சென்னை, ஜன. 20- தமிழ் நாட்டின் நிதிநிலை திவாலாகப் போகிறது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை மேனாள் முதலமைச்சர் வைத்திருப்பது வருந்தத்தக்கது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து தவறான தகவல்களைக் கூறியுள்ளார். பரபரப்புக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டை வைத்திருப்பது வருந்தத்தக்கது.
அடிப்படை தெரியாமல்
பொருளாதாரம் குறித்தும், நிதிநிலை மேலாண்மை குறித்தும் எந்த அடிப்படையும் தெரியாதவர்கள் தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைக்க முடியும். அவர் ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகளில் குறைவாக கடன் வாங்கியதாகவும், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாக கடன் வாங்கியதாகவும் கூறுகிறார்.
2011இல் வரவு-செலவு திட்டத்தில் பட்ஜெட் மதிப்பு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடிதான். கடந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் கோடி. இந்த வித்தியாசத்தை புள்ளிவிவரம் மூலம் அறியலாம்.
உள்நாட்டு உற்பத்தி மதிப்பை வைத்துதான் ஒரு மாநிலம் கடன் வாங்கும் திறனை நிர்ணயிக்க முடியும். 15ஆவது நிதிக்குழு 2021-2022இல் தமிழ்நாடு 28.7 சதவீதம் கடன் வாங்கலாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால், 27.01 சதவீத கடன் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது.
அதேபோல, 2022-2023ஆம் ஆண்டில் பரிந்துரைத்தது 29.3 சதவீதம், கடன் வாங்கியது 26.87 சதவீதம். 2023-2024ஆம் ஆண்டில் பரிந்துரை 29.1 சதவீதம், வாங்கியது 26.72 சதவீதம். 2024-2025ஆம் ஆண்டில் பரிந்துரை 28.9 சதவீதம், கடன் பெற்றது 26.4 சதவீதம் மட்டுமே.
நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம் புக்குள்தான் கடன் வாங்கியுள்ளோம். தமிழ்நாட்டின் நிதி நிலை கட்டுக்குள் இருக்கிறது. ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிகமாக வரிவசூல் செய்துள்ளதை பழனிசாமியே ஒப்புக்கொண்டுள்ளார். இது நமது திறமையான நிதி மேலாண்மையைக் காட்டுக்கிறது. நிதி மேலாண்மையில் நுட்பமாகச் செயல்படுகிறோம்.
வட மாநிலங்களுக்கு…
ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களில் நமக்கான நிதியைத் தரவில்லை. அந்தப் பணத்தை தமிழ்நாடு அரசுதான் ஒதுக்கீடு செய்துள்ளது. வடமாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவாக உள்ளது.
புதிய விமான நிலையம்
சென்னை விமான நிலையப் பரப்பு 1,300 ஏக்கர்தான் உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். இன்னும் 7 ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கை 3.5 கோடியாக உயரும். அதனால் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது அவசியமாகிறது.
பரந்தூர் மக்களை விஜய் மட்டுமல்ல, எந்த கட்சியின் தலைவரும் சந்திக்கலாம். அவர்களது குறைகளைக் கேட்டு, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரலாம்.
அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மறு குடியமர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் நிலைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.