தி.மு.க.வுக்கா தேசபக்திப் பாடம்? அமைச்சர் சிவசங்கர் கேள்வி

viduthalai
1 Min Read

சென்னை,ஜன.8- தி.மு.க. அரசுக்கு தேசபக்திப் பாடம் எடுக்க வேண்டாம் என ஆளுநர் ரவிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம்:

நாடகம்

தமிழ்நாடு சட்டப் பேரவையை, தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி நடந்து கொண்டார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளை மாற்றும் முயற்சியில், ஆளுநர் இறங்கினார்; அது நடக்கவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை முழுதும் விவரிக்கும் வகையில், ஆளுநர் உரை உள்ளது.
அதை வாசிக்கக்கூடாது என்பதற்காகவே, இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார்.
நாட்டுப் பண் பாடப்படவில்லை என, அதற்கு காரணம் சொல்லியிருக்கிறார்.

தேசபக்தி

தேசபக்தியை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது போல ஆளுநர் பேசுகிறார். தேச பக்தியில் தமிழ்நாட்டு மக்களை விஞ்சியவரல்ல அவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை இழந்தவர்கள் தமிழ்நாட்டில் ஏராளம்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் ஆளுநர், முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.

அவர்கள் எல்லாம், சட்டப் பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கும் முன்னரே நாட்டுப் பண்ணை பாட வேண்டும் என, எங்கும் சொல்லவில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட்டது. ஆனால், நாட்டுப் பண்ணையும் நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே பாட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஆளுநர் ரவி. தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த விழைகிறார். அப்படியொரு வாதத்தை வைத்து, சட்டப் பேரவையில் அரசியல் நாடகம் நடத்திய ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

தான் நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பதை மறந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட பெரியவர் என்ற சிந்தனையில் ரவி செயல்பட்டு வருகிறார். ‘ஆளுநர் ரவியே வெளியேறு’ என்று முழக்கமிடும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்.
தி.மு.க.,வுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தேச பக்தி பாடத்தை, ஆளுநர் எடுக்க வேண்டாம்.
சட்டப் பேரவையில் நாட்டுப் பண் பாடப்படும் வரை இருக்காமல், துவக்கத்திலேயே பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவிதான் தேசிய கீதத்தை அவமதித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *