நிதி நிறுவனங்களில் 30 சதவீதம் அதிகரித்த தங்க நகை வாரா கடன்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.2- வங்கியில்லா நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியவா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தாமல் வாராக் கடனாளிகள் ஆவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

தனி நபா் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, குடும்பங்களில் அதிகரிக்கும் கடன் சுமை ஆகியவற்றை இந்தப் போக்கு உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
தங்க நகைகளின் மீது அடமானக் கடன் பெற்று, கெடு தேதிக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தி நகைகளை வாடிக்கையாளா்கள் மீட்க முடியாமல் போகும் போக்கு அதிகரித்துவருகிறது.

வாராக்கடன்

நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை, அத்தகைய தங்க நகை வாராக் கடன் மதிப்பு ரூ. 6,696 கோடியாக உள்ளது. இது, 2024 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம். அப்போது வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்த தங்க நகை வாராக் கடன் மதிப்பு ரூ.5,149 கோடியாக இருந்தது.

முந்தைய நிதியாண்டுகளில் இது மிதமாகத்தான் அதிகரித்து வந்தது. 2021-2022-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில் தங்க நகை வாராக் கடன் வளா்ச்சி வெறும் 14.6 சதவீதமாக இருந்தது.
வங்கிகளில் கடந்த 2024 மாா்ச் இறுதியில் ரூ.1,513 கோடியாக இருந்த தங்க நகை வாராக் கடன், 2024 ஜூன் இறுதியில் 62 சதவீதம் அதிகரித்து ரூ.2,445 கோடியாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் தங்க நகை வாராக் கடன் மதிப்பு வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ரூ.3,636 கோடியிலிருந்து ரூ.4,251 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *