மாட்டை வைத்து அரசியல் செய்யவேண்டாம் தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

2 Min Read

சென்னை, ஜன. 22- சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி, கடந்த மாட்டு பொங்கல் நாளன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் மாடுகள் மூலம் ஒவ்வொருவரும் பெறும் பயன்கள் குறித்து விளக்கினார். மாட்டை வைத்து பூஜ்ஜியம் பட்ஜெட்டில் விவசாயம் செய்ய முடியும் என்றெல்லாம் பேசினார்.

கோமியம்

அதே நேரத்தில் கோமியம் குறித்தும் பேசி இருந்தார். அந்த காட்சிப் பதிவில், “எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தபோது டாக்டரை அழைத்து வரவா என்று அவரிடம் கேட்டபோது, அவர் கோமியம் இருந்தால் கொடுங்கள் என்று கூறினார். அதை குடித்ததும் 15 நிமிடத்தில் அவருக்கு காய்ச்சல் போய்விட்டது. அதனால் பாக்டீரியா தொற்று, செரிமான பிரச்சினை, வயிறு சம்பந்தமான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் கோமியம் நல்ல மருந்து” என்று பேசினார்.

சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி பேசிய இந்த காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று (21.1.2025) பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள்; விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என கூறுகிறார்கள். பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை. 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்தாக உள்ளது. கோமியத்தை அமிர்த நீர் என்றே குறிப்பிடுகிறார்கள்” என்று கூறினார்.

இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் இந்த கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
அரசியல் செய்ய வேண்டாம்

“ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?

மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?. வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *