தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

viduthalai
4 Min Read

8 இயக்கப் பொறுப்புகளில் 2025 ஆம் ஆண்டுக்கான அறிவிப்புகள்!
8 புதிய இளைய தலைமுறையினருக்கு இடம் தரவேண்டும்!
8 இடம்பெற்றவர்கள், பெறாதவர்கள் இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல!
வயது இடைவெளியின்றி காலத்திற்கேற்ப மாற்றம் – பிரச்சாரம் தேவை!
வாழ்த்துகள் – புதிய ஏற்பாடு ஒரு பயிற்சிக்களம்தான்!

காலத்திற்கேற்ப, இயக்க அமைப்புகளில், பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; இடம்பெற்றவர்கள் இடம் பெறாத வர்கள் இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களல்லர்; பொறுப் பாளர்களுக்கு வாழ்த்துகள் – இந்தப் புதிய ஏற்பாடு ஒரு பயிற்சிக்களம் தான் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

கழகக் கொள்கை உறவுகளுக்கு,

2025 ஆம் ஆண்டில் நுழைகிறது உலகம்; இந்தக் காலகட்டத்தில் ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்ற நமது இலக்கு, நாளும் பரவலாகி, தந்தை பெரியார் என்ற புரட்சித் தத்துவமும், அதன் கொள்கைப் பயணமும் எவராலும் தடுத்து நிறுத்தப்பட முடியாதது; காரணம், அறிவியலை, அதன் இயல்பான வேக வளர்ச்சியை மனித குலம் ஏற்கத்தான் வேண்டுமே தவிர, மாற்றிவிட முடியாது.

விலை கொடுத்து வாங்கப்பட்ட கைக்கூலிகள்!

ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியார் என்ற அந்தப் பகுத்தறிவுப் பகலவன் – உருவத்தால் மறைந்து, அவரது சுற்றுப்பயணம் முடித்துக் கொள்ளப்பட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும், அதன் வீச்சை, வேகத்தை, விவேகத்தை ஆரியத்தால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதால்தான் சில கைக்கூலிகளை விலை கொடுத்து வாங்கி, பெரியாரின் லட்சியப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுப் பார்க்கிறார்கள்.
நேரடியாக எதிர்த்து வென்றதாக வரலாறு கிடையாது, ஆரிய – பார்ப்பனீயத்திற்கு; இதிகாச புராண காலந்தொட்டு இன்றுவரை கூலிகள், காலிகளை ஏவிவிட்டுத்தான் முயன்று தோற்றுள்ளனர்!

முன்பு ‘திராவிட எதிர்ப்பு’ நடத்தியவர்கள் – வரலாற்றில் காணாமற் போன கூலிப்பட்டாளங்கள் ஏராளம்! அவ்வப்போது ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு வகைக் கூலிகளைப் பிடித்து, பெரியாரை எதிர்த்து, இறுதியில் சரணாகதி அல்லது இடம் தெரியாமல் போவார்கள்; இதுதான் தொடர் வரலாறு!

இதனால் நம்மை திசை திருப்ப முயலும் இந்த ஆரியச் சூழ்ச்சி குறித்து நன்கு உணர்த்தப்பட்டவர்கள் நாம், தந்தை பெரியாரால்!
எனவே, சிறிதும் கவனச் சிதறல் இன்றி, நமது இலட்சியப் பயணத்தை, ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்’ என்பதுடன், மானம் பார்க்காத பொதுத் தொண்டர்களாக நாம் மாறி, அய்யா தந்த அறிவுச் சுடரை அகிலத்திற்கும் கொண்டு சென்று, வென்று காட்டுவது நமது உயிர் மூச்சுக்கடமையல்லவா?

அதனால்தான் நாளும் வளர்ந்து வரும் நமது இயக்கக் கட்டுக்கோப்பை நாம் வெகுநேர்த்தியாகப் பாதுகாப்பதுடன், நமது கட்டுப்பாடான பணிகளால் வருங்காலத்தில் பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை என்ற ‘இராணுவம் போன்ற இந்த அமைப்பு’ என்று வளர்த்துக்கொண்டே செல்லவேண்டும்.

கொள்கைப் பிரச்சாரம் – அறவழிப் போராட்டமே நமது வழிமுறைகள்!

கொள்கைப் பிரச்சாரம், அதற்கான அறவழிப் போராட்டங்கள் இந்த இரண்டும்தான் அய்யா நமக்குக் கற்றுக் கொடுத்த வழிமுறைகள்.
அவைகூட பொது அமைதிக்குக் கேடு, பொதுச் சொத்துக்கு நாசம் விளைவித்தல், பொதுமக்களுக்குக் கேடு ஆகியவை இடம் பெறாது நம்மை வருத்திக் கொள்ளும் முறையிலே அமைப்பை வளர்த்தெடுத் திருக்கிறார்.

பிரச்சாரம், அறிவியல் மின்னணுவியல் என்ற எத்தகைய வளர்ச்சிக்கேற்பவும் நமது பிரச்சாரம் அமையவேண்டும்.
காலத்திற்கேற்ப மாறவும், வயது இடைவெளியின்றி இயக்கம் வளரவும் நாம் திட்டமிட்டு உழைக்கவேண்டும் – வருங்காலத்திலும்.
சென்ற ஆண்டு நமது நிகழ்வுகள் ஆரியத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு ‘வயிற்றில் புளியை’க் கரைத்துள்ளதால், புதிய கூலிப்படைகளைப் பிடித்து ஏவிவிடுகின்றனர்!

நமது பிரச்சாரப் பணி, எதிர்நீச்சல் பணி போன்றவற்றுடன், சீரிய களப் பணிகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.
கழகத் தொண்டர்களைப்பற்றி தந்தை பெரியார்!
‘‘எனது தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்’’ என்றார் நம் தலைவர். அந்தப் பக்குவத்தையும், முதிர்ச்சி முத்திரையையும் முதியவர், இளைஞர் என்ற, ஆண் – பெண் என்ற வேறுபாடின்றி ‘பெரியார் தொண்டர்கள்’ என்றால், செயல்வீரர்கள், வீராங்கனைகள் இளமை, முதுமை வேறுபாடின்றி செயல்! செயல்! என்ற வகை இராணுவக் கட்டுப்பாடு காக்கும் கருஞ்சட்டை வீரர் கோட்டம் என்று தக்க பயிற்சிகளை அவ்வப்போது தந்து, நாளும் மெருகேறிய பாசறையாக ஆக்கவே இளைஞர்களுக்கு வாய்ப்பளித்திடும் அதேநேரத்தில், அனுபவம் நிறைந்தவர்களின் ஒத்துழைப்பு கொண்ட நல்ல ஒருங்கிணைப்புடன், கட்டுப்பாட்டின் இலக்கணங்களாகத் திகழ்பவர்களையே சில மாற்றங்களுடன் இவ்வாண்டு இந்தப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.

பொறுப்புகளில் இடம்பெற்றவர்கள், இடம்பெறாத வர்கள் எவரும் இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; எல்லோரும் நம் குடும்பத்தின் இணையற்ற உறுப்பினர்களே! வாய்ப்புமூலம் இளையரை இரு கைநீட்டி முதியோர் வரவேற்கத் தயாராக உள்ளனர் என்பதைக் காட்டும் பொறுப்பாளர்கள் இவர்கள்.

புதிய ஏற்பாடு –
ஒரு பயிற்சிக் களம்தான்!

நம் இயக்கம் பதவிக்காக இல்லை; கடும் உழைப்பை நல்கும் தன்னலம் மறந்த பட்டாளம்!
வாழ்த்துகள்!

புதிய ஏற்பாடு ஒரு பயிற்சிக்களம்தான்!
அன்புடன்,

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
10.1.2025

Share This Article