மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம்
காரைக்குடி, ஜன.20 நேற்று (19.01.2025) காரைக்குடியில் செய்தி யாளர்களைச் சந்தித்த மேனாள் ஒன்றிய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், தந்தை பெரியாரைச் சிலர் அவதூறு செய்வது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, “பெரியார் காலத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய ஒன்றிய அரசினுடைய விதிகள் இருந்தால், இன்று காவல்துறை நடந்து கொள்வதைப் போல அன்று நடந்திருந்தால் பெரியார் அவர்கள் ஆண்டு முழுவதும், வாழ்நாள் முழு வதும் சிறையில் இருந்து இருப்பார்.
பெரியார் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல; பெரியார் என்பது சமூக இழிவுகளை எதிர்த்த ஒரு பெரிய போராட்டம்; பெரிய போர்! ஓர் இயக்கம்! சமூக இழிவுகளை எதிர்த்த அந்த இயக்கத்தை இப்போது களங்கப்படுத்துகிறோமா?
ஒவ்வொரு மனிதனும் பிறக்க வேண்டும்; இறக்க வேண்டும். பெரியார் வாழ்ந்து முடிந்து விட்டார். பெரியார் எதை இன்று நினைவுபடுத்துகிறார் என்றால், சமூக இழிவுகளை அவர் எதிர்த்தார்; கடுமையாக எதிர்த்தார் மிகப்பெரிய வெற்றியைக் கண்டார் என்பனவற்றைத்தான்.
அன்று பல சமூக இழிவுகள் ஒழிக்கப்பட்டன. இன்றைக்கும் சில சமூக இழிவுகள் இருக்கின்றன. அதை எதிர்ப்பது தான் பெரியார்! பெரியார் என்கிற மனிதர் இல்லாவிட்டாலும், பெரியார் கொள்கை என்பது அந்த சமூக இழிவுகளை எதிர்ப்பது! அதை புரிந்து கொள்ளாமல் பெரியாருடனே சண்டை போடுவது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இப்போது ஈரோட்டில் (இடைத் தேர்தலில்) நிற்கிறார்கள் அல்லவா? ஈரோட்டில், பெரியார் பிறந்த ஊரில் சொல்லட்டுமே, எத்தனை மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்து போகும் அல்லவா!
திராவிடம் என்பது ஆரியர்கள் அல்லாத ஓர் இனத்தை குறிக்கிறது. பெரியார் சொன்னது, அண்ணா சொன்னது, திராவிடம் என்பது தமிழர்கள், கன்னாடியர்கள், தெலுங் கர்கள், மலையாளிகள் எல்லாம் சேர்ந்தது தான் திராவிடம்.
திராவிடம் என்று சொல்லும் பொழுது தமிழர்களுடைய விரிந்த பார்வையை காட்டுகிறது. இன்றைய அரசைத் ‘திராவிட மாடல்’ அரசு என்று சொல்கிறார்கள். அது ஒன்றும் தவறு இல்லை. பகுத்தறிவு, சமத்துவம், அறிவு சார்ந்த சமுதாயம் இதெல்லாம் தான் திராவிடத்தைக் குறிக்கும்.
இதில் தமிழ்நாட்டில் இருந்த தற்கு ஈடாக ஆந்திராவில், கருநாடகத்தில், கேரளாவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் நாராயண குரு, கருநாடகத்தில் பசவண்ணா! அதனால் நாம் எப்படி சமுதாய சீர்திருத்தம், சமத்துவம், ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண் டும், தீண்டாமை ஒழிப்பு, என்று வலியுறுத்தினோமோ, பெண் விடுதலை, பெண் உரிமை எப்படி வலியுறுத்தினோமோ அதைப்போல அதே அளவுக்கு கேரளத்தில், கருநா டகத்தில், ஆந்திராவிலும் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆக திராவிடம் என்று சொல்லும்போது அய்ந்து தென் மாநிலங்களின் ஒற்றுமையைக் குறிக்கும்; பொதுமையைக் குறிக்கும். அய்ந்து தென்னாட்டு மாநிலங் களுக்கும் பல ஒற்றுமைகள் இருக் கின்றன. அதைத்தான் திராவிடம் என்று சொல்கிறோம். திராவிடத்தில் தமிழ்நாடும் உண்டு. அது எப்படி திராவிடம் என்று சொல்வதால் தமிழன் பெருமையை குறைப்பதாக, தமிழன் என்று சொல்வதால் திராவிடத்தின் பெருமையை குறைப்பதாக ஆகும்?
நாட்டுப் பண்ணில் திராவிடம் வருகிறது அல்லவா? திராவிட உத்கல வங்கா என்று வருகிறது அல்லவா? திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டு மல்ல அய்ந்து மாநிலத்தை சேர்த்தது தான் திராவிடம்” என்று குறிப்பிட்டார்.