வக்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் டி.ஆர். பாலு வலியுறுத்தல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.31 பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து டில்லியில் செய்தியாளர் களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறிய தாவது:

வக்பு மசோதா

வக்பு மசோதா குறித்து நாடாளுமன்றத் தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம். வக்பு மசோதா விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இயற்கை பேரிடர் நிதியை வழங்குமாறு பிரதமருக்கு, முதலமைச்சர் ஏற்கனவே பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரியுள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம். இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த பிரதமர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி சிவா

திருச்சி எம்.பி. சிவா கூறும்போது யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக டில்லியில் திமுக மாணவரணி சார்பில் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சியில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது விவாதம் நடத்த அனுமதிப்பது இல்லை என குற்றச்சாட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *