செவ்வியல் இசைஞர் டி.எம்.கிருஷ்ணா
இவர் தான் வாழ்கிற சூழலையே கேள்விக்குட்படுத்தி யவர்; அதனால் எதிர்ப்புகள் வந்தன; வருகின்றன. ஆனாலும், எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருப்பவர்!
உண்மை இருக்கும் இடத்தில் கேள்விகள் பிறக்கும் என்பவர் இவர்! கேள்விக்கு அப்பாற்பட்டவர்களையும் நோக்கி இவரது கேள்விகள் எழுந்து நிற்கின்றன. கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியை பிராமணியம் விழுங்கிவிட்டது என்றும் கட்டுரை எழுதியவர்!
ஆம், இவர் ஒரு கலகக்காரர்?
பெயர் நாமறிந்ததுதான். செவ்வியல் இசைஞர் டி.எம்.கிருஷ்ணா.
”தியாகராஜரும் வேண்டும்; பெரியாரும் வேண்டும்; அம்பேத்கரும் வேண்டும். அனைவரும் சேர்ந்ததுதானே சமூகம்? அதுதானே இசைக்கு அழகு!” என்கிறார்.
பேச்சளவில் அல்ல, செயலிலும் செய்து காட்டினார்.
சமூகத்திற்கு சரியென்று பட்டதை சொல்வதற்குத் தயங்காதவர். எதிர்ப்புகளால் மார்கழி சீசனையே புறக்கணித்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர், அங்கிருந்தே அழைப்பு வந்தது. பங்கேற்று, அங்கும் ”மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான்” என்றே பாடினார்.
கச்சேரியின் உச்சமாக, ”சுதந்திரம் வேண்டும்; நினைத்ததை பேச; நினைத்தனை எழுத; நினைத்ததை பாட” என்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பாடலைப் பாடினார். மக்கள் அளித்த அதிரடியான வரவேற்பு மியூசிக் அகாடமியே அதுவரை காணாதது.
செவ்வியல் இசைத்துறையில் இவர் ஆற்றி வரும் பங்கையும். அதை அனைவருக்குமானதாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் பாராட்டும் வகையில் 19.10.2024 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 32 ஆம் பட்டமளிப்பு விழாவில், வேந்தர் கி.வீரமணி அவர்களால் சிறந்த கருநாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என்ற மதிப்பீட்டில், ”மதிப்புறு முனைவர் பட்டம்” வழங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.
இன்னமும் திராவிடர் கழகம் இனவாத அமைப்பு என்று சிலர் குதர்க்கம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மனிதத்துக்கு ஆதிக்கவாத தத்துவங்கள் தான் எதிரியே தவிர, தனிநபர்கள் அல்ல!
இப்படிப்பட்ட ஒரு ஆரோக்கியமான உரையாடலைத் தான் மதிப்புறு முனைவர் டி.எம்.கிருஷ்ணாவும் விரும்புகிறார். அது ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. போக வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது. அந்தக் கரடுமுரடான பாதைகளை ராஜபாட்டை ஆக்கும் பணிகளைத்தான் தந்தை பெரியார் துவக்கி வைத்தார். அதைத் தொடர்கிறார் வேந்தர் கி. வீரமணி அவர்கள். தொடரட்டும் இந்த ஆரோக்கியமான உரையாடலும், பயணமும்!
செவ்வியல் இசை என்பது ஒரு சிறு கூட்டுக்குள் அடைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. சிறகு விரித்து பல்வேறு இடங்களுக்கும் பயணிக்கட்டும் என்று, செவ்வியல் இசையை மக்கள் இசையாக மாற்றிக்கொண்டிருக்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு “மக்களிசை மாண்பாளர்” என்ற சிறப்பினைச் செய்து மகிழ்கிறது தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்.
தோழர் ஜெயகோபால்
1947 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்தவர் தோழர் ஜெயகோபால். இவர் தனது 16 ஆம் வயதிலேயே ராபர்ட் கிரீன் இங்கர்சால், சார்லஸ் பிராட்லா, டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை நூலகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்.
பெற்றோர்கள் கடைப்பிடித்து வந்த ஜாதி, தீண்டாமை நடைமுறைகளே, இவரை அவற்றுக்கு எதிரானவராக மாற்றியிருக்கிறது. இவர் 1972 இல் இந்திய நாத்திக சங்கம் (Atheist Society of India) எனும் நாத்திக சங்கத் தைத் தொடங்கி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவர். 2004 இல் Scientific Student Federation என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களிடையே பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை உருவாக்க அரும் பாடுபட்டவர்.
“Nasthika Yugam”, ”The Age of Atheism” எனும் இதழ்களை நடத்தியவர். இவருடைய எழுத்துகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
1995 இல் DR. AMBETKAR CHETNA AWARD, 2008 இல் தெலுங்கானா மாநிலத்தின் “LITERARY AWARD ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
”பெரியார் நமக்காகப் பிறந்தார்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பெரியாரை பிறமொழி பேசும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர். பெரியாரை படிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்றுக்கொண்டேன் என்று பெருமிததோடு சொல்கிறவர்.
அதனாலேயே விசாகபட்டினம் நகரத்தில் உள்ள சிறுபான்மையினர் அமைப்பு சார்பில் இவருக்கு, “Telugu Periyar” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதில், “Periyar was the Greatesr Atheist and Social Reformer of the 20th century who was hailed by the UNESCO as the Socrates of South East Asia” என்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது.
உச்சகட்டமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நன்கொடையாக அளித்த, தந்தை பெரியாரின் முழு உருவ வெண்கல சிலையை விசாகபட்டினத்தில் நிறுவி, ஆந்திராவில் முதல் பெரியார் சிலையை நிறுவியவர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றவர்.
தன்னால் இயன்றவரை பகுத்தறிவு, இனவுணர்வுக் கருத்துகளை மக்களிடம் ஏராளமாக கொண்டு சேர்த்தவர். இன்றைய ஆந்திரா, தெலுங்கானா என்ற இரண்டு மாநில இளைஞர்களையும் ஈர்த்தவர். அப்படிப்பட்ட ஜெயகோபால் 7.2.2024 அன்று, உடல் நலிவு காரணமாக இயற்கை எய்தினார்.
அவரது அயராத பகுத்தறிவுத் தொண்டைப் பாராட்டும் வண்ணம் ”POSTHUMOUS AWARD” எனும் முறையில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான, “பெரியார் விருது” வழங்கி, அவரைப் பெருமைப்படுத்தி, பேருவகை கொள்கிறது.
திரைக் கலைஞர் தோழர் மாரிமுத்து
இயல்பான நடிப்பு; மேற்குத் தொடர்ச்சி மலையின் வாசம் தவழும் வசன உச்சரிப்பு; ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஏதோவொரு உறவுக்காரரின் சாயலை ஒத்த பண்பு நலன்களுடன் அவர் வகித்த அந்தக் கதாபாத்திரம், குடும்பம் குடும்பமாக கொண்டுபோய் அவரைச் சேர்த்தது.
இயக்குநர்! நடிகர்! பின்னணிக்குரல் கலைஞர் தோழர் மாரிமுத்து.
1966 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் வருசநாட்டில் பிறந்தவர் மாரிமுத்து. 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ”ஆசை” படம் மூலம் உதவி இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
இயக்குநர் வசந்தைத் தொடர்ந்து ராஜ்கிரண், மணிரத்னம், எஸ்.ஜே.சூரியா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2004 இல் இணை இயக்குநர்! 2008 இல் ”கண்ணும் கண்ணும்”, ”புலிவால்” ஆகிய திரைப்படங்களின் இயக்குநர்!
திரைப்பட இயக்குதல் துறையிலிருந்து அடுத்தடுத்த காலகட்டங்களில் அவருடைய நடிப்பாற்றல் பலரையும் ஈர்த்தது. திரைப்படங்களில் மிக முக்கியமான குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்துவந்த மாரிமுத்துவின் அடையாளம் இயக்குநர் என்பதிலிருந்து நடிகர் என்பதாக மாறிவிட்டது. திரைப்படங்களைத் தொடர்ந்து அன்றாடம் மக்கள் வீடுகளில் சென்று சேரும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடிகர் மாரிமுத்து நடிக்கத் தொடங்கியது அவரை இன்னும் வெகுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.
புகழ் வருகிற போது கொள்கைகளை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு புகழ் வெளிச்சத்தில் தங்களை ஒளித்துக் கொள்பவர்கள் போல் அல்லாமல், தனது பகுத்தறிவுச் சிந்தனையை ஒவ்வொரு நேர்காணலிலும் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை இயக்குநர், நடிகர் மாரிமுத்து.
அப்படித்தான் ஒரு முறை ஒரு தனியார் தொலைக் காட்சியில், ஜோதிடம் உண்மையா? பொய்யா? என்றொரு நிகழ்ச்சியில், ”ஜோதிடம் பொய், கடவுள் இல்லை” என்று துடிப்புடன் பேசியிருந்தார். கோபப்பட்டு, கொந்தளித்து அவரிடம் எதிர் சவால் விட்ட எந்த ஜோசியரும் அவரது இறப்பு இன்ன தேதியில் நிகழும் என்பதைச் சொல்லவில்லை. பல்வேறு உடல்நலச் சிக்கல்களாலும், தொடர் பணிகளாலும் ”இதய அடைப்பு” காரணமாக அவர் மறைவுற்ற போதும், எதிர்த்து நின்ற ஜோதிடர்களால் கூட இறப்புத் தேதியை எவரும் சொல்லமுடியாது என்ற தன் பகுத்தறிவுச் செய்தியை, தன் கடைசிப் பிரச்சாரமாக செய்துவிட்டு மறைந்தார் நடிகர், இயக்குநர் மாரிமுத்து.
அவரது மறைவு அவரது குடும்பத்தார்; திரையுலகத் தாரைப் போலவே பகுத்தறிவாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. அதுவரை நேரில் சந்தித்தோ, பேசியோ, பழக்கமோ இல்லாத திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், மாரிமுத்துவின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
அவருடைய பகுத்தறிவுச் சிந்தனையையும், அதைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் பாங்கையும், திரைத்துறையில் அவர் ஆற்றி வரும் சாதனைகளையும் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு பெரியார் விருது வழங்க வேண்டும் என்று அதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த முடிவை மாற்றிக்கொள்ளாமல் அவருடைய மறைவுக்குப் பிறகானாலும் அந்தப்பெருமை அவரைச் சேரவேண்டும் என்று அதே இடத்தில் செய்தியாளர்களிடம் அறிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.
இதோ, இன்று தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால், பகுத்தறிவுத் திரைக் கலைஞர் மாரிமுத்துவிற்கு 2025 ஆம் ஆண்டுக்கான ”பெரியார் விருது” வழங்கி, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கப்படுகிறது.
வாழ்க! பகுத்தறிவுத் திரைக் கலைஞர் மாரிமுத்து!
கென்னித்ராஜ் அன்பு
1990 களில் பஞ்சம் பிழைக்க சென்னைக்கு குடி பெயர்ந்த குடும்பம் இவருடையது. படிக்காத அப்பா? ஆகவே, இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதெல்லாம் பசிக்குத் தெரியுமா? சில நாட்கள் கையில் இருப்பதை விற்று சாப்பிட்டிருக்கிறார்கள்.
பிறகு? ஒருவழியாக அப்பாவுக்கு டிரைனேஜ் கிளீன் செய்யும் வேலை கிடைத்து, ஒரு வேளை சாப்பாடு கிடைத்தது. இரண்டாவது வேளை சாப்பாட்டுக்காக பள்ளிக்கூடம் சென்றவர், அதனாலேயே வென்றவர்!
அவர் தான் இந்த கென்னித்ராஜ் அன்பு!
சிறுவயதில் ஒருநாள் அப்பாவிடம், “ஏம்பா இந்த நாத்தம் புடிச்ச வேலையை செய்யறே?” என்று கேட்டிருக்கிறார். “நான் படிக்கலடா அதனால இந்த வேலைதான் கிடைச்சது. நீயாவது நல்லா படிச்சுடுடா” என்று கண்கலங்கியிருக்கிறார். இந்த ஒரு பதில்தான் இவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கிறது. கல்விதான் தன்னைக் காப்பாற்றும் என்று உணர்ந்தார்! படித்தார்!
பள்ளிக்கல்வி முடித்துவிட்டு, ”அப்பா இன்ஜினியரிங் படிக்கப் போகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ”ப்ளார்” என்று கன்னம் பழுக்க இவரை அடித்துவிட்டு, ”காசில்லாம எப்படி?” என்று அப்பா அழுதிருக்கிறார்.
இந்தத் தடையைத் தாண்ட கல்விக்கடன் கிடைத்தது.
பிறகென்ன? இவர் விரும்பிய ரோபோட்டிக்ஸ் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். உலக அளவில் இவரது கண்டு பிடிப்புகளுக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதெல்லாம் யாருக்குப் பயன்படுகிறது? என்று சிந்தித்தார்.
அப்போதுதான் “அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்தால் சாக்கடை அள்ளுவதற்கும் இயந்திரம் வந்துவிடும்” என்று தந்தை பெரியார் சொன்னது சட்டென்று இவரது நினைவுக்கு வந்திருக்கிறது.
இதையெல்லாம் செய்ய முடியாத படிப்போ, அறிவோ பயனற்றது என்று முடிவுக்கு வந்தார். அதுவரை செய்து வந்த பணிகளை உதறித்தள்ளிவிட்டு மீண்டும் மூன்று ஆண்டுகள் படித்தார். விளைவு?
2018 இல் மலக்குழி மரணங்களைத் தடுக்கும் விதமாக விசவாயு இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து சொல்லும் கருவியை கண்டுபிடித்தார். அப்பா செய்து வந்த வேலையின் தாக்கம் இது!
பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க இணைய வசதி இல்லாமலும் அவர்களைத் தேட, ஜிபிஎஸ் டிராக்கிங் கருவியை கண்டுபிடித்தார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு காஷ்மீர் இசுலாமியச் சிறுமி ஆசிபா உட்பட எத்தனை எத்தனை பாலியல் கொடூரங்கள் நடந்திருக்கின்றன. அதன் தாக்கம் தான் இது!
நீட் என்ற கொடூரத்திற்கு தற்காலிகத் தீர்வாக, 2020 இல் 5 அடி உயரத்தில் ”கிளாரா” என்று ரோபோவைத் தயாரித்து, நீட் சிலபஸ்சை அதில் உள்ளீடு செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். அரியலூர் அருமைத் தங்கை அனிதாவின் தாக்கம் இது!
கண்டுபிடிப்புகளை எல்லாம் இலவசமாக கொடுத்ததால் இவர் வீழ்ந்து விடவில்லை. மாறாக ”டிரான்சென் டைனமிக்ஸ்” என்ற ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். இந்த சாதனை நிகழ்ந்தது எப்படி?
கென்னித்ராஜ் அன்பு என்ற, தளிர் பற்றிப் படர்வதற்கு கொழு கொம்பில்லாமல் தவித்த போது, திராவிடர் இயக்கத்தின் சமூகநீதி என்ற கொம்பு கிடைத்திருக்கிறது. அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு பற்றிப் படர்ந்திருக்கிறார். இன்று திராவிடர் இயக்கத்தின் விளைச்சலாக ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். திராவிடர் இயக்கத்தின் விளைச்சலான கென்னித்ராஜ் அன்பு அவர்களுக்கு தாயன்புடன், ”தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்” 2025 ஆம் ஆண்டுக்கான ”தந்தை பெரியார் விருதை” வழங்கி இறும்பூது எய்துகிறது.
