பரேலி, ஜன.27 உத்தரபிரதேசத்தில் சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியை வகுப்புக்கு வெளியே நிறுத்திய அவலம் அரங்கேறியுள்ளது.
மாணவி
உத்தரபிரதேசத்தில் மாதவிடாயின் போது பள்ளிக்கு சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சானிட்டரி நாப்கின் கேட்டதற்கு அவரை வகுப் புக்கு வெளியே நிறுத்திய அவலம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
பரேலியில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மாதவிடாயின்போது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு மாதவிடாய் சுழற்சி தொடங்கியுள்ளது. இதையடுத்து அவர் பள்ளி முதல்வரிடம் சானிட்டரி நாப்கின் கேட்டுள்ளார். ஆனால் பள்ளி முதல்வரோ மாணவிக்கு நாப்கின் கொடுக்காமல் அவரை வகுப்பறைக்கு வெளியே நிற்கும்படி சொன்னதாக கூறப்படுகிறது.
சுமார் ஒரு மணிநேரம் மாணவி வகுப்புக்கு வெளியே நின்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் தந்தை இது தொடர்பாக மாவட்ட நீதிபதி, மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர், மாநில மகளிர் ஆணையம் மற்றும் பெண்கள் நலத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக புகார் மனுவை அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் கூறியுள்ளார்.