மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை எதிர்த்து கிராம மக்கள் பேரணி! ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

viduthalai
3 Min Read

மதுரை, ஜன. 8- டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் மதுரைக்கு பேரணியாகப் புறப்பட்டு வந்து, தல்லாகுளம் அஞ்சல் அலுவலகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டங்ஸ்டன் கனிம சுரங்கம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அடங்கிய பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததன் பேரில் தனியார் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதற்கு மேலூர் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
்இந்நிலையில், முல்லை பெரியாறு மேலூர் பகுதி ஒருபோகப் பாசன விவசாயிகள் நலச்சங்கம், மேலூர் தொகுதி அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, பெண்கள் எழுச்சி இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு உழவர் சங்கம், டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.

பேரணி

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதையொட்டி மேலூர் நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்த வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

நேற்று காலை 10 மணி அளவில் மேலூர் தொகுதி முழுவதிலும் இருந்து விவசாயிகள், விவசாய சங்கத்தினர், கிராம மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் டிராக்டர்கள், வேன்கள், கார்கள், டூவீலர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் திரண்டனர்.
சுங்கச்சாவடியில் இருந்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தலைமையில் பேரணியாக செல்ல ஆயத்தமாகினர். அப்போது மதுரை எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடந்து செல்லாமல், வாகனங்களில் செல்லுமாறு காவல் துறையினர் வைத்த கோரிக்கையை போராட்டக் காரர்கள் ஏற்கவில்லை. காவல் துறையினரின் கட்டுப்பாட்டை மீறி, தடைகளை அகற்றிவிட்டு விவசாயிகள், கிராம மக்கள் பேரணியாக மதுரை நோக்கி புறப்பட்டனர். ஏராளமான வாகனங்களும் அணிவகுத்தன.

மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி, கலைஞர் கருணாநிதி நகர் வழியாக தல்லாகுளம் அஞ்சல் நிலையப் பகுதியை பேரணி அடைந்தது. அங்கு, டங்ஸ்டன் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் முழுமையாக ரத்து செய்யவில்லை என்றால் இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாறும் என அவர்கள் முழக்கமிட்டனர். இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது.

போக்குவரத்து பாதிப்பு

போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசும்போது, ‘ஒன்றிய அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடை செய்ய வேண்டும். இத்திட்டத்தை தடை செய்யாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்’ என்றனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்க தலைவர் எஸ்.ரத்தினவேல் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து பேசினர்.

இந்த போராட்டத்தால் மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து பாதித்தது. பிரதான சாலைகள் வழியாக பேரணி சென்றதால் வழிநெடுகிலும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதித்தது. தென்மண்டல அய்ஜி பிரேம்ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், எஸ்பி அரவிந்த் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *