தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 33 விழுக்காடு அதிகம்

Viduthalai
1 Min Read

சென்னை, டிச.29 தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பைவிட 33 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக 1,187 மி.மீ. மழை பதிவுடன் நாகப்பட்டினம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் 1076 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் மூன்றாவது வாரம் தொடங்கி, டிசம்பா் இறுதி வரை வடகிழக்கு பருவமழை பெய்யும்.
நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வளிமண்டல சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஃபென்ஜால் புயல் உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 510 மி.மீ.யும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 500 மி.மீ.யும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 440 மி.மீ.யும் மழை பெய்தது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதாவது அக். 1 முதல் டிச.28 வரை இயல்பாக 438.9 மி.மீ. பெய்யும். நிகழாண்டில் 585.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 33 விழுக்காடு அதிகம் ஆகும்.

இதில் அதிகபட்சமாக நாகையில் 1,187 மி.மீ., மயிலாடுதுறையில் 922 மி.மீ. மற்றும் விழுப்புரத்தில் 874 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் இயல்பை விட 7 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
சென்னையில் நிகழாண்டில் இயல்பைவிட வடகிழக்குப் பருவமழை 35 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளது. வழக்கமாக, 799 மி.மீ. மழை பதிவாகும். நிகழாண்டில் 1076 மி.மீ. மழை பெய்துள்ளது வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *