“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்!” (1028)
தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்த குறள் இது. தன்னலம் கருதாது தன்மானம் பாராது தன் வாழ்நாளெல்லாம் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்களாக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களுக்கு ஊக்கமூட்டிய அருமருந்தாக இந்தக் குறள் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
“தன் குடியினை உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்து கொண்டு மானத்தையும் கருதுவாரானால் குடி கெடும்,
ஆதலால் அவருக்கு கால நியதி இல்லை” என்று உரையாசிரியர் பரிமேலழகர் அவர்கள் பொருள் கூறுவார்.
மேலும் மானம் கருதுதல் என்ற சொல்லாடலுக்கு
“இக்குடியில் உள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல்” என்றும் பொருள் கூறுவார்.
மானம் கருதுதல் என்பதற்கு “பகைவரின் கல்லடிகளையும் சொல்லடிகளையும் பொறுத்துக் கொள்ளாமையுமாம்” என்று பாவாணர் அவர்கள் மேலும் விரித்துக் கூறுவார்.
“திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, இந்த மக்களை, மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே பணி; அந்தத் தொண்டை நான் ஏன் என்மேல் போட்டுக் கொள்கிறேன்? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?, என்று நீங்கள் கேட்கலாம். வேறு எவரும் செய்ய முன்வராததாலேயே நான் செய்கிறேன்! எனக்கு அந்த ஒரு தகுதியே போதும்”
என்று தன் வாழ்நாள் எல்லாம் தமிழர்களின் இழிவைப் போக்குவதையும் அவர்களுடைய தன்மானத்தைப் பேணுவதையும் குறிக்கோளாகக் கொண்டு தன்னலமில்லாத் தொண்டாற்றிய தந்தை பெரியார் அவர்கள் இந்த தொண்டைச் செய்வதற்குத் தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று விளக்கும் முகமாக மேற்சொன்ன கருத்தினைப் பதிவு செய்தார்.
இந்தக் குறிக்கோளை நோக்கித் தனது செயல் திட்டங்களை வகுத்துக் களத்தில் நின்று செயலாற்றிய தந்தை பெரியார் அவர்கள் இதன் பயனாகத் தனது தன்மானத்திற்கு ஏற்படும் இழுக்கினைத் தன் மீது பகைவர்கள் பாராட்டும் பகைமையினை அவர்கள் வீசுகின்ற சொற்கணைகளை ஒரு பொருட்டாக என்றைக்கும் கருதியவர் இல்லை. ஏனென்றால் தனது தன்மானத்தைப் பொருட்டாய்க் கருதிச் செயல்படாது குன்றினால் தனது குறிக்கோளை அடைய இயலாமல் போகலாம் என்று தந்தை பெரியார் அவர்கள் கருதியதன் விளைவு தான் அவருடைய தன்மானம் கருதாத் தொண்டறமாகும்.
தமிழர்களில் பல்லோரும் தன்னலம் போற்றுவாராகத் தன் வளத்தினை பெருக்குவாராகச் செயல்பட்டுக் கொண்டு இன்புற்று இருந்த வேளையிலே இந்தத் தொல்லை தருகின்ற வேலையைத் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு தான் ஏன் துன்புற வேண்டும் என்று என்றைக்கும் தந்தை பெரியார் அவர்கள் எண்ணியதில்லை. இன்னும் சொல்லப் போனால்
வேறு யாரும் எண்ணித் துணியாத இந்தக் காரியத்தைத் தனது பொறுப்பாகத் தலை மேற் சுமந்து தொண்டூழியம் செய்த பெருந்தகைதான் தந்தை பெரியார் அவர்கள்.
ஈரோட்டில் செல்வக்குடியிலே பிறந்தவர்தான் தந்தை பெரியார். பொருள் தேடி அலையும் வாழ்க்கை முறையை அவர் தனது வாழ்நாளில் கண்டதும் இல்லை கொண்டதும் இல்லை. அப்போது நிலவிய ஜாதிய அமைப்பிலும் இடைநிலைச் ஜாதியிலே பிறந்தவர். மானிடத்தின் இருபாலுள்ளும் ஆதிக்கம் செலுத்தும் ஆணினத்தின் அங்கமாகப் பிறந்தவர்.
ஈரோட்டு நகர் மன்றத் தலைவராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இன்னும் இது போலப் பல பொறுப்புகள் தன்னைத் தேடி வந்து தாள் பணிந்து கிடக்கத் தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் தான் தலைவர் பெரியார் அவர்கள்.
செல்வத்தாலும் சமூகத்தில் தான் அடைந்திருந்த உயர்நிலையாலும் கொண்ட பதவிகளாலும் புகழெனும் கோபுர உச்சியில் அமர்ந்திருந்தாலும் அவரது பார்வை எல்லாம் தரை நோக்கியே இருந்தது. இந்தச் சமூகத்தில் சாமானியர்கள் படும் துயரங்களை எண்ணி அவரது நெஞ்சம் கனத்தது. முறையில்லாத மதநெறியும் ஜாதிநெறியும் தீண்டாமை என்னும் தீப்பந்தைக் கையில் ஏந்தி மக்களின் மாண்பினைத் தீய்த்தழித்த கொடுஞ்செயல்களும் கண்டு குமுறும் எரிமலையாக அவரது நெஞ்சம் கனன்றது.
எல்லா வளங்களையும் நலங்களையும் தன் வாழ்வில் பெற்றும் தான் இன்புற்றுச் சுகித்திருக்க எண்ணாது இந்த வாய்ப்புகள் எல்லாம் கிடைக்காமல் சமூகத்தில் துன்பப்படும் தமிழர்களின் நல்வாழ்விற்காகச் சுயமரியாதைக்காகத் தனது சுகபோகங்களை யாரும் கேட்காது தானே துறந்த தன்னல மறுப்பாளர்தான் தந்தை பெரியார் அவர்கள். தமிழினத்தில் மற்றோரெல்லாம் இன்புற்று சுகித்திருக்கத் தான் மட்டும் ஏன் இந்தக் கடும் பணியிலே தன்னை ஈடுபடுத்தித் துன்புற வேண்டும் என்ற சிந்தனை அணுவளவும் இல்லாதவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
இந்தப் பின்னணியிலே தந்தை பெரியார் அவர்களுடைய செயல்பாட்டையும் குடிசெய்வாருக்கு வள்ளுவர் சொன்ன இலக்கணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பொருத்தப்பாடு மிகுந்த வியப்பாக உள்ளது.
தந்தை பெரியார் அவர்கள் இந்தத் திருக்குறளைப் படித்து அதன் கருத்தைச் செரித்து அதன் வழிகாட்டலில் தனது செயல்பாட்டை அமைத்துக் கொண்டவர் இல்லை. தந்தை பெரியார் அவர்கள் ஒரு சுய சிந்தனையாளர். குடிநலம் ஓம்பித் தொண்டறம் செய்வார் எப்படிச் செயல்பட வேண்டும் என்று தானே சிந்தித்துத் தனது செயல் திட்டத்தை உருவாக்கியவர்.
அதைப்போலவே திருவள்ளுவரின் இந்தக் குறளின்படியும் இந்தக் குறளுக்கு உரை செய்த பரிமேலழகர் அவர்களின் விளக்கத்தின் படியும் அய்யா பாவாணர் அவர்களின் விளக்கத்தின்படியும் குடி செய்யும் தொண்டர் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்று உரைத்த பண்புகள் அனைத்தும் தந்தை பெரியார் இடத்தில் அமைந்திருந்தது என்பதும் பெரும் வியப்பாகும்.
மேன்மக்கள் ஒத்தது போல் சிந்திப்பார்கள் என்ற கூற்றுக்கு இலக்கணமாக வள்ளுவப் பெருந்தகையும் தந்தை பெரியார் அவர்களும் நமக்கு சான்றாக இருக்கின்றார்கள் என்று சொல்வதன்றி வேறென்ன சொல்வது?
இத்தகைய அருங்குணம் கொண்ட தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பணியோ அரும் பணியாகும். அரும் பணி என்றால் என்ன? அதை யார் ஆற்றுவார்? என்று கூற வந்த வள்ளுவர்
“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்” (975)
“பெருமைக்கு ஏதுவான பண்பை இயற்கையாக உடையவர் பிறரால் செயற்கரிய நற்செயல்களை நெறிப்படி செய்து முடிப்பார்” என்று அய்யா பாவாணர் அவர்கள் இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்லுவார்.
தந்தை பெரியார் அவர்கள் பிறர் செய்ய மறந்த மறுத்த செயல்களைத் தொண்டறமாகக் கருதிச் செய்து மகிழ்ந்து தனது செயல்பாட்டால் அழியாப் பெருமை பெற்றவர். அவர் செல்வந்தராக இருக்கலாம் உயர் பதவிகளை வகித்தவராக இருக்கலாம். ஆனால், அவர் அடைந்த பெருமை என்பது அவரது பிறப்பினால் அல்ல; கொண்ட செல்வத்தால் அல்ல; ஏற்ற பதவிகளால் அல்ல. அவருடைய தன்னலங்கருதாத் தொண்டறத்தால்தான் வாய்த்தது.
எனவே, பெருமை தரக் கூடிய செயல்பாட்டைத் தனது வழமையாகக் கொண்டவர்கள் அருஞ் செயல்களைப் படைக்கும் ஆற்றல் உடையவராகத் திகழ்வார் என்று வள்ளுவர் வரைந்த ஓவியத்திற்கு பெரிதும் பொருத்தப்பாடாகத் தோன்றுவது தந்தை பெரியார் அவர்களின் உருவப்படமே.
இத்தகைய பெருமைகளைச் சால்புகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு சான்றோராகத்தான் தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்தார்.
சான்றோர்களின் இயல்பினை விளக்க எண்ணி அவர்களின் குண நலன்களைச் சான்றாண்மை என்னும் ஒரு சொல்லில் அடக்கி தனி அதிகாரம் படைத்தவர் திருவள்ளுவர்.
பல நதிகள் வந்து கலந்து சங்கமிக்கத் தோன்றும் கடல் போல நற்குணங்கள் பல தஞ்சம் என வந்து தங்கும் சிந்தையைப் பெற்றோர் சான்றாண்மை உடையவராகக் கருதப்படுவார்.
இந்தச் சான்றாண்மை என்னும் அரிய குணத்தைத் தன் அகத்தே பெற்ற சான்றோர்களின் கடமை என்ன என்று பொதுவாகக் கூற வந்த வள்ளுவர் “நல்வினைகள் எல்லாம் அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய கடமையாகும்” என்று பொதுவாகக் கூறிச் சென்றார்.
மேலும் இன்னும் தெளிவாகக் கூற வேண்டி, சான்றாண்மை என்னும் அந்த அரிய பண்பின் உட்கூறுகளாக எவை எவை இருக்க வேண்டும் என்று விளக்கிக் கூற வந்த வள்ளுவர்,
“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்!” (983) என்று கூறுவார்.
தன்னலம் கருதாது பிறர் மேல் செலுத்தும் அன்பும்,
அல்லவை செய்ய அஞ்சி நாணும் உள்ளமும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உயிர்களிடத்தில் ஒப்புரவு பேணலும், கல்வி பெற வாய்ப்பின்றி வறுமை ஒன்றே துணையாய்க் கொண்டு சமூகத்தில் கீழ்நிலையில் வருந்தி வாழும் எளியவர்களின் மேல் காட்டும் சிறப்பு இரக்கமும், எவருக்கும் தீமை பயக்காத வாய்மையைத் தனது வாழ்வு நெறியாகக் கொண்டு இயங்குதலும் ஆகிய இந்த அய்ந்து தூண்களின் மேல் அமைக்கப்பட்டது தான் சான்றாண்மை என்னும் மாடமாகும் என்பார்.
இந்த அய்ம்பெரும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தந்தை பெரியார் அவர்களுடைய குண நலன்களோடு பொருத்திப் பார்க்குங்கால், சற்றும் வேறுபாடு இன்றி மிகக் கச்சிதமாகப் பொருந்தி வரச் சான்றாண்மை மிக்க சான்றோர்தான் தந்தை பெரியார் எனும் உண்மை புலப்படுகிறது.
தனது வாழ்நாளின் கடைசிப் பொதுக் கூட்டத்தில் பேசும் பொழுது தான் இறப்பதை எண்ணி வருந்தவில்லை என்றும் இன்னும் தமிழர்களின் இழிவினைப் போக்காமல் சூத்திரர்களாகவே இருக்க விட்டு விட்டுத் தான் இறந்து விடுவேனோ என்று அஞ்சுவதாகவும் பேசிய தந்தை பெரியார் அவர்களின் உள்ளக் கிடக்கை என்பது தமிழக மக்களின்பால் அவர் கொண்டிருந்த பேரன்பைக் காட்டும்.
மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதாயம் என்பது மனித சமூகத்தின் நலனுக்கு எதிரானது. என்றும் அந்தக் கொள்கையை ஏற்க அஞ்சி நாணும் உள்ளத்தைப் பெற்றவர் தான் தந்தை பெரியார் என்பது அவரது சமத்துவ சமூக நீதிக் கொள்கைகளால் அனைவரும் அறியத்தக்கது.
