினை இதே இடத்தில் வரும் ஏப்ரலில் தொடங்குவோம் என்று போர் முழக்கம் செய்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின்
90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
நேற்று (8.2.2025) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பெருங்கவிக்ேகா வா.மு.சேதுராமன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இதுவரையில் தமிழ்நாட்டில் களங்காணுவது மொழிப் போருக்காக நின்றோம்; பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்துப் போராடினோம். இப்பொழுது புதிதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் தத்துவத்தில் வருகின்றபொழுது, ஒரு கூட்டம் வடக்கே இருந்து புதிதாக, தமிழ் இலக்கியத்தில், தமிழ் இலக்கணத்தில் உள்ளே நுழைந்து, இலக்கணத்தைக்கூட தொல்காப்பியர் எழுதவில்லை; யார் எழுதினார்கள் என்று சொன்னால், வடக்கே அகத்தியர்தான் எழுதினார். இவையெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்துதான் வந்தது என்று சொல்கிறார்கள்.
சமஸ்கிருதத்துக்கு செம்மொழி
தகுதி கிடைத்தது தமிழால்தான்!
சமஸ்கிருதமே கூட இன்றைக்கு செம்மொழி என்ற தகுதியை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசில் பெற்றது யாருடைய தயவால் என்றால், கலைஞர் அவர்கள் தமிழுக்கு அந்தத் தகுதியை வாங்கிய பிறகு, அதைப் பார்த்து அடுத்தாண்டுதான் சமஸ்கிருதத்திற்கு செம்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
எனவே, தமிழால் பயன்பட்டவர்கள்.
‘‘நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடிப், புல்லுக்கும் ஆங்கே பொசியமாம்” சிறிய வயதில் படித்தி க்கின்றோம்.
புல்லுக்கும் ஆங்கே பொசிந்தது; ஆம், தர்பப்பைப் புல்லுக்கும் ஆங்கே பொசிந்தது. அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
நம்முடைய அரசாங்கத்தினுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறார்கள் என்றால், தொல்காப்பியருக்கே சொல்லிக் கொடுத்தவர் அகத்தியர். வடமொழியிலிருந்துதான் எல்லாம் வந்தது என்று சொல்கிறார்கள்.
ஸ்ரீவல்லவர்தான், திருவள்ளுவர் ஆனார்; வடமொழி யிலிருந்துதான் வந்தது என்று சில நாகசாமிகள் எல்லாம் பேசிய நேரத்தில், களங்கண்டவர்கள், எதிர்நின்றவர்களில் இன்றைக்குப் பிறந்த நாள் விழா நாயகர் நம்முடைய அருமை பெருங்கவிக்கோ அவர்கள்.
இன்றைக்கு மீண்டும் அந்தப் பணி வந்திருக்கிறது; என்ன அந்தப் பணி என்றால், செம்மொழி நிறுவ னம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு, அந்த செம்மொழி யைப்பற்றிக் கவலைப்படாமல், புராணங்களையெல்லாம் இன்றைக்கு வரலாறாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைக்குத் தமிழர்கள், தமிழ் வாழ்க என்றால் மட்டும் போதாது; தமிழுக்கு யார் யார் தொல்லை கொடுக்கிறார்கள்; யார் யார் அதனை அழிக்க முயலுகிறார்கள் என்பதை அடையாளங் காணவேண்டும்.
முன்னாளில் அழிக்க வந்தவர்கள் வெளிப்படையான எதிரிகள்; ஆனால், இப்போது வருகின்றவர்கள் வெளிப்படையான எதிரிகள் அல்ல.
விஷத்தில்கூட இரண்டு வகை உண்டு. ஒன்று, குடித்தவுடன் இறந்து போவது; அது பளிச்சென்று தெரியும், கண்டுபிடித்து விடுவார்கள்.
பண்பாட்டுப் படையெடுப்பு
மிகவும் ஆபத்தானது!
இரண்டாவது, மெல்ல மெல்ல கொல்லும் நஞ்சு. அதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
‘‘வஞ்சகர் வந்தார்; தமிழால் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்த பின்
தமிழையே பழித்தார்”
என்று சொல்லக்கூடிய அளவிற்கு, தமிழனே இது கேளாய் என்று நீண்ட நாள்களுக்கு முன்பாக புரட்சிக்கவி ஞர் அவர்கள் கேட்டார்கள்.
அதுபோல, பண்பாட்டுப் படையெடுப்பு இருக்கிறதே, அது மிகப்பெரிய ஆபத்தானதாகும். வள்ளுவருக்கு சாயமடித்தார்கள்; வள்ளலார்பற்றியும் திரித்தார்கள். இலக்கியமே உங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். இப்பொழுது இலக்கணமேகூட தொல்காப்பியர் எழுதவில்லை; அகத்தியர்தான் எழுதினார் என்ற சொல்கிறார்கள்.
எனவே, புராணீகத்தில் அந்தக் காலத்தில் கதைகளாக ஆரம்பிக்கப்பட்டது. ‘மித்தாலஜி’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இருக்கிறது; ‘மித்’ என்று சொன்னாலே, நம்ப முடியாதது என்று அர்த்தம். இட் இஸ் எ மித் என்று சொன்னால், புரட்டு என்று அர்த்தம்.
அந்தக் காலத்து கதைகளையெல்லாம் இன்றைக்கு அறிவியல் உருவமாக ஆக்கிக்கொண்டு, இதுதான் வரலாறு, வரலாறு, வரலாறு என்று சொல்கிறார்கள்.
இப்போது ஏற்பட்டிருக்கின்ற அமைப்பு, காவிச் சாயம் அடித்துக் கொண்டிருப்பவர்கள். தவத்திரு அடிகளார் போன்ற நல்லவர்கள் எத்தனையோ பேர் உண்டு.
ஆனால், அவர்கள் எந்த நோக்கத்தோடு செய்கி றார்கள் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினை வூட்டவேண்டும்.
நம்முடைய பெருங்கவிக்கோ போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள், இந்த மேடையில் இருப்ப வர்கள் – அனைவருக்கும் ஏராளமான அறைகூவல்கள் உண்டு. அவற்றை சந்திக்கவேண்டிய கட்டாயமும் நம்மீது திணிக்கப்பட்டு இருக்கிறது.
அகத்தியருக்கும் – செம்மொழிக்கும்
என்ன சம்பந்தம்?
ஓர் அறிவிப்பை சொல்லவிருக்கிறேன்.
திடீரென்று செம்மொழி நிறுவனத்தில், அகத்தியர் நிகழ்வுகள் என்று சொல்கிறார்கள். அகத்தியருக்கும், செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்
இருக்கிறது?
புராணக் கருத்துகளைக் கொண்டு வந்து இங்கே வைத்தது மட்டுமல்ல- எல்லா பல்கலைக் கழகங்கள் – ஒன்றிய பல்கலைக் கழகங்களுக்குச் சுற்றறிக்கை கொடுத்து – மாணவர்களுக்குப் போட்டிகளையும், கருத்த ரங்குகளையும் நடத்த ஏற்பாடு செய்கிறார் மாலன் என்ற ஒருவர் – அவர் என்ன பெரிய தமிழறிஞரா?
செம்மொழித் துறையில் துணைத் தலைவராக இருக்கிறார் ஒரு பார்ப்பன அம்மையார் அவர்கள்- நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக நினைக்கவேண்டாம்; தனிப்பட்ட முறையில் யாரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. தத்துவ ரீதியாக, கொள்கை ரீதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
எத்தனையோ பேர் தகுதிவாய்ந்தவர்கள் இருக்கி றார்கள்; தமிழாய்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தமிழ்த் துறைக்குச் சம்பந்தமே இல்லாத – வேறொரு துறையில் இருப்பவரை, செம்மொழி நிறுவனத்திற்கு நியமித்திருக்கிறார்கள்.
எங்கெங்கெல்லாம் மத்திய பல்கலைக் கழகங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அகத்தியர் விழா குறித்து பேசுகிறார்கள்.
முதன்முதலில் இதனை சென்ற மாதமே ‘விடுத லை’யில்தான் செய்தி வெளியிட்டோம். ‘‘செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் அகத்தியர் விழாவா?” என்று.
உதாரணத்திற்கு ஒன்று சொல்லவேண்டுமானால், ஆரியத்திற்கு வீரியம் ஏற்றும் திருப்பணி உபயகர்த்தா சொல்கிறார்.
புரட்சிக்கவிஞர் இதனை அன்றைக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். ‘‘அகத்தியன்விட்ட புதுக்கரடி’’ என்று பெரிய ஆபத்துகள் வரும் என்பதை உணர்ந்தவர் தந்தை பெரியார். அதன் காரணமாகத்தான்,
1931 ஆம் ஆண்டிலேயே ‘‘அகத்தியர் ஆராய்ச்சி’’ என்ற நூலை வெளியிட்டோம்!
‘‘இதனை இதனால் இவன்முடிப்பன்’’ என்று ஆராய்ந்து சொல்லக்கூடிய அளவிற்கு, புலவர் கா.நமச்சிவாய முதலியார் அவர்கள், சென்னை மாநில கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில், தமிழ்ப் பேராசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம்; வடமொழி சொல்லிக் கொடுப்பவர்களுக்கு அதிக சம்பளம். கா.நமச்சிவாய முதலியார், தமிழ்த் துறைத் தலைவருக்குச் சம்பளம் ரூ.81; சமஸ்கிருத பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்குச் சம்பளம் ரூ.300.
பெரியார் அவர்கள்தான், போராடி, குடிஅரசு, விடுதலையில் எழுதி, அது மாற்றம் செய்யப்பட்டது இந்தத் தகவல்கள் எல்லாம் அரைவேக்காடுகளுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் தெரியாது.
பெரியார் தமிழுக்கு என்ன செய்தார்? என்று கேட்கின்றார்கள்.
பெரியார் என்ன செய்யவில்லை என்றுதான் நாம் கேட்கவேண்டும்.
இன்றைக்கு என்ன செய்கிறார்கள் என்றால், புராணத்தை வரலாறு ஆக்குகிறார்கள்.
அறிவியல் என்று சொல்லக்கூடிய சயின்சை – சூடோ சயின்ஸ் என்ற போலி விஞ்ஞானமாக ஆக்குகிறார்கள்.
தத்துவம் என்ற பிலாசிபியை, மதத்தோடு இணைக்கிறார்கள்.
மதம் வேறு; தத்துவம் வேறு.
மிகப்பெரிய ஆபத்து இன்றைக்கு மொழிக்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டு இருக்கிறது.
ஆகவேதான், இன்றைக்குப் பெருங்கவிக்கோ போன்றவர்கள் நீண்ட நாள்கள் வாழவேண்டும் என்று சொல்வது வெறும் ஆயுள் விருத்திக்கு அல்ல; களம் காணவேண்டும்; மற்றவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
தந்தை பெரியார் அவர்களுடைய தொலைநோக்கு, இப்படியெல்லாம் செய்வார்கள் என்று தெரிந்துதான், அதற்குரிய ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார். ஏனென்றால், மொழி ஒரு போர்க் கருவி என்று சொன்னார்கள் அல்லவா – போராட்டங்களுக்கு ஆயுதங்கள் சரியாக இருக்கவேண்டும் அல்லவா – கருவிகள் தயாரிக்கவேண்டும் அல்லவா!
‘‘அகத்தியர் ஆராய்ச்சி!’’ என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகம் 1931 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழ்ப் பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார்தான் அதன் ஆசிரியர். எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலம். விலை மூன்றணா.
அந்தப் புத்தகத்தில், இன்றைக்கு என்னென்ன சொல்கிறார்களோ, அதற்கெல்லாம் பதில் இருக்கிறது.
தங்களிடம் அதிகாரம் வந்துவிட்டது என்பதற்காக, இன்றைக்கு நம்முடைய இனத்தினுடைய உணர்வுகளை அழிக்கவேண்டும் என்பதற்காக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அண்ணா எழுதிய
‘ஆரிய மாயை!’
‘ஆரிய மாயை’ புத்தகத்தை அண்ணா அவர்கள் எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்?
ஹிந்தி எதிர்ப்புக் கண்டித்து மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் இன்னும் மற்றவர்களும் எப்படி களங்கண்டார்களோ, அதுபோல, இன்றைக்குத் தன்மான புலவர்கள், இங்கே வந்திருக்கின்றவர்கள் மட்டுமல்ல – இந்த அரங்கத்திற்கு அப்பாற்பட்டு உலகளாவிய நிலையில் இருக்கக்கூடியவர்கள் – ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு – Wider Audience என்று சொல்லக்கூடிய அளவிற்கு – இப்போது வரக்கூடிய ஆபத்தைத் தடுத்து நிறுத்த களங்காண உறுதி காணவேண்டும்.
அந்தச் சூளுரையை, நம்முடைய பெருங்கவிக்கோ அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில் நாம் பிரகடனமாக அறிவிக்கவேண்டும்.
இலக்கியத்தைப்பற்றி அண்ணா சொன்னதை பல மேடைகளில் எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். இருந்தாலும்,ஓர் ஆசிரியருக்கு என்ன வேலை என்றால், மாணவர்களிடம் சரியாகப் போய்ச் சேர்க்கவேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் சொல்வதுதான் ஆசிரியருடைய பணி.
‘ஆரிய மாயை’ என்றால், நிறைய பேர் நினைத்துக் கொள்வார்கள் – வகுப்புவாதம் என்று. அது வகுப்புவாதம் அல்ல – ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நடைபெற்ற நிலை.
அண்ணா சொல்கிறார்,
‘‘இலக்கியத்திற்குக் கதை துணை என்றாலும், இலக்கணத்திற்குக் கற்பனை கேடு பயப்பது அன்றே!” என்றார்.
இது எவ்வளவு நாள்களுக்கு முன்பு?
இன்றைக்கு அந்த இலக்கணக்கத்திற்குக் கேடு பயக்கக்கூடிய ஆபத்து வந்திருக்கிறதா? இல்லையா?
பெரியார், அண்ணா ஆகியோருடைய தொலைநோக்கு – திராவிட இயக்கத்தினுடைய தொலைநோக்கு – இவர்களுடைய தொல்லை நோக்கை அடையாளங்காட்டுகிறது.
எழுத்திலும், பாட்டியலிலும்கூட
வர்ண பேதம்!
வெண்பாப் பாட்டியல் (வச்சணந்தி மாலை) என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் ஆழ்ந்ததாகவும் கருத்திற் கொவ்வாததாகவும் அமைந்திருக்கிறது என்பதைப் புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். ஏன் இந்த அறியாமை உருவெடுத்து வந்த பாட்டியல் ஏடு, பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? படிப்பதால் ஏதாவது பயனிருக்க முடியுமா? நால்வகை ஜாதியை இந்நாட்டினில் நாட்டினீர், என்ற கபிலர் அகவல் ஆரியரைப் பார்த்து முழங்கிடும் உண்மையுணர்ந்தும், எழுத்திலும் நால்வகை ஜாதியா? உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், உயிர் மெய்யும் சார்பும் எழுத்தின் வகையாம் என அறிவுடன்பட்டு ஆயிரமாயிரமாண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக, ஆரியம் புகுந்து வளம் பெற்று, தமிழ் கற்று இலக்கியமியற்றும் தொண்டினை ஏற்று மெல்ல மெல்ல ஆரியப் புலவரெல்லாருள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி, அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலைமையை உண்டாக்கி விட்டது. முக்காலத்திலும் மொழி வழங்கிடத் துணைபுரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும், ஆரிய நச்சரவுதான் படத்தினை எடுத்து ஆடுகின்றது.
எழுத்திலும், பாவிலும்கூட வர்ணத்தைத் திணித்துள்ளனர்.
பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண – க்ஷத்திரிய – வைசிய – சூத்திரர் என்ற வர்ணப் பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும், எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளார். ‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம்.’’
நாமெல்லாம் சும்மா இருந்திருந்தால், என்னவாகியிருக்கும்?
பெரியார் தொடங்கி, இன்றைக்குப் பெருங்கவிக்கோ, எங்களைப் போன்ற சாதாரண ஆட்கள் களங்கண்ட காரணத்தினால்தான் ஏதோ தப்பித்திருக்கிறோம். இல்லையென்றால், மொழியே நிலைத்திருக்காது; செம்மொழி வந்திருக்காது.
இன்னமும் அந்த ஆபத்து முடிந்துவிடவில்லை. புதிய வடிவத்தில், புது ரூபத்தில், புதிய எதிரிகளாக இன்றைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
மேலும் அண்ணா ஆரிய மாயையில்,
‘‘இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத்துக்களும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன. வடமொழி ‘ல, ள’ வாகவும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’ ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன?
ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர், ”சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?
பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக்கற்றது. ஆனால், இலக்கணத்தில் விதியாகப் புகுந்துள்ளது.’’
சூத்திரருக்கு வஞ்சிப்பாவாம்;
இதைக் கேட்டதும் ரத்தம் கொதிக்கவேண்டாமா? இந்த இயக்கம் இல்லாவிட்டால், பெரியார் இல்லாவிட்டால், திராவிட இயக்கம் இல்லாவிட்டால், இது நிலைத்திருக்காதா? இன்றைக்கு நிலைக்க முடியவில்லை.
இன்றைக்குச் சொல்ல முடியுமா? சூத்திரர்கள் எல்லாம் வஞ்சிப்பாதான் எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டுத் தப்பித்துவிட்டுப் போக முடியுமா?
எனவேதான், மீண்டும் அந்தக் கதை வருகிறது. மீண்டும் அதிகார தோரணையோடு உள்ளே நுழைகிறது.
நம்முடைய திராவிட இயக்கத்தில், பெரியாரானாலும், அண்ணாவானாலும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களானாலும் எப்படி நடத்தினார்கள்?
சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமானால், கவனத்தோடு இருக்கவேண்டும்!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – மனிதன் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றால், Eternal Vigilance is the price for the Liberty – எப்போதும் சுதந்திரத்தோடு இருக்கவேண்டும் என்றால், மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். எல்லா திசைகளிலும் பார்க்கவேண்டும். அப்படி வருகிறபொழுது, புரட்சிக்கவிஞர் அவர்கள் தெளிவாகச் சொன்னார்,
“அகத்தியன் விட்ட புதுக் கரடி” என்ற தலைப்பில் எழுதியிருப்பார்.
அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்
புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்
ஆதலால், “குள்ளனை அணுவும் நம் பாதே’’
என்ற பழமொழி அன்று பிறந்தது!
பழைய திராவிடம் செழுமை மிக்கது
வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது
செந்தமிழ் இலக்கணச் சிறப்புற் றிருந்தது
வையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தது
செய்யும் தொழில்கள் சிறப்புற் றிருந்தன
ஓவியம் தருநரும் பாவியம் புநரும்
ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும்
திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர்
இராத தொன்றில்லை திராவிட நாட்டில்
இந்த நிலையில் வந்தான் அகத்தியன்.
சந்தனப் பொதிகையின் தமிழ்ப்பெரும் புலவரின்
மன்றினில் ஒன்றி ஒன்றி மாத்தமிழ்
நன்று பயின்றான் குன்றாச் சுவைத்தமிழ்
இயற்றமிழ் இசைத்தமிழ் இனியஆ டற்றமிழ்
முயற்சியிற் பயின்றபின், முடிபுனை மன்னனின்
நல்லா தரவை நாடுவா னாகிச்
‘செல்வம் முற்பிறப்பில் செய்த நல்வினைப்பயன்’
என்று புதுக்கரடி ஒன்றை ஏவினான்.
மன்றின் புலவர் வாய்விட்டுச் சிரித்தனர்
ஒருநாள் மன்னனின் திருமணி மன்றில்
அகத்தியன் புதிதாய்ப் புகுத்திய கருத்தை
ஆய்ந்திட, மன்னன், அகத்தியோய் அகத்தியோய்
பிறந்த உடலும், பிணைந்த உயிரும்
இறந்தபின் இல்லா தொழிந்தன
எதுபின் உயிர்உடல் எய்தும் என்றான்
‘‘ஆன்மா என்றும் அழியா’’தென்று
மற்றொரு புதுக்கரடி தெற்றென விட்டான்.
மேலும் அகத்தியன் விளம்பு கின்றான்
வேந்த னாக வீற்றிருக் கின்றாய்
ஆய்ந்து பார்ப்பின் அறிகுவை காரணம்
செல்வம்முற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்
மணிமுடி பூண்பரோ மக்கள் யாவரும்?
பணிவொடு வாழ்வது பார்ப்பின் புரியும்
சிறுமைமுற் பிறப்பின் செய்ததீ வினைப்பயன்
என்னலும், மன்னன், பின்னொரு நாள்இதைப்
புகல்க என்றனன் போயினன் அகத்தியன்
இப்படி வரிசையாக வந்து,
பிறகு மன்னவன் நிகழ்த்துகிறான்,
‘‘ஏன்என் ஆட்சியை எதிர்த்தனை! ஏஏ
கோன்என் படைவலி குறைந்ததோ? உன்றன்’’
கடைசியில் மன்னனை வசியப்படுத்திவிட்டான்; மன்னரையே அடிமைப்படுத்தி விட்டான். இதுதான் வரலாறு.
இந்த வரலாற்றை மீண்டும் நடத்தவேண்டும் என்ற காலகட்டம் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கின்ற காலகட்டம்.
எனவேதான், மீண்டும் அந்த ஆபத்து வருகிறது.
அகத்தியார் ஆராய்ச்சி என்ற நூல் மிகச் சிறிய நூல். இதனை மீண்டும் வெளியிடுவோம். எல்லோரிடமும் பரப்புவோம். நாங்கள் களத்தில் நிற்போம். நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் காலகட்டம் இது!
தன்மானப் புலவர்கள் எப்படி 1938 இல் பிறந்தார்களோ, எப்படி நாவலர் சோமசுந்தர பாரதியாரும், மறைமலையடிகளாரும் தமிழ்க்கடல் அவர்களும் திரண்டார்களோ, அதுபோல இப்போது இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கவேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது.
இப்போதுகூட அதற்காக எல்லா இடங்களிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை நடத்தி, ஒவ்வொரு இடத்திலும் அந்த வாய்ப்புகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இன்றைய நாளை, வரலாற்றுச் சிறப்புமிகுந்த நாளாக ஆக்கவேண்டும். பெருங்கவிக்கோ அவர்களை பாராட்டி விட்டு போனதாக இருக்கக் கூடாது. அப்படி நினைத்ததினால்தான் நண்பர்களே, ஒரு மாதம் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்து, ‘‘தமிழின் மீதான ஆரியப் பண்பாட்டுக் கண்டன மாநாட்டினை’’ இதே பெரியார் திடலில், வரும் ஏப்ரல் மாதம் நடத்துவோம். அம்மாநாட்டில் பெருங்கவிக்கோ போன்றவர்கள், நம்முடைய மறைமலை இலக்குவனார் போன்றவர்கள், இன்னும் தமிழின உணர்வாளர்களாக இருக்கக்கூடிய புலவர்களே அதற்கு வரவேற்புக் குழுவினராக இருப்பார்கள்.
மேடையில் இருப்பவர்கள் எல்லோரும் அந்த உணர்வினைப் பெறவேண்டும்.
எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் இது!
ஏனென்றால், இன்றைக்கு அகத்தியன்தான் வந்தான்; எனவே, தொல்காப்பியருக்குத் தமிழ் தெரியாது என்று சொல்கிறார்கள்.
என்னைவிட அறிஞர்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாதது அல்ல.
எனவேதான், இந்த நேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்ற நேரம்.
எனவே, தமிழின்மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு கண்டன மாநாடும் – அந்தக் கருத்துகளை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும். அந்தப் பிரச்சார களத்தில், பெருங்கவிக்கோ அவர்களும் பணியாற்றுவார். அவருக்கும் வேலை வேண்டும்; எங்களுக்கும் வேலை வேண்டும். வேலை செய்துகொண்டே இருந்தால்தான், வயது குறையும். வயது குறைந்தால்தான், வாலிபம் நிற்கும்.
போராட்டக் களத்தில் இறங்குவோம்!
எல்லோரும் வாழவேண்டும்; எல்லோரும் போராட்டக் களத்தில் நிற்கவேண்டும்.
தமிழ் மானத்தைக் காப்பாற்றவேண்டும்!
தன்மானத்தை உயர்த்தவேண்டும்.
தன்மானக் கொடி ஒருபோதும் தலைதாழ்ந்து பறக்கக் கூடாது; அது கீழே இறக்கப்படக் கூடாது.
அதையே இன்றைக்குச் சூளுரையாக வைத்து, பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க என அனைவரது சார்பாக வாழ்த்துகிறோம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.