தேன் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள பல்வேறு சத்துக்கள் நம் உடலுக்கு மிகுந்த நன்மை தருபவை. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, தேனில் ஆபத்தான உலோகங்கள் கலந்திருப்பதாகக் கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ட்யூலேன் பல்கலை, அமெரிக்க நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து 260 வகையான தேன் மாதிரிகளைச் சேகரித்தது.
இதை ஆய்வு செய்து பார்த்த போது, அதில் நம் உடலுக்கு நஞ்சாகக் கூடிய ஆறு முக்கிய உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை லெட், ஆர்செனிக், கேட்மியம், நிக்கல், குரோமியம், கோபால்ட் ஆகியவை. இயற்கையிலேயே இந்த ஆபத்தான உலோகங்கள் இருக்கின்றன.
ஆனால், தொழிற்சாலை கழிவு வெளியேற்றம், பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் இவற்றின் அளவு சுற்றுச்சூழலில் அதிகரித்து வருகிறது.
தண்ணீர், நிலம் ஆகியவற்றில் இந்த உலோகங்களின் அளவு அதிகரிப்பதால், அதில் வளர்கின்ற தாவரங்களிலும் இவற்றின் அளவு கூடுகிறது. இந்த தாவரங்களின் பூந்தேனை எடுத்துத்தான் தேனீக்கள் தங்களுக்கான தேனை உருவாக்குகின்றன. எனவே, ஓரிடத்தில் கிடைக்கும் தேனை வைத்து அந்த இடத்தில் எந்த வகையான நச்சுகள் காணப்படுகின்றன; எந்த அளவுக்குச் சுற்றுச்சூழல் கெட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த தெளிவான பார்வை கிடைக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.