எல்லாருக்கும் எல்லாமும் வாய்க்கும் சமூக நிலையைக் கட்டியமைக்கத் தன் வாழ்நாள் எல்லாம் போராடி மனித குலத்தின் ஒப்புரவு வேண்டிய உன்னதர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
தான் செல்வராகப் பிறந்தும் ஏழைகளுக்காகவும் தான் ஒரு உயர்சாதியில் பிறந்தும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்காகவும் தான் ஒரு ஆணாகப் பிறந்தும் பெண்களுக்காகவும் மொத்தத்தில் தான் எதுவாக இல்லையோ அவர்களுக்காகப் போராடியவர் தான் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் அவர்களின் வாய் மற்றவர்களுக்காக பேசியது. கை மற்றவர்களுக்காக எழுதியது. தோள் மற்றவர்களின் சுமைகளைத் தூக்கிச் சுமந்தது. கால் துன்பப்பட்டோரின் இடங்களைத் தேடி நடந்தது. தன் வாழ்நாள் எல்லாம் அவருடைய உள்ளக் கடலில்
தமிழர்களின் இழிவினை எப்படிப் போக்குவது எப்படி அவர்களை உயர்ந்தவர்கள் ஆக்குவது என்கின்ற எண்ணமே அலை போல் அடித்துக் கொண்டே இருந்தது. தமிழர்களை நோக்கி அவர் பொழிந்த கருணைப் பார்வை என்பது அந்த வான் மழையினும் தன்மையால் வலியது. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்று பாராட்டப் பெரிதும் பொருத்தப்பாடாக வாழ்ந்து காட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாதவர் தந்தை பெரியார் அவர்கள். முன்னர் சொல்லியதை பின்னர் மறுத்துப் பேசும் பாங்கும் அவருக்கு இல்லை.
தனது பேச்சுக்கும் எழுத்துக்கும் செயலுக்கும் என்றும் அவர் எஜமானாகவே திகழ்ந்திருக்கின்றார். தனது பேச்சால் எழுத்தால் செயலால் வரும் விளைவுகளைச் சந்திக்க என்றும் அவர் தயங்கியது இல்லை. தான் செய்வது இன்னவென்று அறிந்து செய்பவர் தந்தை பெரியார் அவர்கள். வாய்மையின் தாய்மை தந்தை பெரியார் என்று சொன்னால் அது சற்றும் மிகை இல்லை.
இப்படி அருஞ்செயல்களைச் செய்யவல்ல சான்றாண்மை என்னும் அருங்குணத்தை உடைய சான்றோர்கள் முறை மாறிச் செய்தலும், நிலை மாறித் தாழ்தலும் காணாதவர்கள் என்று வள்ளுவப் பெருமானார் போற்றி மகிழ்வார்.
“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாமைக்கு
ஆழி எனப்படு வார்!” (989)
ஊழிக் காலத்தே இடம்பெயர்ந்து நிலைமாறும் நீரல்லார், நெஞ்சத்து ஆழியிலே சான்றாண்மை எனும் நற்பண்பைத் தேக்கிவைத்தார்.
தான் ஏற்ற கொள்கையில் இருந்து சிறிதளவும் வழுவாமல் தனது இலக்கை நோக்கிப் பயணம் செய்தவர் தான் தந்தை பெரியார். தான் வாழும் காலத்திலேயே தனது கொள்கைகள் வெற்றி பெற்றதைக் கண்டு மகிழ்ந்தவர்தான் தந்தை பெரியார். அவருடைய போராட்ட வாழ்விலே புறச்சூழல் எல்லாம் அவருக்கு எதிராக அணி திரண்டு வந்து எதிர் நின்ற போதிலும் தன் நிலையில் இருந்து சற்றும் இறங்காமலும் மேலும் தனது கொள்கையை இன்னும் அதிக அழுத்தத்துடன் கொண்டு செலுத்தியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலே குடிமக்களுக்காக இலக்கியம் செய்தவர் திருவள்ளுவர்தான் என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் அறுதியிட்டுக் கூறுவார்கள். மேலும் திருவள்ளுவருக்குப் பிறகு அவரைப் போலவே குடிமக்களின் நலன்களுக்காகவே எழுதியும் பேசியும் செயல்பட்டும் வாழ்ந்த ஒரு தலைவரைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் தந்தை பெரியார் ஒருவர்தான் என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் மேலும் கூறுவார்கள்.
கொண்டிருந்த பதவிகளை எல்லாம் துறந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிப் பின்பு அதனை நீதிக்கட்சியாக, திராவிடர் கழகமாக மாற்றித் தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தைத் தனது வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டு தமிழர்கள் அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டிச் சற்றும் சமரசம் இல்லாத கொள்கைப் பாதையில் சென்ற ஒரு போராளிதான் தந்தை பெரியார் அவர்கள்.
ஊழி பெயரினும் தான் பெயரா உறுதிப்பாட்டிற்கு உருவம் கொடுத்தவர்தான் தந்தை பெரியார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் காட்டிய உறுதியின் பயனாய்த்தான் தமிழர்கள் இன்று தன்மானம் காத்துத் தலைநிமிர்ந்து நடைபோடுகின்றனர்.
வாழ்க தந்தை பெரியாரின் தன்னலம் தன்மானங் கருதாத் தொண்டு!