தமிழறிஞர்களைப் போற்றும் மாண்பும் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் பெருந்தன்மையும் ஒருங்கே கொண்ட மாபெருந்தலைவர் பெரியார்!

Viduthalai
4 Min Read

மறைமலை இலக்குவனார்

கட்டுரை

பெருந்தன்மையின் இலக்கணமாக விளங்கிய பெரியார் தாம் பேசுவதையெல்லாம் கேட்பவர்கள் அப்படியே பின்பற்றவேண்டும் என எப்போதும் எதிர்பார்த்ததேயில்லை. இரண்டு மணி நேரத்திலிருந்து சில சமயம் மூன்று மணிநேரம் வரை தம் உடல்வலியைப் பொருட்படுத்தாது பொழிவு நிகழ்த்தியபின்னர் முத்தாய்ப்பாக “இதுவரை நான் சொன்னதையெல்லாம் நீங்களே உங்கள் சொந்த அறிவால் சிந்தித்துப் பாருங்கள்.உங்கள் புத்திக்கு நல்லது என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்;இல்லாவிட்டால் தள்ளிவிடுங்கள்’ என்று தம் வாழ்நாள் முழுதும் மேடையில் கூறிய ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவர்தாம்.

கருத்துரிமை மதிப்பு
இன்றைய விளம்பர ஊழியில் பொறுப்புத் துறப்பு (Disclaimer) என்கிறார்களே, அதனை உலகிலேயே முதன்முதலாகக் கடைப்பிடித்தவர் பெரியார்தான்.சிலப்பதிகாரம் ஒரு ஆணாதிக்க, ஆரியச் சார்புக் காப்பியம் என்பது பெரியாரின் உறுதிவாய்ந்த கருத்து. ஆயினும்,மிக வன்மையாகச் சிலப்பதிகாரத்தை அவர் சாடிப் பேசியவேளையில், அதனைத் தமிழர் ஒருமைப்பாட்டுக் காப்பியம் என்று அவரது இயக்கத்தின் முன்னணிப் பேச்சாளர்கள் சாமி.சிதம்பரனாரும் சி.இலக்குவனாரும் எழுதியும் பேசியும் வந்தனர். அவர்கள் அப்படிப் பேசியது வேறெங்குமில்லை, திராவிடர் கழக மேடைகளில்தான்!இதனைப் பெரியார் தவறாகக் கருதவில்லை. அவர்களின் கருத்துரிமையை மதித்தார். அவர்களின் பொழிவுகளை ‘விடுதலை’ நாளிதழிலும் வெளியிட்டு வந்தார்.பெரியாரின் கருத்தை வன்மையாக எதிர்த்துச் சிலப்பதிகாரத்துக்கு “வக்காலத்து” வாங்கிய சிலம்புச் செல்வருக்கு அடங்காச் சீற்றம்.தமது ‘தமிழ்முரசு’ இதழில் இதனை வெளிப்படுத்தினார்.அக் கால நிகழ்வை அன்றைய இதழ் வழியாகக் காணலாம்.

மொழித் தொண்டு
‘கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர் ’ என்ற தலைப்பிட்டு சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் 1951 ஏப்ரல் மாத தமிழ்முரசில் எழுதிய தலையங்கம்:
சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு தேடத் தேசியவாதிகள் மாநாடு கூட்டுகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனே, திராவிடர்கழக வட்டாரத்தில் கலக்கங் கண்டுவிட்டது.
காங்கிரஸ்காரர்கள் என்றாலே வடமொழிக்கும், வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள், தமிழுக்கும், தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்துவந்த பிரச்சாரமெல்லாம் பொய்யாய் – கனவாய் – பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகையால் சிலப்பதிகார மாநாடு நடக்கும் முன்பே சிலம்பின் பெருமையைப் பற்றி ‘விடுதலை’ தானே பிரச்சாரம் செய்ய ஆரம் பித்து விட்டது.
திராவிடர் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார் ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்பினைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-1951-இல் ‘சிலப்பதிகாரத்தின் பெருமை’ என்ற தலைப்பு கொடுத்துப் பிரசுரித்தது ‘விடுதலை’.

