நிதிஷ்குமாருக்கு லாலு அழைப்பு பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாறுமா?

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.3 தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) தலைமை வகிக்கிறது பாஜக. பீகாரில் என்டிஏவுக்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் தலைமை வகிக்கிறது. சுமார் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக பீகாரில் தொடர்கிறார் நிதிஷ். இடையில் அவர் மாறிய லாலு பிரசாத் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியிலும் நிதிஷ் குமாரே முதலமைச்சரானார்.
சட்டப் பேரவை தேர்தல்
பீகாரின் கடந்த பேரவை தேர்தலில் நிதிஷைவிட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், நிதிஷ் முதலமைச்சராக உள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பீகார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பாஜகவைச் சேர்ந்த வரை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ராஷ் டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி, நிதிஷுக்கு மெகா கூட் டணியின் கதவுகள் மூடப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனவரி 1-இல் லாலுவின் வாழ்விணையர் ராப்ரி தேவிக்கு பிறந்தநாள் வந்தது. இதற்காக பீகாரின் மேனாள் முதலமைச்சருமான ராப்ரிக்கு பாட்னாவில் விழா கொண்டாடினார் லாலு.

நிதிஷ்குமாருக்கு லாலு அழைப்பு
இந்த விழாவில் லாலு கூறும்போது, “பொதுமக்கள் மற்றும் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்காக எங்கள் கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வர வேண்டும். அவர் மீண்டும் மெகா கூட்டணியில் சேரவிரும்பினால் வரலாம்” என்றார்.
கடந்த 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், பீகாரில் அதன் கூட்டணிகளான அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) 12 மற்றும் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி 5 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒன்றியத்தில் ஆட்சி தொடர்கிறது. இந்நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் மெகா கூட்டணியில் இணைந்துவிட்டால் சட்டப் பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக மாறிவிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *