சென்னை,பிப்.1- 26 ஆண்டுகாலம் சீமானுடன் பயணித்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி தெரிவித்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியார் குறித்து சீமான் பேசியது மேலும் அதிருப்தியை தர மேலும் பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். கட்சியில் இருந்து விலகுபவர்கள் மாற்று கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் திமுகவிலேயே இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீமானுடன் பயணித்து வந்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் நா.த.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் சீமான் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.