மீண்டும் 29-3-1951 இதழில் சாமி.சிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து அதையும் பிரசுரித்தது விடுதலை.
இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும். மொழித்தொண்டு கட்சிப்பூசல்களுக்கு அப்பாற்பட்ட தல்லவா? “

அறிஞரைப் போற்றும் மாண்பு
தமிழறிஞர்கள் சாமி.சிதம்பரனாரும் சி.இலக்கு வனாரும் தெரிவித்த கருத்து தமது கருத்துக்கு நேரெதிராக இருந்தபோதிலும் அவர்களது பொழிவுகளை ‘விடுதலை’ ஏட்டில் பெரியார் வெளியிட்டார் என்றால் அதற்குப் பெரியாரின் தமிழறிஞர்களைப் போற்றும் மாண்பும் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் பெருந்தன்மையுமே காரணங்கள்.இதனைப் புரிந்துகொள்ளாமல் ஒரு சராசரி அரசியல்வாதியைப் போலவே ம.பொ.சி. பெரியாரை வசைப்புராணம் பாடியுள்ளார்.
‘சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப் படுத்தும் பேரிலக்கியம்’ – என்று பேசுகிறார் திராவிடர் கழகத்தின் பிரச்சாரகரான புலவர் இலக்கு வனார்! அதை ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு’ என்று தலைப்பு கொடுத்துப் பிரசுரிக்கிறது விடுதலை.

தமிழர் மாண்பு
சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்… தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்… ராமாயணத்தைப் போல், பெரியபுராணத்தைப் போல், சீவகசிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மையை உண்டாக்கும் நூலல்ல.. இதுதான் இந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு என்று 21-3-1951 ‘விடுதலை ‘யில் எழுதுகிறார் ஈ.வெ.ரா.வை நிழல்போல் பின்பற்றிச் செல்லும் சாமிசிதம்பரனார்.
இதை, ‘சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை? பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு ‘ – என்று கொட்டை எழுத்தில் இரண்டு காலம் தலைப்புக் கொடுத்து ‘விடுதலை’யில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர்.
அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்.

‘கண்ணகி சிறந்த குணமுடையவள். அழகும், அரிய குணங்களும் அவளிடமிருந்தன’ – என்கிறார் ஈ.வெ.ரா.வின் சீடர்.“
“ஈ.வெ.ரா.வுக்குத் தன்மானமிருப்பின் சாமி.சிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வெ.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ‘ என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வெ.ரா.வுக்குத் துதி பாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.
இப்படி முன்னுக்குப்பின் முரணாக, ஒருவருக்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறதே!” (நன்றி: ‘தமிழ்முரசு’ – ஏப்ரல் 1951) என்பது ம.பொ.சி.யின் வாதம்.

பகுத்தறிவு நெறி
விரிவான சிலப்பதிகார ஆராய்ச்சி நிகழ்த்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. ஆராய்ச்சி என்னும் போது தமது கருத்துக்கு எதிரான கருத்துகளையும் ஏற்றுப் பகுப்பாய்வுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் வழிவகுத்துமே உண்மையை நிலைநாட்டவேண்டும் என்னும் அறிவியல்நெறியே பெரியாரின் பகுத்தறிவுநெறி என்பதையும் தமிழறிஞர்கள் தமது நோக்கில் ஆய்வுநிகழ்த்த முழுமையான ஒப்புதலுடன் வழியமைத்த பெருந்தன்மையாளர் பெரியார் என்பதையும், வெளிப்படுத்த இந் நிகழ்வு ஒரு சான்று.அறியாரும் சிறியாரும் இதனை உணர்ந்துகொள்வராக.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *