தமிழ்நாட்டை வஞ்சிப்பதே அதன் நோக்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திருநெல்வேலி, பிப்.8– நிதியும் கிடையாது! நீதியும் கிடைக்காது! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுமீது குற்றஞ்சாட்டினார்.
நேற்று (7.2.2025), திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி முதலமைச்சர் ஆற்றிய உரை வருமாறு:–
திக்கெட்டும் புகழ் பரப்பிய நெல்லைச் சீமையில் நடை பெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமை –
நெல்லை மண்தான் காரணம்!
தலைநகர் சென்னை மய்யப்பகுதியில், அண்ணா மேம்பாலம்அமைத்தது போன்று, நெல்லையில் 1973 ஆம் ஆண்டு ஈரடுக்குப் பாலம் அமைத்து, அதற்கு ‘திருவள்ளுவர் பாலம்’ என்று பெயர் சூட்டியவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர்! செல்லப்பாண்டியன் பெயரிலான பாலமும் தி.மு. கழக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது.
1965-ஆம் ஆண்டு தமிழ்மொழி காக்க மாபெரும் போர் தமிழ்நாட்டில் நடந்தபோது, அதைத் தூண்டியதாக ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்’கீழ் கைது செய்யப்பட்ட தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில்தான் அடைக்கப்பட்டார். அதற்கு அடுத்ததேர்தலில் தி.மு.க. ஜார்ஜ்கோட்டையைப் பிடித்தது என்பது வரலாறு! தமிழரின் வரலாற்றுப் பெருமைக்கும் இந்த நெல்லை மண்தான் அடையாளம்!
ஆயிரத்து 304 கோடி ரூபாய் மதிப்பிலான 23 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கும் விழா,
309 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா,
பல்வேறு அரசுத் துறைகள் சார்பாக 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று முப்பெரும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் ஆறு அறிவிப்புகள்!
நெல்லை சீமைக்கான முதல் அறிவிப்பு – திருநெல்வேலி மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கை புரம் கிராமங்களில், 2 ஆயிரத்து 291 ஏக்கர் பரப்பளவில் புதிய ‘சிப்காட்’ தொழில்பூங்கா அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, மூலக்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் ஆயிரத்து 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – திருநெல்வேலி மாநகரத்தில், மதுரை குமரி சாலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் இடையே குலவணிகர் புரத்தில் இருக்கும் ரயில்வே கடவுப்பாதைக்கு மாற்றாக, புதிய Y வடிவ ரயில்வே மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – திருநெல்வேலி மாநகராட்சியில், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதி லிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்சாலைகளுக்கும், மற்ற தொழில் பூங்காக்க ளுக்கும் பயன்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்கவும் தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும் வழிவகை ஏற்படும்.
நான்காவது அறிவிப்பு – பாளையங்கோட்டை அம்பா சமுத்திரம் சாலை மேலப்பாளையம் பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.
அய்ந்தாவது அறிவிப்பு – அம்பாசமுத்திரம் வட்டம், அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு – மீனவப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில், கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மய்யம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
நான் இப்போது அறிவித்த திட்டங்களுக்கு எல்லாம், விரை வில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும்!
2023 ஆம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று உங்களுக்குத் தெரியும்! அதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டன என்றும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த பாதிப்புகளிலிருந்து மீள, ஒன்றிய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள்! ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக்கூட செய்யவில்லை.
நாம் கோரிய வெள்ள நிவாரண நிதியில் ஒரு விழுக்காடு கூட தராத ஒன்றிய அரசு!
இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை நாங்கள் செய்தோம். தொடர்ந்து ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுக்காத அவர்களைக் கண்டித்தோம். அப்போதும் வரவில்லை! நாடாளுமன்றத்திலும் பேசினோம். அப்போதும் வரவில்லை! ஏன், நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும் எவ்வளவு? நாம் கேட்டது, 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய்! வேறு வழியில்லாமல் ஒன்றிய அரசு கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது? வெறும் 276 கோடி ரூபாய்! நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காட்டைக் கூட கொடுக்கவில்லை. இப்படிதான்ஒன்றிய அரசு நடந்துகொண்டு இருக்கிறது!
சரி போகட்டும்! இந்த பட்ஜெட்டிலாவது நாங்கள் கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை!தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள்! மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது, ஒன்றிய பா.ஜ.க. அரசு! அவர்களை பொருத்தவரைக்கும், கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும், நிதியையும் கொடுப்பார்கள். அதனால்தான் நாங்கள் கேட்கிறோம். என்ன கேட்கிறோம்?
‘‘இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா?’’
இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பா.ஜ.க.-விடம் இருந்து எந்த பதிலும் வராது.
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா!
‘திருநெல்வேலி அல்வா’ என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் ‘அல்வா’தான் அதைவிடப் புகழ்பெற்றதாக இருக்கிறது! நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசைப் பொருத்தவரைக்கும் – ஒன்றிய அரசைப் பொருட்படுத்தாமல், ‘நமக்கு நாமே’ -என்று தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறோம். அதனால்தான், ஒன்றிய அரசு வெளியிடும் எல்லாப் புள்ளிவிவரங்களிலும் முன்னணியில் இருக்கிறோம்! அதற்குக் காரணம், வாக்களித்த மக்களான உங்களுக்கு, நாங்கள் உண்மையாக இருக்கிறோம்.
ஒரு பக்கம் இப்படி நாங்கள் உழைத்துக்கொண்டு இருந்தால், மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பதிலுக்குப் பதில் பேசி, நம்முடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்ப வில்லை.
விஷக் கிருமிகளின் உருட்டல்கள் காணாமல் போகும்!
நம்முடைய நேரத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செலவிடவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். விஷக்கிரு மிகளின் அக்கப்போர் உருட்டல்கள் எல்லாம், காலப்போக்கில் காணாமல் சென்று விடும். இப்படி எத்தனையோ பேரை அரை நூற்றாண்டுக்கும் மேலான என்னுடைய அரசியல் வாழ்க்கையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
என்னைப் பொருத்தவரைக்கும், நான் அழுத்தம் திருத்தமாகச் சொல்வது. மற்றவர்கள் போன்று, “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை” என்று இறுமாப்போடு பேசுபவன் இல்லை இந்த ஸ்டாலின். தோழமையில் இருப்பவர்கள் பேசினாலும் சரி. எதிர்முகாமில் இருப்பவர்கள் பேசினாலும் சரி.
அன்பாகப் பேசினாலும் சரி. கோபமாக பேசினாலும் சரி. அவர்கள் பேசுவதில் நியாயம் இருந்தால் – மக்களுக்கு நன்மை இருந்தால் – அதையெல்லாம் செய்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பவன்தான் நான்!
நமக்கு எதிராகப் பேசிவிட்டார்களே என்று காழ்ப்புணர்வோடு நடந்துகொள்பவன் இல்லை நான். எனக்கு தமிழ்நாடும் – தமிழ்நாட்டு மக்களும் வளரவேண்டும்!அவ்வளவுதான்!
நம்முடைய வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடி யாமல்தான், நம்முடைய ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு செய்தியையும் எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் – கருத்துருவாக்கம் செய்கி றார்கள்! அவர்களின் நோக்கம் ஒன்று தான்! திமுக-வை எப்படி அழிக்கலாம்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படி கெடுக்கலாம்? ஏன் என்றால், அவர்களின் நீண்டகாலத் திட்டத்திற்கு தடையாக இருப்பது நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்! அவர்களால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
துரோகிகளை துணைக்கு அழைத்து வந்தாலும் முறியடிப்போம்!
இந்த ஆட்சி இருப்பதால்தான், ‘தமிழ்நாட்டை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். உண்மை யான வரலாற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மொழியுணர்வு, கல்வி உரிமை, மாநில உரிமை என்று பேசுகிறார்கள்’ என்று அவர்களுக்கு நம்மைப் பிடிக்கவில்லை!
நான் உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாட்டுக்குப் பக்கபலமாக தி.மு.க. ஆட்சி எப்போதும் இருக்கும்! தி.மு.க. வுக்குப் பக்கபலமாக தமிழ்நாட்டு மக்களான நீங்களும் எப்போதும் இருப்பீர்கள்! அவர்கள் என்ன சதித் திட்டம் தீட்டி, நேரடியாக வந்தாலும் சரி – துரோகிகளை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும் சரி – அதை நாங்கள் நிச்சயம் முறியடிப்போம்!
நாங்கள்தான் தமிழ்நாட்டை என்றென்றைக்கும் ஆள்வோம்!
ஏன் என்றால் – நாங்கள் தந்தை பெரியாரின் வழிவந்தவர்கள்! பேரறிஞர் அண்ணாவின் வழிவந்தவர்கள்! தமிழினத் தலைவர் கலைஞர் வழிவந்தவர்கள்! ”கொண்டிருக்கும் கொள்கையாலும்” – ‘‘செய்திருக்கும் சாதனைகளாலும்” – நாங்கள்தான் தமிழ்நாட்டை என்றென்றைக்கும் ஆள்வோம்! அதற்கு எப்போதும் உங்களுடைய துணை வேண்டும். அதற்கான ஆதரவை தொடர்ந்து நீங்கள் தரவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.