கோவை,ஜன.18- கோவையில் மறைவுற்ற மாவட்ட கழக காப்பாளர் இரா.ரங்கநாயகி உடல் குடும்பத்தினரால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடையாக வழங்கப்பட்டது
மேனாள் கோவை மாவட்ட தலைவரும் சுயமரியாதைச் சுடரொளியுமான வசந்தம் கு.இராமச்சந்திரனின் வாழ்விணையர் இரா.ரங்கநாயகி நேற்று (17.01.2025) மறைவுற்றார்.
பீளமேடு அருகில் உள்ள அவரது மகன் இல்லத்தில் அம்மையார் உடலுக்கு கழகக் கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
கோவை மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழகத் தோழர்கள் பலரும் நேரில் சென்று அம்மையார் உடலுக்கு மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து இல்லத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் மற்றும் கழக சொற்பொழிவாளர் க.வீரமணி ஆகியோர் அம்மையார் குறித்து எடுத்துக் கூறி இரங்கலுரை ஆற்றினர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர், அம்மையார் மறைவுக்கு விடுத்த இரங்கல் அறிக்கையை வாசித்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இரங்கல் அறிக்கை நகல் வழங்கப்பட்டது.
பழ.அன்பரசு, அ.மு.ராஜா மற்றும் உறவினர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அம்மையார் உடலுக்கு குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்போடு எந்த வித மூடநம்பிக்கை சடங்குகளும் இல்லாமல் கழகத் தோழர்கள் அம்மையார் உடலை சுமந்து கொண்டு வீரவணக்க முழக்கத்துடன் வாகனத்திற்கு கொண்டு வந்தனர்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி, இறுதி ஊர்வலம் புறப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வர கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
அம்மையார் விருப்பப்படியே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவக் படிப்புக்காக மதியம் 3 மணி அளவில் குடும்பத்தினர் மகன்-மருமகள் ஆர்.தாமோதரன்- டி.தனலட்சுமி, மகள்-மருமகன் ஜெ.இந்திராணி-– கே.ஜெகதீசன், டி.ஜெயமணி,
ஆர்.ராதாமணி – எஸ்.ராஜன், மற்றும் பேரன்கள் பேத்திகள், உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் முன்னிலையில் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கழகத்தின் ஆணி வேராக, கழகத் தோழர்கள் பாதுகாப்பு அரணாக ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேல் இருந்த அம்மையார் மறைவு என்பது திராவிடர் கழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் கோவையில் நடைபெற்ற அனைத்து மாநாடுகள், கழகக் கூட்டங்களில் முன் நின்று பங்கேற்று கழகத் தோழர்கள் அனைவரையும் அரவணைத்து மிகச் சிறப்பாக நிகழ்வுகளை நடத்தி காட்டிய குடும்பம் வசந்தம் இராமச்சந்திரன் -ரங்கநாயகி குடும்பமாகும்.
“நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்பார்கள்.
கழக கொள்கை ஏற்று கருப்புச் சட்டை போட்டு திராவிடர் கழகத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு குடும்பமும் சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வழிகாட்டும் குடும்பமாகும்
அந்த வரிசையில் மறைந்தும் பல மருத்துவ மாணவர்களுக்கு கல்வி பயில வழிகாட்டியாக விளங்கும் வகையில் ஏற்கெனவே மறைந்த வசந்தம் இராமச்சந்திரன் உடலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது
அதேபோல தற்போது மறைந்த ரங்கநாயகி அம்மையார் உடலும் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு பயன்படும் வகையில் உடற்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.