சென்னை, டிச.30- தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஜனவரி 14, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக்கடைகளில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்குவது குறித்தும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளுக்கே சென்று சீட்டு (டோக்கன்) வழங்கவது தொடர்பாக சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
சுழற்சி முறையில்
அதில், டோக்கன் குடும்ப அட்டைதாரர்கள் 09.01.2025 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற சுழற்சி முறையில் (STAGGERING SYSTEM) விநியோகம் மேற்கொள்ள குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, கணக்கிடப்பட்டு தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில், அட்டைதாரர் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு சீட்டுகளை (டோக்கன்களை) விற்பனையாளர்கள் அட்டைதார்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும்.
முதல் நாள் முற்பகல் 100 பேருக்கும் பிற்பகல் 100 பேருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க எதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். இடவசதியைப் பொறுத்து, இரண்டாம் நாள் முதல் நாள்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
எனினும், பொங்கல் விழாவுக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நிறைவடையும் வகையில் டோக்கன்களில் தேதி குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும். தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும் விவரம். நாள் மற்றும் நேரம் நியாயவிலைக் கடை முன்பாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
கூடுதல் பணியாளர்கள்
அதிகளவு குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளில் குறிப்பாக 1500 குடும்ப அட்டைகளுக்கும் மேல் இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் விவரம் தொகுக்கப்பட்டு அக்கடைக்களுக்கு டோக்கன்கள் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகப்பணிக்கென கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக 1500 குடும்ப அட்டைகள் உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் இரண்டு பணியாளர்களும், 1500 க்கும் மேல் குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாயவிலைக் கடைகளில் மூன்று பணியாளர்களும் டோக்கன் விநியோகம் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம் போதிய அளவு பணியாளர்கள் முன் கூட்டியே நியமனம் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
காவல் பாதுகாப்பு
சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழக்கூடிய நியாயவிலைக் கடைகள், அதிக கூட்ட நெரிசல் நேரக் கூடிய நியாயவிலைக் கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அல்லது காவல் துறை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு போதிய காவல் பாதுகாப்பு பெறப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதிய அளவில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்படுவதனை உறுதி செய்வதுடன், உரிய தரத்துடன் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.