திரைக் கலைஞர் தோழர் ரோகிணி
1974 இல் 5 வயதில் “ஹாரத்தி” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். அதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக மிளிர்ந்தவர். பின்னாளில் படத்தின் கதாநாயகியாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல ஆண்டுகள் முக்கிய திரைப்படங்களில் மிகச்சிறப்பாக நடித்தவர். தமிழ்நாட்டின் முதன்மை இயக்குநர்களான பாலுமகேந்திரா, பாலச்சந்தர், மணிரத்னம், பரதன், பத்மராஜன் உள்ளிட்டோருடன் பயணித்தவர். அன்று அவரது அடையாளம் நடிகை ரோகிணி; இன்று தோழர் ரோகிணி! நடிகராக இருந்து 1989 முதல் டப்பிங் கலைஞராக பரிணமித்தார். முதல் படம் மணிரத்னத்தின் ”கீதாஞ்சலி”யைத் தொடர்ந்து ”இருவர்”, ”ராவணன்” படங்களில் நடிகை அஸ்வர்யா ராய்க்குக் குரல் கொடுத்தார்.
அதுமட்டுமல்ல, இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனின் ”பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தில் இடம் பெற்றிருந்த ”உனக்குள் நானே” பாடலை எழுதியது தோழர் ரோகிணி தான். அந்தப் பாடல் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து, ”மாலைப் பொழுதின் மயக்கத்திலே” படத்தின் அனைத்து பாடல்களையும் இவரே எழுதியிருந்தார். மலையாள நடிகர் நெடுமுடி வேணுவை சந்தித்த பிறகு இவருக்கு இயக்குநராக வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது.
குணச்சித்திர கதாபாத்திரமான ”மகளிர் மட்டும்” பொன்னம்மா, ”விருமாண்டி” ஏஞ்சலா காத்தமுத்து கேரக்டர்கள் பெரிதும் பேசப்பட்டன. ”பாகுபலி” படத்தின் நாயகனை எடுத்து வளர்த்த தாய், சங்கா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். சபனா ஆஸ்மி, நந்திதா தாஸ் போன்றவர்கள் வரிசையில் பகட்டில்லாமல் சாமான்யமாக திரையில் தோன்றுகிற அளவுக்கு திரைப்படத் துறையில் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். ”ஸ்திரி” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர்.
இதுதவிர, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றையும் தொகுத்து வழங்கியதோடு, சில நாடகங்களையும் எழுதியிருக்கிறார். மேலும், Silent Hues என்ற பெயரில் தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார்.
இவர் நடித்து OTT தளத்துல நேரடியாக வெளியான ”விட்னெஸ்” படம் மிகவும் முக்கியமானது. காரணம், மலக்குழியில் தனது மகனைப் பறிகொடுத்து விட்டு அதற்காக நீதிகேட்டு போராடுகிற இந்திராணி என்கிற அம்மா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதன் தாக்கத்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு மலம் அள்ளுவது பற்றி, ”வாசனை” என்கிற பெயரில் மேடை நாடகம் ஒன்றையும் அரங்கேற்றியிருக்கிறார்.
அப்பாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் புத்தகங்களை படித்திருக்கிறார். அதன்பிறகு தனக்குள் புதுப்புது வாசல்கள் திறந்ததை உணர்ந்திருக்கிறார். அந்த வாசலில் நுழைந்தவர் இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
கேரள திரைப்படத்துறையில் பாலியல் தொல்லை குறித்து நீதியரசர் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், ‘விசாகா’ கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக தோழர் ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆம், தோழர் ரோகிணி! இதுதான், இவருடைய அடையாளம்! ஜாதி, மத, பாலியல், பொருளாதார பேதங்களுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிறவர்.
இப்படி நடிகர், பின்னணிக் குரல் கலைஞர், எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், குறும்பட இயக்குநர், சமூக செயல்பாட்டாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பல்துறை வித்தகராக சிறந்து விளங்கி, தந்தை பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணாகவும் திகழ்கிற தோழர் ரோகிணி அவர்களுக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 2025 ஆம் ஆண்டுக்கான ”தந்தை பெரியார் விருது” வழங்கி மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.