பெரியாருக்கு எதிராக பிரபாகரனா?

viduthalai
3 Min Read

சீமான் உடனடியாக பேச்சை நிறுத்த வேண்டும்
சுவிஸ்சர்லாந்து ஈழப் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை

சென்னை, ஜன. 29- தந்தை பெரியாருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி விவாதிப்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்மையில் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சதுரங்கத்தில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் எங்கள் போராட்டத்தையும் விவாதப்பொருளாக்குவதை பார்த்து மனவேதனைப்படுகிறோம்.இது தொடர்பாக வன்மையான கண்டனங் களை பதிவு செய்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக தலைவரின் பெறாமகனான கார்த்திக் மனோகரனை பொதுவெளியில் மரியாதைக் குறைவாக பேசியது எமது இனத்தை அவமானப்படுத்தியது போலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம், மாவீரர் குடும்பங்களில் ஒன்று.

தேசியத் தலைவர் அவர்கள் உறவுகளை முதன்மைப்படுத்துபவரல்ல – இருந்தாலும் சாள்ஸ் அன்ரனி, துவாரகா என்ற இரண்டு மாவீரர்களை இந்த தேசவிடுதலைக்காக கொடுத்தவர்கள். தமிழீழ நடைமுறை அரசில் மாவீரர்கள் குடும்பத்தினரை எவ்வாறு தலைவர் அவர்கள் மதிப்பளிப்பார்,என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எனவே மாவீரர் குடும்பம் ஒன்றின் உறுப் பினர்களை அவமரியாதை செய்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கடுமையான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும்

பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு ஈழப் போராளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக உலகத் தமிழர் பேரமைப் பின் தலைவர் பழ.நெடுமாறனும் இதேபோல ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், உலகத் தமிழர் களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெரியார் அவர்கள் பெண்ணுரி மைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

2009ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியார் அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான ஜாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரன் அவர்களுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், ஜாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப் புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது.

பெரியார் உயிருடன் இருந்திருந்தால்…

ஜாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப் பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் அவர்கள் உயிரோடு இருந் திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாக ரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் அய்யமில்லை.

பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *